Monday, December 23, 2019

24 - காலச்சக்கரம்

காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது.

நம்மை கேட்டுக் கொண்டா சுழல்கிறது?

சுழலும் போதே..சில கசப்பான நிகழ்வுகள், சில சுவாரசியமான நினைவுகள்,சில வரவுகள், சில செலவுகள் என எல்லாவற்றினையும் உள்ளடக்கியபடியே சுழல்கிறது.

அந்த ஆண்டும் மழை பொய்த்ததால், பல ஏக்கர் நிலங்களில் பயிர்களும்..வாடி வைக்கோலாகப்போனது பூங்குளத்தில்.

ஏழை, பணக்காரன் என பாகுபாடு இன்றி அனத்துத் தர மக்களும் வறுமையின் பிடியில் சிக்கினர்.நாட்டில் பல விவசாயிகள் வறுமை தாங்காமல், கடனின் பிடியில் சிக்கித் தற்கொலை செய்து கொண்டனர்.பூங்குளம் விசாயிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

கவுண்டர்..அக்கிராமத்தின் முக்கியப் புள்ளி, வசதியானவர்..இவ்வளவு நாட்கள் வசதியுடன் வாழ்த்துவிட்டு, உணவுக்குக் கூட சிரமப்படும் நிலை வந்த போது தைரியத்துடன் எதிர்கொள்ள முடியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

சில விவசாயிகள்..தங்கள் நிலங்களை..கழுகுபோல காத்துக் கொண்டிருந்த மயில்வாகனன் போன்ற அரசியல்வாதிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு..வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.

நமக்கு முன்னால் ஒரு அத்தியாயத்தில் அறிமுகமாகியிருந்த சைக்கிள் கடை குப்பால், அவன் சாதியைச் சேர்ந்த மயில்வாகனனுக்கு இந்த விஷயங்களில் மிகவும் உதவி செய்து, அவரிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தான்.

பலர் நிலங்களை மயில்வாகனன் வளைத்துப் போட்டு இருந்தாலும், இடையில் தாமோதரன் நிலங்களும் இருந்ததால், அதையும் வளைத்துப் போட்டால்தான் தான் நினைக்கும் தொழிற்சாலையைக் கட்ட முடியும் என எண்ணி, ஒருநாள் குப்பாலை வரச்சொல்லி அவனிடம் பேசினான்.தேவைப்பட்டால் தாமோதரனைத் தீர்த்து கட்டவும் சொன்னான்.

"தலைவா..கிராமத்துல கட்சிக் கொடிக்கம்பம் நட்டு கட்சிக் கொடியை பறகக் வைத்த தாமோதரனே ..அதை வெட்டி வீழ்த்தியதை காரணம் காட்டி ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம்.அதில் வன்முறையைக் கிளப்பி விட்டு..தாமோதரனைத் தீர்த்துடுவோம்" என்றான் குப்பால்.

தலித் என்ற போர்வைக்குள் இருக்கும் தாமோதரனை நேருக்கு நேராக எதிர்த்தால் சாதி சண்டை நாடு முழுதும் வந்தாலும் வந்துவிடும் என எண்ணிய மயில்வாகனன் போராட்டத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், அதற்கு பதிலாக..தாமோதரனின் மகளுக்கு,ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டால், அந்த அவமானம் தாங்காமல், தாமோதரனைக் கொன்று விட்டு..தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி விடலாம் என திட்டமிட்டான்.

அதை உடனே செயல்படுத்த எண்ணி ஒரு கூலிப்படையை தஞ்சாவூருக்கு அனுப்பினான்.

ஒருநாள்..கற்பகம்...கல்லூரியிலிருந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.அப்போது நான்கு முரடர்கள் அவளை சுற்றிக் கொண்டு வம்புக்கு இழுத்தனர்.

அவளை இழுத்து..பக்கத்து புதர் ஒன்றில் தள்ளி..பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர்.அருகே இருந்த பூங்கா ஒன்றில்  அம்ர்ந்திருந்த வாஞ்சிநாதன்.."கற்பகம் இவ்வளவு நேரம் கல்லூரி முடிந்து திரும்பி இருக்க வேண்டுமே...இன்னமும் இந்த வழியாக வரவில்லையே" என்று எண்ணி பூங்காவிலிருந்து வெளியே வந்து சற்று நடந்தான்.

அப்போது அருகிலிருந்த புதரிலிருந்து,"காப்பாத்துங்க..காப்பாத்துங்க.." என்ற கற்பகத்தின் குரல் கேட்க..அந்த இடம் நோக்கி விரைந்தான்.

யாரோ ஆள் வரும் அரவம் கேட்க, முரடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

வாஞ்சியைப் பார்த்த கற்பகம், ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.அவளை அணைத்தவாறே, ஆறுதல் சொல்லியபடியே.அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதிவரை வந்தான் அவன்.

அடுத்தநாளே, பூங்குளம் சென்ற கற்பகம், தாமோதரனிடம் ந்டந்தவற்றைக் கூறினாள்.

இது அந்த மயில்வாகனன் வேலையாய்த்தான் இருக்கும் என சந்தேகித்த தாமோதரன், அவனை சந்தித்து பழி வாங்கத் தீர்மானித்தான்.

முன்னதாக, அழுது..அழுது..வீங்கிய முகத்துடன் மாடசாமி வண்டியில் வந்த கற்பகத்தைப் பார்த்த குப்பால்..மயில்வாகனைச் சந்தித்து விஷயத்தைக் கூற எண்ணி தன் சைக்கிள் கடையை மூடிவிட்டு..ஒரு சைக்கிளில் ஏறி அடுத்த ஊர் சென்றான்.



23 -பட்டடைக்கல்

பண்ணையாரும்,அர்ச்சகரும் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு பஞ்சாயத்தில் கூடினார்கள்.

மூக்கனின் மகன் செல்வத்தின் நாட்டிற்கான சேவையைப் பாராட்டியும், நாட்டுக்காக அவன் உயிர் நீத்ததற்குமான அஞ்சலிக் கூட்டமாக அது அமைந்தது.

மூக்கனும், அவனது மனைவி குருவம்மாவும் வந்திருந்தனர்.பஞ்சாயத்தார் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பண்ணையார் பேசுகையில்...

"நமது கிராமம் பூங்குளம் இன்று இந்தியா முழுதும் பேசப்படும் கிராமமாக ஆகிவிட்டது. அதற்குக் காரணமான  செல்வத்தை நம் கிராமம் பெற்றதற்கு நாம் மிகவும் பெருமிதம் அடைகிறோம்.மூக்கனுக்கும், அவனது மனைவிக்கும், அவர்கள் மகன் செல்வம் இறந்தது மாபெரும் இழப்பாகும். ஆனால் அந்தத் தாய், தந்தை நாட்டுக்காக தன் மகன் உயிர் விட்டான் என்பதை எண்ணி பெருமை அடையலாம்.இந்த பஞ்சாயத்து செல்வத்தைப் பெற்ற மூக்கனுக்கும், அவனது மனைவிக்கும் தங்கள் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது" என பேசி முடித்தார்.

அடுத்து, அர்ச்சகர் பேசினார்..

"திருவள்ளுவர் தனது திருக்குறளில் "தோன்றின் புகழோடு தோன்றுக..அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" எனக் கூறியுள்ளார்.நான் கூட இளம் வயதில் அது எப்படி தோன்றும் போதே புகழுடன் தோன்ற முடியும்? என நினைத்துள்ளேன்.பிறகுதான் அதற்கான அர்த்தம் புரிந்தது.

அதாவது ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபட நினைத்தால், அத்தொழிலில் ஈடுபட்டு புகழ் பெற்றவராகத் திகழ வேண்டும்.அது, நம்மால் முடியாது என்று தோன்றினால், அத் தொழிலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

நம் மூக்கனின் மகன் செல்வமும், சில கசப்பான காரணங்களால் இந்த ஊரை விட்டுப் போனான். போனவன் என்ன ஆனான் எனத் தெரியாது, மூக்கன் பல நாட்கள் என்னிடம்  புலம்பியுள்ளான்.ஆனால்..செல்வமோ..ராணுவத்தில் சேர்ந்ததுடன் நில்லாது..தன் உயிரைத் தந்துள்ளான்.செல்வம் தான் பிறவி எடுத்தன் பயனை நிரூபித்து புகழ் பெற்றுள்ளான்.நம் ஊரில் செல்வத்திற்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்..என இப்பஞ்சாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்:" என்றார்.

தாமோதரன், பண்ணையாரைப் பார்த்து, "ஐயா..நான் இரண்டு வார்த்தை பேசணும்" என்றான்.

பண்ணையார் "பேசு தாமோதரா" என்றார்.

"எல்லாரையும் கும்புட்டுக்கிறேன்..
மூக்கனின் மகன் செல்வம் இந்த ஊரைவிட்டுப் போனதற்கான உண்மையானக் காரணமாக நான் ஆகிவிட்டேன்...என நான் அப்பப்ப வருந்தியிருக்கேன்.உண்மையிலேயே, எந்த ஒரு அரசியல் கட்சியும் நம் கிராமத்தில் நுழையாத போது, என் சுயநலத்திற்காக, மயில்வாகனனின் கட்சிக் கொடிக்கம்பத்தை இந்த ஊரில் நட்டேன்.அதற்காக பஞ்சாயத்துக் கூடியபோது:இதனால் கிராமத்திற்கு தீங்கு வருமேயானால்..கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும்னு சொன்னாங்க' அன்னிக்கு இந்தப் பஞ்சாயத்து மீது எனக்குக் கோபம் வந்தது,ஆனால் நாளாக..நாளாக..மயில்வாகனனின் எண்ணம் புரிந்தது.இந்த அரசு எங்கள் மூதாதையருக்குக் கொடுத்த பஞ்சமி நிலம் வேண்டும்னு என் நிலங்களுக்கு விலைபேசி..என்னை விற்க நிர்பந்தப்படுத்துகிறான். தவிர என் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான்.இந்தக் கூட்டத்தின் மூலம் அவனுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்..என் சாதியை வைத்தே..என் சாதி மக்களை அழிக்க அவன் என்னை தேர்ந்தெடுத்துள்ளான்.அதை இப்போதுதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்..ஒரு பட்டடைக்கல் போல  இருப்பதற்கு நான் தயாரில்லை.

இனியும் மயில்வாகனன், தனது தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.தொடர்ந்து அவன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவனுக்கு சரியான பதிலை எங்கள் சமுதாய மக்கள்...இல்லை...இல்லை..நானே அளிப்பேன்.

நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா..இந்தப் பஞ்சாயத்து என்னை மன்னிக்கணும்.இன்னிக்கே அந்தக் கட்சிக் கொடியை வெட்டி சாய்ப்பேன்.எல்லருக்கும் என் நன்றி" என பேசி முடித்தான்.

