Thursday, June 24, 2021

வலைக்குள் சிக்கிய மீன்

 4- முகநூல் நண்பன்

-----------------------

 அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியினால் ஏற்பட்ட மன அழுத்தம் அன்றைய இரவு வனஜாவை நீண்ட நேரம் ஆக்கிரமித்திருந்ததால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.அதன் காரணமாக விடியலில் சற்று ஆழ்ந்து உறங்கி விட்டாள்.

விழிப்பு வந்து பார்க்கையில் மணி 7-30 ஆகி இருந்தது. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள்..தன்னை யாராவது வந்து எழுப்பியிருக்கக் கூடாதா? என்று எண்ணியவாறே படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தாள்.

ஹாலில்..பத்மநாபனும், ரமேஷூம் அவரவர் கைகளில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருக்க..ப்ரியாவோ சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினையை தன் மடியில் வைத்து நண்பன் பாஸ்கரனுடன் chat செய்து கொண்டிருந்தாள்.

ப்ரியாவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவன் பாஸ்கர் எனும் இளைஞன்.

ஒருநாள் அவள் தன் முகநூலில் நண்பர்கள் இட்ட பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தி இன்பாக்ஸில் வந்தது.அது என்ன எனப் பார்த்தாள்.

Hi I am Bhaskar..என ஒருவன் செய்தி அனுப்பி இருந்தான்.

ஆர்வ மிகுதியால், அவனுக்கு ஒரு பதில் அனுப்பினால் என்னவாகிவிடப் போகிறது என அவ்ளும் பதிலுக்கு..

Hi..I am Priyaa...என பதில் அனுப்பினாள்.பின் ,"நீங்க என்ன பண்றீங்க?" என்றாள்.


"உன்னோட ச்சேட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.."

"ஐயோ..கடி தாங்கல"

"ஓகே..முதல்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே" என்றான் ஒருமையில்.

அப்படி எடுத்ததுமே அவன் ஒருமையில் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது."நான் காலேஜ்ல படிச்சுக் கிட்டு இருக்கேன்..ஆமாம் நீங்க..உங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே"

"போ ப்ரியா..உன் மேல கோபம்..நான் எப்படி உன்னை ஒருமையில சொன்னேன்..ஆனா..நீ பதிலுக்கு "ங்க"ன்னு சொல்ற.நீ..போ..ன்னே சொல்லு.நான்சிறுசேரியில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யறேன் 26 வயது இளைஞன்.மாச சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல.. என்னைப் பத்தின விவரம் போதுமா?" 

இப்படித்தான் அவர்களிடையே அன்று நட்பு ஆரம்பமானது.பின் தினமும் இருவரும் ச்சேட்டிலேயே உரையாடல்களைத் தொடர்ந்தார்கள்.ஒரு கட்டத்தில் பாஸ்கர்.."ப்ரியா ஐ லவ் யு" என்றான்.பின் என்ன..பழைய திரைப்படப் பாடல் ஒன்று போல.."அவன் காதலித்தான்..அவள் ஆதரித்தாள்"

அன்றும் காலையில் அவன் அழைத்திருந்தான்..

"குட் மார்னிங் ப்ரியா"

"குட் மார்னிங் "

"சொல்லிட்டியா"

"என்ன சொல்லணும்..யார் கிட்ட?"

"உன் அம்மாகிட்டத்தான்..நம்மைப்பற்றி.." 

"என்னன்னு சொல்லணும்?"

"நானும்..பாஸ்கரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்னு"

"ஐய்யய்யோ"

"என்ன ஐய்யய்யோ?"

"எங்கம்மாவுக்கு நான் ஃபிரண்ட்ஸ் கூட ஃபேஸ்புக்ல எல்லாம் பேசறதே..பிடிக்காது..அவங்கக் கிட்டப் போய் என் ஃபேஸ்புக் ஃபிரண்ட் பாஸ்கரை லவ் பண்றேன்னு சொன்னா..செருப்பு பிஞ்சுடும்.."

"இப்படி பயந்துக் கிட்டே இருந்தா..என்னிக்குத்தான் சொல்லப்போற?"

"கொஞ்ச நாள் போகட்டுமே.."

இந்நேரம்தான் படுக்கை அறையிலிருந்து பரபரப்புடன் வந்த வனஜா.."ப்ரியா..ஏய் ப்ரியா..காலைல இருந்து உருப்படியா என்ன செஞ்சே? எப்பப்பாரு லேப்டாப்தானா.உன்னாலதான் எந்த வேலையும் செய்ய முடியாது..குறைஞ்சது..கொஞ்சம் அசந்து தூங்கிட்ட என்னை எழுப்பக் கூடவா முடியாது?"

"அது வந்து.."என்றபடியே ..முகநூலிலிருந்து வெளியே வந்து விட்டு எழுந்து நின்றாள் ப்ரியா.

"என்ன அது வந்து..உன்னை மட்டுமில்ல..இப்படி தடிமாடு மாதிரி இருக்கிற இவங்களையும் சேர்த்துதான் சொல்றேன்"

மூவரும் தலை குனிந்து நிற்க..வனஜா பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

ரமேஷ் , பத்மநாபனைப் பார்த்து சிரிக்க..அவனோ.."டேய்..சிரிக்காதே..இப்படி சிரிச்சா..தடிமாடு கொம்பால குத்திடுவேன்" என்றான். 

  

"  



 

 


No comments:

Post a Comment