பின்னர், செல்வத்திற்கு, அர்ச்சகர் கேட்டுக் கொண்டபடி நினைவிடம் கட்ட பஞ்சாயத்து ஒப்புதல் கிடைத்தது.

மூக்கனும், குருவம்மாவும்..தங்கள் கைகளைக் கூப்பி மக்கள் அனைவருக்கும் தங்கள் நன்றியைக் கூறினர்.

Sunday, December 22, 2019

22 - ராணுவ மரியாதையுன் செல்வத்தின் உடல்

அன்று பொழுது விடிந்ததும்,அர்ச்சகர் கோயிலைத் திறக்கக் கிளம்பினார்.

ஏதோ அவசர வேலை என இருநாட்கள் முன்பு ப்ருத்வி சென்னை சென்று விட்டான்.

மேலும், அவன் பூங்குளம் பற்றி எழுதியக் கட்டுரைகள் ,அவன் வேலை செய்யும் "சந்தனம்" பத்திரிகையில் தொடராக வரப்போவதாகவும், அது சம்பந்தமாக தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறிச் சென்றான்.

வந்து தங்கியிருந்த சில நாட்களிலேயே அவனுக்கு பூங்குளம் கிராமத்தின் மீது ஈடுபாடு அதிகரித்துள்ளதை அர்ச்சகர் அறிந்தார்.

ராமனும், மூக்கனும்,நாராயணனும் கூட ப்ருதிவியைப் பிரிந்திருப்பதால், தங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார்கள்.

இதையெல்லாம் அசை போட்டபடியே, தேரடிக்கு வந்தார் அர்ச்சகர்.

அப்போது ஒரு போலீஸ் வேன் அங்கு வந்து நின்றது.அதிலிருந்து இரு காவலர்கள் இறங்கினர்.

பூங்குளத்தில் காவல்நிலையம் கிடையாது.குற்றம் செய்பவர்கள் இருக்கும் இடத்தில்தானே அது அவசியம்.

இந்நிலையில் அங்கு போலீஸ் வேனும், காவலர்களும் வந்திருந்தது அர்ச்சகருக்கு வியப்பினை ஊட்டியது.

'உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் காவலர்களைப் பார்த்து.

"ஐயா..நாங்க பக்கத்து ஊர் காவல் நிலையத்திலிருந்து வருகிறோம்,இந்த கிராமத்துல மூக்கன் யாரு? அவர் வீட்டுக்கு எப்படிப் போகணும்..?" என்றனர்.

டீக்கடையிலிருந்த நாரயணனுக்கும் அவர்கள் கேட்டது காதில் விழ, மூக்கனைத் தேடி இவர்கள் ஏன் வர வேண்டும் என எண்ணினான்.

"என்ன விஷயமாக நீங்க மூக்கனைப் பார்க்கணும்?" என்றார் அர்ச்சகர்.

"அய்யா..அவரோட பையன் செல்வம், ரானுவத்துல எல்லைப் பாதுகாப்புல இருந்தப்போ..அத்து மீறி நுழைஞ்ச இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றான்.அவனும் சுடப்பட்டான்.ராணுவத்துல சேரும் போது கொடுத்த தகவலை வைச்சு, அவர் பூங்குளத்தைச் சேர்ந்தவர்.தந்தை பெயர் மூக்கன்.தாய் செங்கமலம் என்றெல்லாம் பதிவாகியிருக்கறதை வைச்சு, இந்த செய்தியை மூக்கனுக்குத் தெரிவிக்கச் சொல்லி எங்களுக்குக் கட்டளை.அவரோட உடல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்து..அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் இந்த ஊருக்கு வரும்.இதை மூக்கனுக்குத் தெரிவிக்க நாங்கள் வந்து இருக்கிறோம்" என்றார் ஒரு காவலர்

விஷயம் கேள்விப்பட்டதும் அர்ச்சகருக்கு மயக்கம் வருவது போல இருந்தது..அப்படியே அமர்ந்தவர், நாராயணனைக் கூப்பிட்டு, மூக்கனின் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டச் சொன்னார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சென்னை..

அண்ணாசாலையிலிருந்து பிரியும் சிறிய சந்தில்..ஒரு பழைய மூன்றுமாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் செயல் பட்டுக் கொண்டிருந்தது "சந்தனம்" பத்திரிகை அலுவலகம்.

அங்கு, ஒரு மேசையின் முன் அமர்ந்து..தன்னிடம் வந்திருந்த கட்டுரையில் பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தான் ப்ருத்வி.அப்போது அவன் மேசையில் இருந்த இன்டெர்காம் ஒலித்தது.

"ப்ருத்வி, கொஞ்சம் உள்ளே வா" என்றார் பத்திரிகையின் ஆசிரியர்.

அவர் அறைக்குள் நுழைந்தவனை"உட்கார்" என எதிர் இருக்கையைக் காட்டியவர், தன்னிடமிருந்த அன்றைய  தமிழ் செய்தித்தாள் ஒன்றை எடுத்துப் போட்டு, சிவப்பு மையினால் தான் கோடிட்டு இருந்த செய்தியினைப் படிக்கச் சொன்னார்.

செய்தித் தாளை கையில் எடுத்து படித்தான் ப்ருத்வி...

அதில்..

'தமிழக வீரர் வீர மரணம்.." என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கீழ் கண்டவாறு செய்தி வந்து இருந்தது.

"செல்வம் எனும் ராணுவ வீரர் ஒருவர், இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி இருவரை சுட்டு வீழ்த்தியதாகவும், அவரும் சுடப்பட்டு வீர மரணம் அடைந்ததாகவும்  "

மேலும்..செல்வம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும்..அவரது தந்தை மூக்கன் என்றும் போடப்பட்டிருந்தது அந்த செய்தியில்.

அதைப் படித்த ப்ருத்வி, "சார்..எனக்கு செல்வத்தின் தந்தை மூக்கனைத் தெரியும் " என்றான்.

"வெரிகுட்..நீ இப்பவே பூங்குளம் போ.அந்த செல்வத்தின் உடல் அடக்கத்தில் கலந்து கொள்.முடிந்தால் மூக்கனிடம் ஒரு பேட்டி எடுத்துவிடு நம் பத்திரிகைக்காக.வேண்டுமானால்..நம் பத்திரிகை ஃபோட்டோகிராஃபரையும் அழைத்துச் செல்" என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

பூங்குளம் கிராமத்தை அடைந்த ப்ருத்வி, மூக்கன் குடியிருக்கும் பகுதிக்கு..அவன் குடிலை நோக்கிச் சென்றான்.

குடிசையின் வாசலில் சிலர் அமர்ந்திருந்தனர்."என்னைவிட்டுப் போக உனக்கு எப்படிடா மனசு வந்தது" என பெருங்குரலெடுத்து அழுதுக் கொண்டிருந்தாள் மூக்கனின் மனைவி குருவம்மாள்.அவளருகே அமர்ந்து மூக்கன் ஆறுத்ல் சொல்லிக் கொண்டிருந்தான்.

ப்ருத்வியைப் பார்த்ததும் மூக்கன் மெல்ல எழுந்து வந்தான்.வந்தவன் "என் நிலமையைப் பார்த்தீங்களா தம்பி" என்றான்.

அவனை மெதுவாக அணைத்துக் கொண்ட ப்ருத்வி, "மூக்கா..உங்க இழப்பு  பேரிழப்பு.அதில் சந்தேகமே இல்லை.ஆனா, உங்க மகன் பூங்குளம் கிராமத்துக்கே பெருமையை சேர்த்துட்டார்.அவர் உடல் ராணுவ மரியாதையுடன் வர இருக்கிறது.இந்த சமயத்துல உங்கக் கிட்ட கேட்கக்கூடாதுதான்..இருந்தாலும் கேட்கிறேன்..உங்க பையனைப் பத்தி ஏதாவது சொல்வதாய் இருந்தா சொல்லுங்க.உங்க ஆதங்கத்தை எங்க பத்திரிகையிலே போடறோம்" என்றான்.

"அவனைப் பத்தி என்னத்தத் தம்பி சொல்றது.தம்பி, நாங்க தலித்துகள்.தீண்டத்தகாதவர்கள்.படிப்பறிவு இல்லாதவர்கள்.அதனாலே என் பையனாவது படிக்கட்டுமேன்னு..நாயா உழைச்சு அவனைப் படிக்க வைச்சேன் தம்பி.

அவன் படிக்கறப்போ, ஒருநாள் வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி ஆளுங்க யார்னு கேட்டாராம்.கூனிக்குறுகி இவன் எழுந்து நின்னானாம்.இவன் என்ன சாதின்னு தெரிஞ்சதும்..இவனோட படிச்ச பயலுக இவன் கூட பேசறதைக் கூட நிறுத்திட்டாங்களாம்.

அப்புறம் தம்பி..அவன் ஒருநாள்..நம்ம எம் சி ஆர் இல்ல அதான் தம்பி புரட்சித் தலைவர் அவரோட 'ஒரு தாய் மக்கள் நாமென்போம்"ங்கற பாட்டைப் பாடிக்கிட்டே வரப்புல நடந்து வந்துகிட்டு இருந்தானாம்.எதிரே வந்த ஒரு உயர்சாதிக்காரரைப் பார்த்ததும் அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினானாம்.உடனே அவர் "பளார்"னு இவன் கன்னத்துல ஒரு அறைவிட்டு "ஏன்டா..கீழ்ச்சாதிப் பயலே! நான்  வரேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழிவிடாம..வரப் புல ஒதுங்கி நின்னு வழி விடறியா? நான் உன்னை இடிச்சுட்டுப் போகணும்னு பார்க்கிறியா?ன்னாராம்...ஏன்..தம்பி..அவர் என் பையனை "பளார்"னு அறைவிட்டாரே..அப்ப மட்டும் அவர் கை அவன் மேல படலியா?

"என்ன ஜனங்க இவங்க! நாயைத் தொட்டு..கொஞ்சி விளையாடறாங்க..ஆனா..மனுஷனைத் தொடக்கூடாதாம்"
என்றான் ப்ருத்வி.

"அந்த நாயைக் கூட அவங்க உயர்ந்த ஜாதி நாயா பார்த்துதானே தம்பி வாங்கறாங்க" என்றான் மூக்கன்.

ப்ருத்வியுடன் வந்த ஃபோட்டோகிராபர், கடமையேக் கண்ணாக "அப்புறம் உங்க மகனைப் பத்தி சொல்லுங்க" என்றார்.

மூக்கன், மயில்வாகனனின் உண்ணாவிரதத்தையும், அதில் செல்வம் பட்ட அவமானத்தையும், பிறகு அவன் காணாமல் போனதையும் கூறினான்.பின்,

"அப்படிப் போனவன் பட்டாளத்துல சேர்ந்துட்டான்கிறதும்..அவனுக்கு இப்போ நேர்ந்த கதியையும்..உங்களைப்போல எனக்கும் இப்பத்தான் தெரியும். மனசுல துக்கம் தாங்கல..ஆனாலும் ஒரு பக்கம் , என் பையன் நாட்டுக்காகத்தான் செத்து இருக்கான்னு ஒரு சந்தோஷம்.சேதி கேட்டதும் அந்த மயில்வாகனன் காலைல என்னைப் பார்த்து,'ஒரு மாவீரனைப் புள்ளையாப் பெத்து இருக்கே"ன்னு சொல்லி என்னோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டார்.

தன் உயிரைக் கொடுத்து,அவனுக்கும், எனக்கும், என் சாதி மக்களுக்கும் ,இந்த கிராமத்துக்கும் பெருமையை வாங்கித் தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி "  என்றான்.

அதற்குள் வெளியே கூச்சல் கேட்க. மூவரும் வெளியே வந்துப் பார்த்தனர்.

ஒரு ராணுவ ஜீப்பும், அதைத் தொடர்ந்து இந்திய தேசியக் கொடி போர்த்திய செல்வத்தின் உடலை சுமந்து பல ராணுவ வீரர்கள் சூழ..ராணுவ டிரக் வண்டியும்,அதற்குப் பின்னால்  அரசு அதிகாரிகள் சிலரது கார்கள்,பல கட்சித் தலைவர்களின் கார்கள் ஆகியவற்றுடன் மயில்வாகனன் காரும் வந்து சேர்ந்தன.

மூக்கன் இல்லத்தில் வண்டி நிற்க..அதிலிருந்து செல்வத்தின் உடல் இறக்கப்பட்டது.செல்வத்தின் உடமைகளை ஒரு ராணுவ அதிகாரி மூக்கனிடம் ஒப்படைத்தார்.

பின்..ஒவ்வொரு தலைவராக வந்து..மாலை, மலர் வளையம் என மரியாதை செய்தனர்.

தமிழக அரசு சார்பிலும், முதல்வர் சார்பிலும் மலர் வளையங்கள்  வைக்கப்பட்டன.

அடுத்த சில மணி நேரத்தில், செல்வத்தின் உடலை சுமந்து ராணுவ டிரக் மயானத்திற்குப் புறப்பட்டது.

சந்தன கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தகனம் செய்ய தயாராய் இருந்தது மயானம்.

மீண்டும் தலைவர்கள் இறுதி மரியாதை செய்தனர்.மயில்வாகனன் உட்பட அனைத்து தலைவர்களும், செல்வத்தின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

பண்ணையார்,அர்ச்சகர்,ராமன், நாராயணன்,தாமோதரன், மாடசாமி ,ப்ருத்வி, புகைப்படக்காரர் என அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.

செல்வத்தின் உடலைப் போர்த்தியிருந்த இந்திய தேசியக்கொடியை எடுத்து ஒரு ராணுவ வீரர் மடித்து..மரியாதையுடன் மூக்கனிடம் தந்தார்.

இருபத்தியோரு குண்டுகள் முழங்க..செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.பலர் தங்கள் கைகளால் சந்தன கட்டைகளை தகனத்தில் இட்டனர்.

இவ்வளவு நேரமும் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்த மூக்கன்,"டேய்..நீ சாதிச்சுட்டே டா...சாதிச்சுட்டே" என் கத்தினான்.

உடலில் உயிர் இருக்கும்வரை மதிக்காதவர்கள் உயிர் பிரிந்ததும் ஏன் இப்படி?

இவர்கள் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என எதை வைத்து சொல்கிறார்கள்.

உயிரை வைத்தா,உடலை வைத்தா, புகழை
வைத்தா ,பணத்தை வைத்தா...

ப்ருத்வியுடன் வந்திருந்த புகைப்படக்காரரை அழைத்த மயில்வாகனன், மூக்கனை கட்டியணைத்தபடியே ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார். புகப்படக்காரரும், கோணம் பார்த்து ஒரு அழகிய புகைபப்டத்தினை எடுத்தார்.

ப்ருத்விக்குத் தெரியும், அந்த புகைப்படத்தையே பத்திரிகை ஆசிரியர் அடுத்த இதழில் முகப்பு அட்டையாகப் போடுவார் என. 

Saturday, December 21, 2019

21 - வறுமை கொடிது

விடியில் நேரம்...நடைப்பயிற்சி செய்வது போல கிராமத்தைச் சுற்றி வந்த ப்ருத்வி, நாராயணனின் டீக்கடைக்கு வந்து அங்கு போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
அதே நேரம் ராமனும் வந்து ஒரு செய்தித் தாளுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

'என்ன தம்பி..ஊரைச் சுற்றிப்பார்த்து, பேட்டி எடுக்க வேண்டியவங்கக்கிட்ட எல்லாம் பேட்டி எடுத்துட்டியா" எப்போ அதை உன் பத்திரிகையில போடப்போறே" என்றான் நாராயணன்.

"ஆமாம்..இந்த ஊர்ல சுத்திப் பார்க்க ..பேட்டிக் காண என்ன இருக்கு.மொத்தமே 300 குடும்பங்கள்.அக்ரஹாரம்னு சொல்லிட்டு ஒரு தெரு..அதுல அவங்க ஐம்பது பேர் இருப்பாங்க.தலித்துகளுக்குன்னு ஒரு இடம்..அதுல ஒரு ஐம்பது பேர்.மத்தபடி ஊர்ல 200 குடும்பங்க.. அவ்வளவுதானே உங்க பூங்குளம்"

"தம்பி, நான் கேட்டது உங்களுக்குப் புரியலை போல இருக்கு.இங்கு எல்லோர் வீட்டிலேயும் வறுமைதான் பொதுவா குடியிருக்கு.அந்த வறுமையைத்தான் பேட்டி எடுத்துட்டீங்களான்னு கேட்கறேன்"

"இங்க வந்ததுல எனக்கு ஒன்னு புரிஞ்சுப் போச்சு.வறுமைக்கு ஜாதி,மத பேதமில்ல.எல்லா ஜாதியிலேயும் வறுமை இருக்கு.ஆனா..அப்படிப்பட்ட வறுமை நிலைமையிலும்..பிறப்புப் பற்றி  சுமத்தப்படும் அவமானம்..அது தரும் வேதனை..வறுமை தர வேதனையைவிட அதிகம்"

ப்ருத்வி சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த பண்ணையார்,"அப்போ இந்த கிராமம் உங்களுக்குப் பிடிக்கலையா தம்பி?" என்றார்.

பண்ணையாரை ஒருமுறைப் பார்த்த ராமன் மீண்டும் செய்தித்தாளைப் படிப்பது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.

"இந்த கிராமத்துல சில விஷயங்கள் பிடிச்சு இருக்கு..சில விஷயங்கள் பிடிக்கல.வெள்ளந்தி மனசுள்ள மக்களைப் பிடிச்சு இருக்கு..தீண்டாமை இருக்கறது பிடிக்கல.வயல்கள் பிடிச்சு இருக்கு..அதுல பயிரிடமுடியாத நிலமை பிடிக்கலை.இங்க  காவிரியை பிடிச்சு இருக்கு..ஆனா..அது வெறும் மணலா இருக்கறது பிடிக்கல"

"என்ன தம்பி பண்றது.கர்நாடகாதான் தண்ணீ தரமாட்டேன்னு சொல்றாங்களே.இந்த வருஷம் இப்படியே இருந்துதுன்னு வைச்சுக்கங்க..எங்க வயிற்றில ஈரத்துணியைக் கட்டிக்கலாம்னாக் கூட..அதுக்கான தண்ணீர் கிடைக்காது போல இருக்கே"

"கர்நாடக மக்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.நீங்கக் கூட என்ன செஞ்சீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க.சென்னையில குடிக்கக் கூட தண்ணீ இல்லைன்னு சொன்னப்ப இங்கிருந்து தண்ணீ கொடுக்க மாட்டோம்னு ஒரு தரம் சொல்லலை?"

"தம்பி, நீங்க சொல்றது சரி..ஆனா..ஏன் தண்ணீ தரமாட்டோம்னு  சொன்னோம்னு யோசனைப் பண்ணுங்க.காவிரில தண்ணீ இல்ல.மழையும் இல்ல.இருக்கற ஆற்றுப் படுகை நிலத்தடி நீரையும், ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணியை எடுத்துட்டா..கிராமங்கள்ல எந்தக் காலத்திலும் பயிரிட முடியாத நிலை ஏற்படும்.மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும்.அதுபோல ஒரு நிலை வரக்கூடாதுன்னுதான் தண்ணீ கொடுக்கக் கூடாதுன்னு தகராறு பண்ணினோம்...

மொத்தத்துல நாட்டில தண்ணீர் அடிப்படை உரிமைங்கற நிலை மாறி ..அடிப்படைத் தேவைங்கற நிலைமை வந்துடுச்சு.இனிவரும் நாட்கள்ல..உலகத்துல ஏற்படப்போகும் தண்ணீப் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக்கூட உண்டாக்கும்னு சொல்றாங்க"

"நதிநிர் இணைப்பு திட்டம் ஏற்படட..இதுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும்.அதுக்கு நம்ம பொருளாதாரம் ஒரு சவாலா இருக்கே"

"நதிநீர் இணைப்புக்கு சவால் விடறது பொருளாதார நிலை மட்டுமில்லை...மாநிலங்களுக்கிடையே ஆன உறவு.மாநிலங்கள் ஒன்றொக்கொன்று விட்டுக் கொடுத்து எல்லா மாநிலங்களும் சம்மதித்தால்தான் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும்.சரி..தம்பி..இதைப் பத்திப் பேசி பேசி அலுத்துப் போச்சு..வாங்க கோயிலுக்குள்ள போயிட்டு வருவோம்"

"கவலைப்படாதீங்க..காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவின் இறுதித் தீர்ப்பு வந்தால்..எல்லாம் சரியாயிடும்"

இதுவரை இவர்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராமன்..

"ப்ருத்வி...நீங்க இரண்டு பேரும் பேசினதையெல்லாம் கேட்டேன்.நான் ஒன்னு கேட்கிறேன்.காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவின் இறுதித் தீர்ப்பு வந்தாலும், கர்நாடகா அதற்கு அடிப்பணியும் என்பது என்ன நிச்சயம்.நீங்க சொல்றீங்களே இந்த காவிரி நதிநீர் நடுவர் குழு..அது 1990 ஆம் வருஷம் ஜூன் மாதம் இரண்டாம்   தேதி அமைக்கப்பட்டது.இதுவரைக்கும் கிட்டத்தட்ட 450 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.தமிழ்நாடு தனக்கு 562 டிஎம் சி தண்ணீர் வருஷத்திற்கு வேணும்னு தன் நியாயத்தை உணர்த்த 3000 பக்கங்களுக்கு டாகுமென்ட்ஸூம் 1662 விட்னெஸ்களையும் கொடுத்து இருக்கு.கர்நாடகாவும் தன் பங்கிற்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லைன்னு 253 டி எம் சி தண்ணீ போதும்னு கிட்டத்தட்ட அதே அளவு டாகுமென்ட்ஸ் சப்மிட் பண்ணியிருக்காங்க"

இதைக் கேட்ட பண்ணையார், "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தேவையா..இல்லையா..எவ்வளவு தேவை..இதைத் தீர்மானிக்க இவ்வளவு டாகுமென்ட்ஸா..இவ்வளவு சாட்சிகள் தேவையா?" என்றார்.

ராமன் தொடர்ந்தான்,"தேவையா இல்லையாங்கறது ஒருபுறம் இருக்கட்டும்.இதனால மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்குல வீணாகுதே..அதைப்பாருங்க"

"அதைக்கேட்டா..இதுதான் ஜனநாயகம்னு சொல்வாங்க!சில சமயங்கள்ல..நம்ம நாடு பெரிய ஜனநாயகநாடுன்னு பெருமைப்பட்டுக்கிட்டாலும், அதைச் சொல்லிக்கிட்டு பணம் செலவழியறதைப் பார்த்து வருத்தப்படவும் வேண்டியிருக்கு.எனக்கு இது நாலாவது வருஷம்..பயிர் கருகப் போகுது.ஒவ்வொரு வருஷமும்..மழை வரும், மழை வரும்..காவிரில தண்ணீ வரும்னு நம்பித்தான் பயிரிடறோம்.இனிமே விதை நெல்லுக்குக் கூட பஞ்சம் வந்திடும் போல இருக்கு.இப்படியே நிலமைப்[போச்சுன்னா, கூண்டோடு கிராமத்து ஜனங்க அழிஞ்சுப் போக வேண்டியதுதான்".

"உங்க கிராமம் மட்டுமில்லை..பல கிராமங்கள் நிலமையும் இது போலத்தான் இருக்கு" என்றான் ப்ருத்வி.

"தம்பி..இப்படியே போச்சுன்னா, அந்த தீர்க்கதரிசி பாரதியாரோட வரிகள் உணமையாயிடுமோன்னு பயமா இருக்கு."சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்"..!சரி, தம்பி..நான் அந்த அரச மரத்தடியிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுக் கிளம்பறேன்" என்றார் பண்ணை.

பிருத்வியும், ராமனும் வேறு ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரச மரத்தடியில் அமர்ந்த பண்ணையார்,..கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு படுத்தார்.கண்ணயர்ந்தார்.

திடீரென பண்ணையார் கனவில் ..ஒரு எலும்புக்கூடு தோன்றி.."செத்துப் போ''செத்துப்போ" என அவர் கழுத்தை நெரிக்க..அலறியடித்து எழுந்த பண்ணை "ஐயய்யோ..என்னை கொலை பண்ண வருது ..என்னைக் காப்பாத்துங்க..என்னை காப்பாத்துங்க"என கத்தினார்.

அந்த சப்தம் கேட்டு, கோயிலில் இருந்த அர்ச்சகர் வெளியே வந்தார்.டீக்கடையிலிருந்து ப்ருத்வி,ராமன், நாராயணன் மூவரும் பண்ணையாரிடம் ஓடி வந்தனர்.

"பண்ணை..என்ன ஆச்சு?..என்ன ஆச்சு?" என்றார் அர்ச்சகர்.

"பேய்..பேய்.."

"பேயாவது..பிசாசாவது.அதுவும் இந்த பகல் வேளையில.ஏதாவது கனவு கண்டு இருப்பீங்க."என்ற அர்ச்சகர், நாராயணனைப் பார்த்து" நாராயணா
கொஞ்சம் தண்ணீ கொண்டு வா" என்றார்,

"இல்லை அர்ச்சகரே! இது முதல் தடவை அல்ல.பலதடவை இப்படிப்பட்ட கனவு வந்திருக்கு.நம்ம கிராமத்தை வறுமைப்பேய் பிடிச்சு ஆட்டுது.இந்த வருஷமும் இப்படியே இருந்தா, நம்ம மக்கள் எல்லாம் பொழப்பைத் தேடி வெளியே போக வேண்டியதுதான்.மண்ணோட கருணைதான் மனுஷனை வாழ வைக்குது.நம்மை அறியாமல்..நாம பிறந்த மண்வாசனைதான், நம்ம பேச்சுல,சாப்பாட்டுல,நம்ம பழக்க வழக்கத்துல வெளிப்படுது.அந்த மண்ணே..இப்ப தண்ணீ இல்லாம நம்ம வாட்டுது"

"பண்ணை, நீங்களே வறுமையைப் பத்தி பேசினா..நம்ம கிராமத்து ஜனங்கள் படும் பாட்டை கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க." என்றான் ராமன்.

"உங்க எல்லார் கிட்டேயும் சொல்லக்கூடாதுதான்.இருந்தாலும் சொல்றேன்..அசைவம் இல்லாம எங்க வீட்டுல சாப்பாடே இருக்காது.ஆனா..இப்ப நல்ல சோறைப் பார்த்தாப் போதும்னு ஆயிடுச்சு.அர்ச்சகரே.. ஆண்டவன் வசதியைக் கொடுக்கக் கூடாது.அப்படியே வசதியான வாழ்க்கையைக் கொடுத்துட்டு அப்புறம் ஏழ்மையைக் கொடுத்தா அதை ஒருத்தனால தாங்கிக்க முடியாது"

"அந்த அம்மன் என்ன நினைக்கிறானோ..அதுதான் நடக்கும்.கவலைப்படாதீங்க.எல்லா விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு" என்ற அர்ச்சகரிடம்,"அந்த முடிவு என்னோட முடிவா இருந்திடக்கூடாது" என்றார் பண்ணையார்.

Thursday, December 19, 2019

20 - ஒருநாள் மனைவி

கற்பகம் வீட்டிற்குள் நுழைந்த போது தாமோதரனும், செங்கமலமும் சந்தைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

மகளைப் பார்த்ததும் செங்கமலம் வாய் நிறைந்த சிரிப்புடன், "வா..வா" என வரவேற்றாள்

"என்னம்மா காலேஜ் லீவா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம்ப்பா...இன்னும் ஒரு வாரம் இங்கேதான்.ஆமாம்.. எங்கே வெளியே கிளம்பிட்டு இருந்தீங்களா?" என்றாள்.

"ஆமாம்மா..சந்தைக்குக் கிளம்பிக் கிட்டு இருந்தோம்"

"சரி நீங்க கிளம்புங்க..எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு.. ரெஸ்ட் எடுக்கறேன்..ஆமாம்..சாப்பிட ஏதாவது இருக்கா?" என்றாள்.

"உள்ளே கேப்பைக் களி இருக்கு கீரை கடைஞ்சு வைச்சு இருக்கேன்..சாப்பிடு" என்றாள் செங்கமலம்.

தாமோதரனும், செங்கமலமும் வெளியே சென்ற சிறிது நேரத்தில், கற்பகம் வந்த செய்தியை தன் ஆட்கள் மூலம் அறிந்த மயில்வாகனன், காரில் தாமோதரன் வீட்டிற்குக் கிளம்பினான்.

தன் விட்டிலிருந்து பண்ணையார் நிலத்தில் களை எடுக்கக் கிளம்பி வந்து கொண்டிருந்த மூக்கன், மயில்வாகனனின் கார், தாமோதரன் வீட்டு முன் வந்து நிற்பதைப் பார்த்தான்.

காரிலிருந்து இறங்கிய மயில்வாகனனை வம்புக்கு இழுக்க எண்ணி,இதற்குமுன் ராமன் தன்னிடம் சொல்லியிருந்த ஒரு நிகழ்வை , மயில்வாகனை வம்புக்கிழுக்க உபயோகித்து கொண்டான்.

"ஐயா கும்புடறேங்க"

மயில்வாகனன், தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

"தாமோதரனைப் பார்க்க வந்தீங்களா?"

மயில்வகனன் தலையை ஆட்டினான். 

"அவர் இல்லீங்களே! புருஷனும் ,பொண்ஜாதியுமா இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனாங்க"

"எங்க போயிருக்கான்..."என்ற மயில்வாகனன், முக்கனையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த எண்ணி, "நீ போகலியா?" என்றார்.

"இல்லீங்க..வீட்டு மாடுங்களுக்கு சாப்பாடு போடற வேலையை என் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார் தாமோதரன்"

"அப்படியா?" என்றவர்,தனக்கும் மாடுகள் பற்றி ஏதேனும் விவரம் தெரிஞ்சால் அதை வைத்து வீட்டினுள் இருக்கும் கற்பகத்திடம் பேச்சினை ஆரம்பிக்கலாம் என எண்ணி,அதைப் பற்றி மூக்கனிடம் கேட்க எண்ணினான்.

"ஆமாம்..மூக்கா! மாடுகளுக்கு என்ன சாப்பாடு போடுவே"

"கருப்பு மாட்டுக்கா  இல்லை வெள்ளை மாட்டுக்கா"

"ம்..வெள்ளை மாட்டுக்குத்தான்"

"வைக்கோலுங்க"

"அப்ப..கருப்ப மாட்டுக்கு.."

"அதுக்கும் வைக்கோல்தானுங்க"

"ஆமாம்..அதை எங்கே கட்டிப் போடுவே"

"எதை..கருப்பு மாட்டையா இல்லை வெள்ளை மாட்டையா"

"வெள்ளை மாட்டைத்தான்"

"வீட்டுக்குப் பின்னால இருக்கற தொழுவத்துலதானுங்க"

"அப்ப கருப்பு மாட்டை"

"அதையும் வெளியே இருக்கற தொழுவத்துலதான்"

"எங்கே குளிப்பாட்டுவ"

"எதை..கருப்பு மாட்டையா? வெள்ளை மாட்டையா"

வெள்ளை மாட்டைத்தான்"

"பக்கத்துல இருக்கற குட்டையிலதான்"

 "அதையும் பக்கத்துல இருக்கற குட்டையிலதான்"

அப்போதுதான், மூக்கன் தன்னைக்  கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்த மயில்வாகனன், சற்றே கோபத்துடன், "லூசாடா  நீ..கருப்புமாடு, வெள்ளை மாடு இரண்டுக்கும் ஒன்னாதான் செய்யற..அப்புறம்..வார்த்தைக்கு வார்த்தை கருப்பா, வெள்ளையான்னு ஏன் கேட்கற"

"ஐயா..கோபப்படாதீங்க..நான் ஏன் அப்படிக் கேட்கறேன்னா,அந்த வெள்ளைமாடு தாமோதரனுடையது ..அதனாலத்தான்"

"அப்படியா..சரி..சரி..அப்போ அந்த கருப்பு மாடு"

"அதுவும் தாமோதரனுடையதுதான்"

மயில்வாகனன் ,மூக்கனை நோக்கிப் பாய, மூக்கன் அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓடினான்.அவனை சற்று துரத்தியதில், கட்டிய வேட்டி அவிழ..சற்று நிதானித்து அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு "கற்பகம்..கற்பகம்.." எனக் குரல் கொடுத்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்தான் மயில்வாகனன்.

"அங்கே என்ன சத்தம்?" என்றபடியே கொல்லையிலிருந்து வந்த கற்பகம், மயில்வாகனன் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் "அப்பா வீட்ல இல்லையே" என்றாள்.

"அப்பா இல்லேன்னா என்ன..நீ இருக்கியே..நீ என்னோட பேசமாட்டியா?

"அதெல்லாம் இல்ல..என்ன விஷயம்னு சொல்லுங்க.எனக்கு நிறைய வேலை இருக்கு"

மயில்வாகனன் சற்றே அசடு வழிய,"கற்பகம் உங்கூட நிறைய பேசணும்னு நினைக்கிறேன்.ஆனா உன்னைப் பார்த்ததும், உன் அழகிலே நான் பேச நினைக்கறது எல்லாம் மறந்துடுது.அப்படி என்ன மந்திரம் போட்டு வைச்சு இருக்கேன்னு தெரியல" என்றான்.

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல"

"நான் அரசியல்வாதி.நாங்க பேசறது எல்லாம் புரியறது மாதிரியும் இருக்கும்..புரியாதது மாதிரியும் இருக்கும்.கேட்கறவங்கதான் புரிஞ்சுகக்ணும்.இப்ப நான் சொல்ல வந்தது என்னன்னு புரிஞ்சு இருக்குமே"

"இல்லை..எனக்குப் புரியல"

"சரி, நான் நேராகவே விஷயத்துக்கு வர்றேன்.என்னை மாதிரி அரசியல்வாதிங்க பதவியை இழந்துட்டா..அதை மறுபடியும் பிடிக்க வெளி உலகத்துக்குத் தெரியாம ஒரு சின்னப் பொண்ணை..கன்னித்தன்மை அழியாத பொண்ணாப்பார்த்து கல்யாணம் பண்ணிப்போம்.அரசியல்வாதிங்க ஜாதியில இதெல்லாம் சகஜம்"

"பதவிக்காக ஒரு சின்னப் பொண்ணைக் கல்யாணமா...நான்சென்ஸ்"

"நான் சென்ஸோ..நீசென்ஸோ..இந்த பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு பேசறோமே..அதெல்லாம் மக்களை ஏமாத்தத்தான்.உண்மையைச் சொல்லணும்னா..ஜோசியத்தை நம்பறவங்க நாங்க..ரொம்ப நாளா மந்திரி பதவி கிடைக்காத எனக்கு..ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு..அவ கூட ஒருநாள் மட்டும் வாழ்ந்தாக்கூடப் போதும்..பதவி கிடைச்சுடும்...ஏன் கற்பகம், அந்தப் பொண்ணு...ஒரே ஒருநாள் எனக்கு மனைவியா இருக்கப் போறப் பொண்ணு நீயா இருந்தா என்ன?"

"என்ன பேசறீங்க நீங்க..இப்படி எல்லாம் பேசறுதுன்னா இப்பவே வெளியே போங்க" 

"நான் வெளியே போகணுமா? இது மாதிரி சமயத்துல..நீ தனியா இருக்கற நேரத்துல..இப்ப நான் போகலைன்னு சொன்னா என்ன பண்ணுவ? அடடா..இந்த பொண்ணுங்களே கொஞ்சம் அழகா இருக்கக்கூடாதே..இருந்துட்டா உடனே கர்வம் வந்துடுமே! இதோபாரு..கற்பகம்..உன்னோட இந்த அழகை அழிக்க எனக்கு ஒரு செகண்ட் போதும். ஆனா..இந்த மயில்வாகனன் எதுக்கும் அவசரப்படமாட்டான்.உனக்கு ஒருவாரம் டயம் தரேன்..அதுக்குள்ள நல்லா யோசனைப் பண்ணி நல்ல முடிவுக்கு வா..வரட்டா"

மயில்வாகனன் , கற்பகத்தின் கன்னத்தை தட்டிவிட்டு வெளியே சென்றான்.

Wednesday, December 18, 2019

19 - மாடசாமி சொன்ன செய்தி

கற்பகத்திற்கு, கல்லூரியில் தொடர் விடுமுறை விடப்பட்டது.

அதையொட்டி அவள் தங்கியிருந்த மாணவிகள் விடுதியினையும் பத்து நாட்கள் மூடிவிட்டனர்.அவள் தன் உடைமைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ,வாஞ்சிநாதனிடம் சொல்லிவிட்டு தன் கிராமத்திற்குக் கிளம்பினாள்.

பூங்குளத்தின் மண்ணை மிதித்ததுமே,தனக்குள் இனம் புரியா புத்துணர்ச்சி ஒன்று ஏற்படுவதை உணர்ந்தாள்.

அது, நாம் பிறந்த மண்ணின் சக்தியாய்க் கூட இருக்கக்கூடும் என எண்ணினாள்.

ரயில் நிலையத்தில் இறங்கிய அவளது பெட்டியை போர்ட்டர் சங்கரன் தூக்கி வந்து,அவளை அழைத்துச் செல்ல வந்த மாடசாமியின் வண்டியில் வைத்துவிட்டு.."வரேன் பாப்பா" என அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.

கற்பகம் தன் கைப்பையிலிருந்து சில்லறையை எடுத்து அவனிடம் கொடுக்க,"பணத்தைக் கொடுத்து என்னைப் பிரிச்சுடாதே ஆத்தா..என்னிக்கிருந்தாலும் நாம ஒண்ணு.நீ என் பொண்ணாயிருந்தா..பெட்டியைத் தூக்க விட்டு இருப்பேனா? அதுபோலத்தான்.எனக்கு நீ வேற..என் பொண்ணு வேற இல்ல" என்றான் சங்கரன்.

வசதி இல்லாதவர்களின் மனம் என்றுமே விசாலமானது என்பதை நிரூபித்தான் சங்கரன். .

கற்பகம் வண்டியில் ஏறி அமர..வண்டியை மாடசாமி ஓட்ட ஆரம்பித்தான்.மாட்டின் மூக்கணாங்கயிற்றினை சற்று இழுத்தும் காளை வேகமாக ஓடாததால்..வண்டி சக்கரத்தில்..குச்சியை நுழைத்து "டக..டக" என சத்தத்தை உருவாக்கினான்.ஆனாலும் வேகம் கூடவில்லை.உடன் அதன் புட்டத்தில்..தன் கையை வைத்தான்.காளை கூச்சம் தாளாமல் ஓடத்துவங்கியது.

மாடசாமி, கற்பகத்திடம், "பாப்பா..இப்ப எத்தனாங்கிளாஸ்...டாக்டராக இனும் எவ்வளவு வருஷம் படிக்கணும்" என்றான்.

"மாடசாமி..சங்கரன் தான் என்னை பாப்பான்னு கூப்பிடறார்னா..நீயுமா? என்னை கற்பகம்னே கூப்பிடு.அப்புறம் என்ன கேட்ட...நான் டாக்டராக எவ்வளவு வருஷம் இருக்குன்னா..அதுக்கு இன்னமும் இரண்டு வருஷம் இருக்கு" என்றாள் கற்பகம்.

"பாப்பா...இல்லை..இல்லை..கற்பகம், நீ டாக்டராக ஆகி..நம்ம கிராமத்து ஜனங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்க்கணும்.நம்ம கிரமத்துக்குள்ள எந்த வியாதியும் உள்ள வர உன்னைப் பார்த்து பயப்படணும்"

ஒரு புன்முறுவலுடன், அவனுக்கான பதிலைச் சொன்னாள் கற்பகம்,"கண்டிப்பா..மாடசாமி.நம்ம கிராமத்தைப் பத்தி எனக்கு எவ்வளவு கனவுகள் இருக்கு தெரியுமா?.இதை ஒரு சுவர்க்கபூமியா மாத்தணும்"

"ம்" சுவாரசியமில்லாமல் சொன்ன மாடசாமி, "நம்ம கிராமத்தை நெனச்சா பயமாகத்தாம்மா இருக்கு.என்னிக்கு உங்கப்பா கட்சிக் கம்பத்தையும், கொடியையும் நம்ம கிராமத்துக்குள்ள கொண்டு வந்தாரோ, அன்னிக்கே..விஷக்கிருமிகள்புகுந்துடுச்சும்மா.அந்த மயில்வாகனன் தொல்லை தாங்கலம்மா.அடிக்கடி நம்ம கிராமத்துக்கு வந்துடறான்.வயல்வெளிலே வேலைக்கு வர பொண்ணுங்களையும், வேலை முடிஞ்சு திரும்பற பொண்ணுங்களையும் பார்த்து ஒரு மாதிரி பேசறான்..ஒருமாதிரி சிரிக்கிறான்,

போன மாசம்கூட, நம்ம வூட்ல இடுந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிற தனசேகரன் வூட்டுக்கு வந்து, அவன் இல்லாதப்போ அவன் பொண்சாதிகிட்ட தண்ணீ கேட்டுட்டே உள்ளே போயிட்டான்.கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு..அவ எவ்வளவு கதறியும்..கேட்கறதுக்கு பகல் நேரமாய் இருந்ததாலே அக்கம் பக்கத்துல  யாரும் இல்லை.அப்புறம் வந்த ஜோலியை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.பாவம்..அந்தப் பொண்ணு..சாயரட்சை தனசேகர் வூட்டுக்கு வந்து பாத்தப்போ..அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டு நுரை தள்ளி செத்துக் கிடந்தா." என்றான்.

"என்ன..அந்த அக்கா செத்துப் போச்சுங்களா?" என கற்பகம் சற்றே வருத்ததுடன் கேட்க..மாடசாமி "ஆம்" என்றான்.பின் "அது மட்டுமில்ல அம்மா..அவங்களோட இறுதி சடங்குல..எதுவுமே தெரியாது மாதிரி பொய்முகத்தோட மயில்வாகனன்  கலந்துக்கிட்டு ஆறுதல் சொல்றான்" என்றான்.

"இது எல்லாம் பாத்துட்டு அப்பா என்ன சொல்றார்?" என்றாள் கற்பகம்.

"தாமோதரன் பாடுதான் தவிப்பாப் போச்சு புள்ள.. .தன்னாலதானே அந்த மயில்வாகனன் ஊருக்குள்ளே நுழைஞ்சான்னு சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுகிட்டு இருக்காரு. இதுக்கு எப்ப்டி முடிவு கட்டறதுன்னு தெரியாம தவிக்கிறாரு"

கற்பகத்தின் மனம் கனத்தது.மயில்வாகனனிடமிருந்து தன் கிராமத்தைக் காப்பாற்றும் கடமை தனக்கும் இருப்பதாக எண்ணினாள்.

"அது மட்டுமில்ல தாயி..உங்கப்பாக் கிட்ட இருந்து, உங்க கழனியை எல்லாம் அபகரிச்சுடணும்னு அவன் நினைக்கிறான்.நீ படிச்ச புள்ள.எப்படியாவது அவனை நம்ம கிராமத்துக்குள்ள வராம செய்துடும்மா.அதுக்கு என்னால என்ன உதவி வேணுனாலும் சொல்லு..செய்யறேன்"

இதனிடையே , தாமோதரன் வீடு வந்திவிட, மாடசாமி வண்டியை நிறுத்தினான்.கற்பகம் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்.

"அம்மா..நான் சொன்னதா எதையும் உன் அப்பாகிட்ட சொல்லிடாத தாயி" என விடைபெற்றான் மாடசாமி.  

Tuesday, December 17, 2019

18 - இயற்கையே கடவுள்

அடுத்தநாள்..
விடியலுக்கு முன்னரே ப்ருத்வி எழுந்துவிட்டான்.காலைக்கடன் முடித்து, குளித்து தன் சித்தப்பாவுடன் கோயிலுக்குப் புறப்பட்டான்.

"உன்னோட அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், இந்த கிராமத்திற்கே வந்து தங்கிவிடும்படிக் கூறினேன்.ஆனா..உங்கப்பா கேட்கலை" என்றபடியே அர்ச்சகர் ப்ருத்வியுடன் நடந்தார்.

"அப்பாவுக்கு சென்னைப் பிடிச்சுப் போச்சு. யாராயிருந்தாலும் மெட்ராஸ்ல இருந்துட்டா, அப்புறம் அந்த இடத்தைவிட்டு வரமாட்டாங்க.அங்கே இருக்கற வசதியையெல்லாம் விட்டுட்டு வசதியே இல்லாத கிராமத்துல வந்து இருக்கறது கஷ்டம்"

"ஆமாமாம்.இப்படி காலங்கார்த்தால சுதந்திரமா நடக்கமுடியுமா?நடக்கறதுக்குன்னு காலைல நேரத்தை ஒதுக்கினாத்தான் முடியும்.சிரிக்கறதுக்கும் காலைல ஒரு இடத்துல கூடி சிரிக்கணும்.பாக்கெட் பால் தான் வாங்கணும்.பலதரப்பட்ட மாடுகள் கலந்த பால் கலவை.அப்புறம் அந்த பால்ல ஏதோ வைட்டமின்களைக் கலந்து சுத்தீகரிச்சு தர்றாங்க. இப்படியெல்லாம் இருந்து பழகிட்டா, அதைவிட்டு விட்டு சுத்தமா எல்லாம் கிடைக்கும்னு இருக்கற கிராமத்துல வந்து இருக்கறது கஷ்டம்தான்" என்ற அர்ச்சகரின் முகத்தை ஏறிட்டான் ப்ருத்வி."என்ன பாக்கறே" என்றார்.

"ஒன்னும் இல்லை..அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கு"

"அப்படி என்ன சொன்னார் உங்கப்பா"

"டேய்  சித்தப்பாக்கிட்ட கிராமத்தைப் பத்தி பேசறத்த ஜாக்கிரதை.எதாவது குறை சொன்னா கோபம் வந்திடும்னார்."என்றான் சிரித்தபடியே ப்ருத்வி.

அதற்குள் கோயிலை அவர்கள் எட்டிவிட, நாராயணன் டீக்கடையில் ராமன் உட்கார்ந்திருந்தான்.அவன் ப்ருத்வியைப் பார்த்து, "என்ன தம்பி..கிராமத்துல வசதியெல்லாம் சென்னை மாதிரி இருக்கா?எப்படி?" என்றான்.

"சென்னையில இருக்கற வசதி போல இங்கே வருமா?"

ப்ருத்விக்கு ராமன் பதில் சொன்னான்."என்ன தம்பி..சென்னையில பெரிய வசதி.உங்க சென்னையில வசதி வேணும்னா,நமக்கு சம்பந்தமே இல்லாதவங்கக்கிட்டக் கூட எல்லாம் திட்டு வாங்கணும்.இங்க உங்க சித்தப்பா "சாமி"ன்னுட்டு ஒரு கல்லுக்கு அர்ச்சனைப் பண்ணிக்கிட்டு இருக்காரு.ஆனா உங்க சென்னையில ஆசாமிக்கு ஆசாமி அர்ச்சனைப் பன்ணிக்கிட்டு இருக்காங்க"

"நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே"

"உங்க ஊருக்கு வந்து ஆட்டோவில ஏறினோம்னா, இறங்கறப்போ அவன் கேட்கற அதிகப்படியான பணத்தைக் கொடுக்கலைன்னா "சாவு கிராக்கி"ன்னு திட்டு வாங்கறோம்.சில்லறை இல்லாம நோட்டை நீட்டினா பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்கணும்."சம்திங்" கொடுக்கலைன்னா தெருவில குப்பை எடுக்க வர கார்ப்பரேஷன் ஊழியர்ங்கக்கிட்ட திட்டு வாங்கணும்.அரிசி ஸ்டாக் இல்லைன்னு பொய் சொல்லி மக்களை விரட்டற ரேஷன் கடைக்காரங்களை எதிர்த்து ஏதாவது கேட்டா அவங்கக் கிட்ட திட்டு.கையில காசு இல்லேன்னா, வண்டியில போறவனை மடக்கி,எதாவது காரணம் சொல்லி சம்திங் வாங்கற போலீஸ்காரன் கிட்ட திட்டு, இதைத்தவிர அப்பப்ப தலையை சொரியற தொலைபேசி ஊழியருங்க, ஈபி ஊழியருங்க,தகராறு பண்ற தண்ணீ லாரிக்காரங்க, கோயில்ல கூழ் ஊத்தறோம்னு வர போலி பக்தர்கள்னு எல்லோர் கிட்டேயும் காசு கொடுக்கலைன்னா திட்டுதான்"

"ஆமாம்..நீங்க யாரு?"

அதற்கு அர்ச்சகர், "இவர் பேரு ராமன்.எதற்கெடுத்தாலும் இப்படி ஏடாகூடமா எதாவது சொல்வாரு.எந்த ஒரு விஷயமும்..நமக்குத் தோணற மாதிரி இவருக்குத் தோணாது" என்றார்.

"தம்பி நான் பேசறது எல்லாம் நடைமுறை உண்மைகள்.அதனால இவங்களுக்கு என்னைப் பிடிக்காது.உதாரணமா..எனக்கு இப்ப ஒரு நல்லது நடந்ததுன்னு வைச்சுக்கங்க..என்னோட மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடறதுன்னு கேட்டா..இவங்க எல்லாம், அந்த அம்மனுக்கு அபிஷேகம் பண்ணலாம், தங்கக் கவசம் போடலாம்னு சொல்வாங்க.ஆனால் நானோ நாம பார்க்காத ஆண்டவனுக்கு எதாவது செய்யறதைவிட , ஏழை மக்களுக்கு உதவு செஞ்சாப் போதும்னு சொல்லுவேன்,உடனே இவங்க என்னை நாத்திகவாதின்னு ஒதுக்கிடுவாங்க"

"உங்கக்கிட்ட தெரிஞ்சுக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போல இருக்கே" என்று ப்ருத்வி சொன்னதும், அர்ச்சகர் ..

"இதுதான்டா..இதுதான்..இவரோட தனித்தன்மை.யாரோட பேசினாலும் அவங்க உடனே இவருக்கு ஃபிரண்ட் ஆயிடுவாங்க.அப்படி ஒரு ராசி இவருக்கு" என்றார்.

"தம்பி..இவங்கக் கிட்ட எல்லாம் நான் அதிகம் பேசமாட்டேன்..ஏன் கேட்டா..என்னோட இவங்களாலே வாதம் பண்ணமுடியாதுஅதனால உடனே..என்னோட பலவீனமான பாயிண்டைத் தொடங்கிடுவாங்க.எனக்கு இரண்டு....நான் என்ன சொல்றேன்னு புரியுதா? அது என்னோட தனிப்பட்ட விஷயம்.இதுல தலையிடறுத்துக்கு இவங்க எல்லாம் யாரு? நீங்க கும்பிடற சாமிகளே இரண்டு பொண்டாட்டிக்காரங்களா இருக்காங்களேன்னு கேட்டா,உடனே ஒன்னு இச்சா சக்தி..இன்னொன்னு கிரியா சக்தின்னு ஏதாவது சொல்வாங்க..ஆனா என்னையோ நாத்திகவாதி, ஏடாகூடம்னு எல்லாம் சொல்லிடுவாங்க"

"டேய்..அவன் கிட்ட அதிகம் பேசாதேடா..அப்புறம் அவன் உன்னையும் மாத்திடுவான்..உங்கப்பனுக்கு நான்தான் பதில் சொல்லணும்" என்றார் அர்ச்சகர்.

ராமன், இதையெல்லாம் சட்டை செய்யாது பேசினான்"இப்படித்தான்..இப்படித்தான்நான் புத்திசாலித்தனமா நான் ஏதாவது பேசினா இவங்களுக்குப் பிடிக்காது.உங்க சித்தப்பாக்கிட்ட நான் கேட்கறேன்..நாளைக்கே நீ ஒரு குறத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மயில் மேல உட்கார்ந்து வந்து வீட்டுக் கதவைத் தட்டினா..இவர் என்ன பன்ணுவார்? கடவுளே இப்படி செஞ்சு இருக்கார்னு சொல்லி, உன்னை வரவேற்பாரா இல்லை உன்னை வீட்டை விட்டு ஒதுக்கிடுவாங்களா? தம்பி, என்னைப் பொறுத்தவரை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன்.இயற்கைதான் கடவுள்.இதை ஏன் இவங்க புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றாங்க.ஒரு கல்லை சிலையாக்கி,அதுக்கு பாலையும்,தேனையும், பன்னீரையும், பஞ்சாமிருதத்தையும் அபிஷேகம் பண்றாங்க! மொத்தத்துல நான் உருவ வழிப்பாட்டிற்கு எதிரி.அவ்வளவுதான்" என்றான் ராமன்.

"ராமா...உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.பூனைகள் எல்லாம் சேர்ந்து..தங்களுக்குள்ளேயே ஒரு கடவுளை ஏற்படுத்திக்க நினைச்சன.அப்போ, அதுங்களுக்கு தெரிஞ்ச பூனை உருவத்தைத்தானே கடவுளா படைச்சு இருக்க முடியும்.அப்படி மனுஷனால் படைக்கப்பட்டதே உருவ வழிபாடுகள்.தீவிரமா யோசனைப் பண்ணிப் பார்த்தா..நம்ம அறிவுக்கு எதுவும் புலப்படாது.நாத்திகம் பேசறவன் வீட்டுல கடவுளை வணங்கறதும் உண்டு..கடவுளே கதின்னு கிடக்கறவன் வீட்டுல அந்தக் கடவுளை நிந்திக்கறதும் உண்டு" என்ற அர்ச்சகர் மேலும் சொன்னார், "ஒரு ஐந்து முக குத்து விளக்கை ஏத்தி வைச்சா..அந்த சுடர் தரும் தெய்வீகத்தன்மையை...வேற எது தரும் சொல்லு"

உடனே ராமன், "நான் எதைப் பெசினாலும் இப்படி எதையாவது பேசி என் வாயை அடைச்சுடுங்க.ஆனால் உங்களை அறியாமல் பஞ்சபூதங்கள்தான் கடவுள்னு ஒத்துக்கிட்டீங்களே..அது போதும் எனக்கு" என்றான்.

"நான் எங்கே அப்படி சொன்னேன்?'

"சுடர்..தெய்வீகத்த்ன்மையைத் தருதுன்னு சொன்னீங்களே..அந்தச் சுடர்...நெருப்பு..பஞ்சபூதங்கள்ல ஒன்னுதானே"

இவர்கள் பேசுவதையெல்லாம் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான் ப்ருத்வி.

Monday, December 16, 2019

17 - சம்பாவில் இத்தனை வகையா?

மகன் வீட்டை விட்டு காணாமல் போன துயரத்திலிருந்து மீள மூக்கனுக்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

அதை சற்று மறந்து..

"காலுக்கு செருப்புமில்ல
கால் வயிற்றுக்குக்கூட கூழுமில்ல
பாழுக்குழைத்தோமடா..என் தோழா
பசையற்று போனோமடா..

என்று பாடியவாறே(?) டீக்கடையை நோக்கி வந்து கொண்டிருந்த மூக்கனை...மாடசாமியின் மாட்டு வண்டி ஓசை தடுத்து நிறுத்தியது.

தேரடியில் வண்டி நிற்க, வண்டியிலிருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.பார்க்க பட்டணத்திலிருந்து வருபவன் போல இருந்தான்.கையில் ஒரு சிறு சூட்கேஸ்.

மாடசாமியைப் பார்த்து "யார் இது?" என சைகையால் மூக்கன் வினவ, மாடசாமி, தனக்கும் தெரியாது என உதட்டினைப் பிதுக்கினான்.

மூக்கன் அவனிடமே சென்று "தம்பி யாரு? ஊருக்கு புதுசுங்களா?" என்றான்.

"ஆமாம்..நான் ஒரு பத்திரிகை நிருபர்.இந்த ஊர் கோயில் அர்ச்சகர் என்னோட சித்தப்பா" என்றான்.

"அடடே..அர்ச்சகரோட அண்ணன் மகனுங்களா? வாங்க தம்பி..ஐயா வீடு தெரியுங்களா? அர்ச்சகரும் இப்ப கோயிலுக்கு வரும் நேரம்தான்" என்றான்.

டீக்கடையிலிருந்து நாராயணன் பார்க்க 'என்ன நாராயணன் பார்க்கறே..தம்பி..நம்ம அர்ச்சகரோட தம்பி மகன்" என்ற மூக்கன், "தம்பி முதல் முதல் ஊருக்கு வந்து இருக்கீங்க.நம்ம நாரயணன் கடை டீயைக் குடிச்சுப் பாருங்க" என்றவன், "இரண்டு டீ போடுங்க..மலாய் இல்லாமல் " என்றான் நாராயணனிடம்.

"வக்கனையோட...டீ போடுன்னு சொல்ற..கடைத் தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கறாப்போல...ஏற்கனவே உன் டீ பாக்கியே ஏகத்து இருக்கு" என்றான் நாராயணன்.

"இருக்கட்டுமே .தந்தாப் போச்சு,நான் எங்கே போயிட்டேன்..இல்ல நீதான் எங்கப் போயிட்ட? அந்த ஆண்டவன் புண்ணியத்துல, இந்த முறை மழை பொய்க்கலேன்னா,அறுவடை பொய்க்காது" என்றவன், "தம்பி..என்ன விஷயமா வந்து இருக்கீங்க?" என்றான். 

"நான் எங்க சித்தப்பாவை இதுவரைக்கும் பார்த்ததில்லை.முதல்ல அவரைப் பார்க்கணும்.அப்புறம் இந்த ஊர் விவசாயம் பத்தி, விவசாயிகள் வறுமையைப் பத்தி எல்லாம் செய்தி சேகரித்து எங்க பத்திரிகையில் போடணும்.அதுக்காகத்தான் வந்திருக்கேன்"

"ஓஹோ..அப்படியா? விவசாயத்தைப் பத்தி தெரியணும்னா, இந்த மூக்கனைக் கேளுங்க.இவனுக்கு எல்லாம் அத்துப்படி" என்றான் நாராயணன்.

"அப்படியா?" என்ற இளைஞன், மூக்கனைப் பார்த்து "நீங்க ஒரு விவசாயியா?சொந்தமா நிலமிருக்கா?" என்றான்.

"சொந்தமா நிலமா? இருந்தது தம்பி..எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துல.இப்ப, எல்லாம் போச்சு.இப்ப பண்ணையார் நிலத்துல கூலி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்"

"அப்படியா..விவசாயம் பத்தி ஏதேனும் சொல்லுங்களேன்" என்றபடியே, தன் கையிலிருந்த குறிப்பேட்டைத் திறந்து, பேனாவினையும் கையில் எடுத்து கொண்டான்.

இந்த இளைஞனும், நம் கதையில் முக்கியப் பாத்திரம் என்பதால் ,அவனைப் பற்றி..

அவன் பெயர் பிருத்வி.சென்னையிலிருந்து . அவன் வேலை செய்யும் பத்திரிகை, கிராமத்தில் விவசாயிகள் பற்றியும், விவசாயம் பற்றியும் எழுதும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தது.தன் சித்தப்பா அர்ச்சகராய் இருக்கும் பூங்குளத்தை அவன் தேர்ந்தெடுத்து, அக்கிராமத்துக்கு வந்துள்ளான்.

விவசாயம் பற்றி, அவன் கேட்டதும் மூக்கன் ஆரம்பித்தான்..

"விவசாயம் பத்தி..விவசாயிகள் பத்தி..என்ன சொல்றது தம்பி..இன்னிக்கு இருக்கற நிலைமைல..

தம்பி...நான் படிச்சவன் இல்லை.என்னோட அனுபவத்துல எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்.சோழநாடு சோறுடைத்துன்னு சொல்வாங்க.இப்ப தஞ்சை மாவட்டமே சாப்பாட்டுக்குத் திண்டாடுது,அந்த நாட்கள்ல நெல்லு ரகங்கள் மட்டும் நாலு லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒருரக அரிசையை சாப்பிட்டா..மொத்த அரிசி வகைகளையும் அவன் ருசி பார்த்து முடிக்க..500 வருஷங்கள் ஆகுமாம்.ஆனா..இன்னிக்கு...?

இருக்கற அரிசி வகைகளை விரல் விட்டு எண்ணிடலாம்.சீரகச் ச்ம்பான்னு ஒரு அரிசி கேள்விப்பட்டு இருப்பீங்களே! அடேங்கப்பா..அந்த ருசி..அதை சாப்பிட்டுப் பாத்தவங்களுக்குத்தான் தெரியும்.அந்த சீரக சம்பா அரிசி எத்தனைவகைத் தெரியுமா?

ஈர்க்குச்சி சம்பா,இலுப்பைச் சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகச் சம்பா,கோட்டைச் சம்பா,மல்லிகைச் சம்பா,மாப்பிள்ளைச் சம்பா,மூங்கில் சம்பா,பொய்கைச் சம்பா,பொட்டிச் சம்பா,வரகச் சம்பா,சின்னட்டிச் சம்பா,சீரகச் சம்பா,சுந்தரப்புழுகுச் ச்ம்பா,சூரியச் சம்பா,சொல்லச் சம்பா,பூலஞ்சம்பா,பூவாளிச் சம்பா,டொப்பிச் சம்பா,பிரியாணிச் சம்பா...இப்படி..ஆனா..இன்னிக்கு? என்னிக்கு இந்த ரசாயன உரங்கள் வர ஆரம்பிச்சதோ,அன்னிலேருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பிச்சுடுத்து,பல நெல் ரகங்களும் அழிஞ்சுப் போச்சு"

பிருத்வி வாயை பிளந்து கொண்டு ஆச்சரியத்துடன் மூக்கன் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, நாராயணனோ,"இவ்வளவு சம்பாவா? எனக்கு ஊர்ல இருக்கற என் பொண்டாட்டி சம்பாவைத்தான் தெரியும்" என்றான்.

'அடேங்கப்பா..இவ்வளவு தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க!'என்ற பிருத்வி, "இந்த கிராமத்துக்கு இதுக்கு முன்னால ஏதாவது பத்திரிகைக்காரங்க வந்து இருக்காங்களா?" என்றான் .

"ம்..உங்களை மாதிரி பத்திரிகைக்காரங்க அடிக்கடி வருவாங்க.எந்தக்கட்சி ஆட்சியில இருக்கோ அதுக்கு எதிர்கட்சி ஆளுங்க வருவாங்க.டிவி காரங்க வருவாங்க.ஆனா..எங்க ஊர் கட்டுப்பாட்டால..எந்த அரசியல் கட்சிக்காரனும் இங்க அரசியல் பண்ணமுடியாது" என்றபடியே, நாராயணன்..டீ தம்ளரை பிருத்வியிடம் கொடுத்துவிட்டு, வட்டிலை மூக்கன் இருக்குமிடத்தின் கீழே கொண்டுவந்து வைத்தான்.

"என்ன இது? எனக்கு ஒரு மாதிரி, இவருக்கு ஒரு மாதிரி டீ கொடுக்கறீங்களே!"என்றான் பிருத்வி வட்டிலைப் பார்த்தபடியே"

அது வந்து தம்பி..இங்க இரட்டை டம்ளர் முறைதான்" என்றான்.

"ஏன்? இவர் தலித்ங்கறதால ஆண்டவன் ஒத்தக் கண்ணு இல்ல ஒத்தக் கையோட படைச்சு இருக்கானா..இல்லை நாம எல்லாம் தலித் இல்லைங்கறதால மூணு கண்..மூணு கையோட படைச்சு இருக்கானா? எல்லாரும் வாயாலதானே சாப்பிடறோம்" என்றான் சற்று கோபத்துடன்.

"தம்பி..இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.இந்த விஷயத்துல உங்க சித்தப்பா அர்ச்சகராலேயே ஒன்னும் செய்ய முடியலை.நீ சின்னப் பையன்..இதுல எல்லாம் தலையிட்டு பேரைக் கெடுத்துக்கிட்டு ஊர் போய் சேராதே!"

"எனக்கு இந்த கிராமத்துல என்ன வேலையிருக்குனு நெனச்சென்..நிறையவே வேலை இருக்கும் போல இருக்கு"

இந்நிலையில் மூக்கன் குறுக்கிட்டு, "அதைவிடு தம்பி..எங்களுக்கு இதெல்லாம் பழகிப் போச்சு.உன்னைப் பார்த்தா என் மகன் ஞாபகம் வருது தம்பி" என்றான்.

"உங்களுக்கு ஒரு பையன் இருக்காரா? அவர் எங்கே இருக்கார்?என்ன பண்றார்?"

"அதெல்லாம் பெரிய கதை தம்பி.என் பையன் நல்லா படிச்சான்.பட்டணத்துல போய் மேல படிடான்னேன்.முடியாதுன்னுட்டான்,'வியர்வையின் விளைச்சலில் பசியாறறதுதான் சுய மரியாதை.உனக்கு வேண்டிய ரொட்டித் துண்டை உன் வியர்வையில் தேடு.உழைப்பு இன்றி உண்ணும் உணவு திருட்டுக்கு சமம்" இப்படி ஏதேதோ சொல்வான்.

வயக்காட்டில மும்முட்டியோட இறங்கி வேர்வை சிந்தி பாடுபட்டாத்தான் குடித்த கஞ்சி செரிக்கும்னு சொல்வான்."

"நீங்க சொல்றதைப் பார்த்தா..எனக்கு உங்கப் பையனைப் பார்க்கணும் போலத் தோணுது"

'என் மகனைப் பார்க்க இப்ப என்னாலேயே முடியாது தம்பி.எங்கே போனான்? என்ன ஆனான்"ன்னு தெரியல.ஒருநாள் அவன் வயல்ல வேலை முடிஞ்சு..வரப்புல நடந்து வந்துக் கிட்டிருந்தான்"ஒரு தாய் மக்கள் நாமென்போம்னு" எம் ஜி ஆர்., பாட்டைப்பாடிக்கிட்டே..அப்போ அவனுக்கு எதிர..தன்னை உயர்ந்த சாதின்னு நினைச்சுக்கிட்டிருந்த ஒருத்தர் வந்தார்.அவருக்கு வழிவிட இந்தப்பய வயல்ல ஒருகாலும், வரப்புல ஒரு காலும் வைச்சுக் காத்திருந்தான் அவர் போக.ஆனா..அந்தப் பெரிய மனுஷன் "பளார்"னு கன்னத்துல ஒரு அறைவிட்டு,"கீழ்சாதி மவனே! உனக்கு அவ்வளவு கொழுப்பா"ன்னாராம்.ஏன் தம்பி,எங்களை தீண்டக்கூடாத சாதின்னு சொல்ற அந்த மனுஷன் என் பையனை கன்னத்துல அறைஞ்சாரே..அப்ப அவர் கை என் பையன் கன்னத்தைத் தீண்டிச்சே..அது பரவாயில்லையா?

அப்புறம் தம்பி, அவன் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தப்ப அவன் கிளாசு வாத்தியார் 'இந்த கிளாசுல தீண்டத்தகாத சாதி யார்..யார்?னு கேட்டாராம்.இந்தப் பயப்புள்ள எல்லார் முன்னாலேயும் கூனிக் குறுகி எழுந்திருச்சு நின்னானாம்,இவன் என்ன சாதின்னு தெரிஞ்சதும்..இவனோட நண்பர்கள் எல்லாம் இவனோட பேசறதையே விட்டுட்டாங்களாம்.

அந்த வாத்திதான் ஸ்கூலு பசங்களுக்கு"சாதிகள் இல்லையடி பாப்பா' "காக்கைக் குருவியும் நம்ம சாதி"ன்னு  எல்லாம் சொல்லிக் கொடுத்தவராம்.வேடிக்கையா இல்லை தம்பி?"என்றான் மூக்கன்.

"இந்த உலகத்துல வாழும்..யார் யாருக்கும் நண்பனுமில்லை..யார் யாருக்கும் எதிரியுமில்லை.சூழ்நிலைதான் எல்லாவற்றிற்கும் காரணம்" என்றான் பிருத்வி.

"என்ன சூழ்நிலைத் தம்பி..எல்லாமே நாம் ஏற்படுத்திக்கிட்டதுதானே!" என்று மூக்கன் சொல்லிக் கொண்டிருந்த போதே, நாரயணன் வந்து பிருத்வி குடித்த டீ தம்ளரை எடுக்க வர..பிருத்வி குனிந்து மூக்கன் குடித்த வட்டிலையும் எடுத்தான்..உடனே மூக்கன் "தம்பி அதைத் தொடாதீங்க! நான் தான் எடுத்துக் கழுவித் தரணும்" என்றான்.

"அதை இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு வேணும்னா சொல்லுங்க.என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்களும், என் சித்தப்பாவும் ஒன்னுதான்" என்றான்.

பிருத்வி "உங்க மகனைப் பத்தி மெலும் சொல்லுங்க" என்றான்.

மூக்கன், மயில்வாகனனின் உண்ணாவிரதம் பற்றியும்,அவன் மகன் பின் காணாமல் போனது எல்லாம் சொல்லி முடித்தான்.

"என்ன ..மூக்கா ..உன் முழுக்கதையையும் சொல்லிட்டியா"" என்றான் நாராயணன்.

"வீட்டுல வளர்க்கற நாயைக்கூட தொட்டு, கொஞ்கி விளையாடற மனுஷனுங்க ,இன்னொரு மனுஷனைத் தொடக்கூடாதாம்.என்ன ஒரு வேடிக்கை" என்றான் பிருத்வி வருத்ததுடன்.

"அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்த ஜாதி நாயா பார்த்துத்தானே  தம்பி வாங்கறாங்க" என்ற மூக்கன், "சர்வஜீவ சமத்துவம்..சர்வ ஜீவ ஐக்கியம்" என்றான்..

மூக்கன் சொன்னதைப் பார்த்து வியந்த பிருத்வி., "அப்படின்னா" என்றான்.

"எல்லா உயிர்களும் நமக்குள்ள நிகர்..எல்லா உயிர்களும் ஒன்னு.இதுதானே இந்து தர்மத்தின் கொள்கை" என்றபடியே மூக்கன் ,பிருத்வியைப் பார்க்க, பிருத்வி மூக்கனையே வியப்புடன் பார்த்தான்."என்ன தம்பி பார்க்கற..எல்லாம் உங்க சித்தப்பா சொல்லிக் கொடுத்ததுதான்.பூவோடு சேர்ந்து இந்த நாரும் கொஞ்சம் மணக்கிறது" என்றான்.





Saturday, December 14, 2019

16 -எல்லாமே விளையும் நாடு

அந்த வீட்டின் பூஜை அறையில் மற்ற சுவாமி படங்களுடன் பாரதமாதா படமொன்றும் மாட்டப்பட்டிருந்தது.

சுதந்திரப் போராட்ட வீரரும் 90 வயதினைக் கடந்தவருமான சிதம்பரம், குளித்து வந்ததும் தனது அன்றாட வேலைகளின் ஒன்றான பூஜையை முடித்துவிட்டு..பாரதமாதாவின் படத்தில் ஒரு மலரையும் வைத்துவிட்டு "பாரதமாதாவிற்கு ஜே" என்று ஒரு குரலும் கொடுத்தார்.

பின், மூப்பின் காரணமாக உடல் சற்றே ஒத்துழைக்க மறுத்ததால், தள்ளாடியபடியே ஹாலிற்குள் வந்து அங்கு போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

வெளியே கிளம்பிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் "தாத்தா..எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான்.

"ம்..கேள்" என்றார் சைகையில் தாத்தா.

"நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 68 வருஷங்களுக்கு மேல் ஆச்சு.இன்னமும் வளரும் நாடு..வளரும் நாடுன்னு சொல்றாங்களே! ஏன்?" என்றான்.

"வளர்ந்த நாடு..வளரும் நாடு என்பதற்கெல்லாம் மேலோட்டமாக அர்த்தம் பார்க்கக் கூடாது..அதற்கான குறியீடுகள் பல இருக்கு.அதைப் பத்தி பேசணும்னா எவ்வளவோ இருக்கு. ஆனா..உன்னோட சந்தேகம்..சுதந்திரத்திற்குப் பிறகு நாம வளர்ந்திருக்கோமாங்கறதுதானே! அப்படிப் பார்த்தா நாம கண்டிப்பா வளர்ந்த நாடுதான்.ஆனா, கட்டுமஸ்தான உடல் இல்லாதவனை வளர்த்தி போறாதுன்னு சொல்றது இல்லையா" அது போலத்தான் வளரும்நாடு ன்னு சொல்றதும்.நம்ம நாட்டு விசேஷம் ஒன்னு சொல்றேன் தெரிஞ்சுக்க...

அபுதாபிலே பேரிச்சம் விளையும் மிளகு விளையாது
ருமேனியாவில ஆப்பிள் விளையும், தேங்காய் விளையாது
கனடாவில உருளை பயிராகும்.பூண்டு விளையாது
இங்கிலாந்திலே கோதுமை விளையும் கொய்யா விளையாது
ஆனா..இங்கே..எல்லாம் விளையற அற்புத மண் இந்தியநாடுதான்டா..

நம்ம நாட்டு தட்ப வெப்ப நிலை அப்படி"

"தாத்தா..அமெரிக்காவுல ஊழல் பண்ணினா..உயிரோட இருக்க முடியாது.ஆனா, இந்தியாவுல ஊழல் பண்ணினா அவன் தான் ராஜா...ராஜா மாதிரி இருக்கலாம்.நம்ம நாட்டுல லட்சக்கணக்குல, கோடிக்கணக்குல ஊழல் பண்றவனையெல்லாம் ஏசிரூம்ல உட்கார வைச்சு..விருந்து உபசரித்து விசாரிக்கறாங்க.ஆனா, வயத்துப்பாட்டுக்கு நூறு ரூபா திருடறவனை, அரை நிர்வாணமாக்கி..போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சு..உதைச்சு விசாரிக்கறாங்க.ஏன்னா நம்ம மண்ணு அப்படி...இல்லையா தாத்தா"

"கிண்டலா...இதோ பாருடா..அதுக்கு நம்மை நாட்டை மட்டும் குத்தம் சொல்லி பிரயோசனமில்லேடா..இயற்கையிலேயே அப்படித்தான் அமைஞ்சு இருக்கு.தண்ணீ கீழே இருக்கறப்போ கனமா இருக்கு..அதுவே ஆவியாகி மேலே போறச்சே லேசா ஆயிடறது.அதுபோல கீழ் மட்டத்துல ஒருத்தர் தப்பு பண்ணினா..அது பெரிய தப்பாத் தெரியுது..அதுவே மேல் மட்டத்துல லேசா ஆயிடறது"

"நீங்க என்ன சொன்னாலும், சுதந்திரத்திற்கு அப்புறம் நாடு சீரழிஞ்சுப் போனது நிச்சயம்.1972ல ஒரு ரூபாயோட மதிப்பு 13 அமெரிக்க டாலர்..ஆனா இன்னிக்கு...?ஒரு டாலரோட மதிப்பு 61 ரூபாய்."

"உன்னைச் சொல்லிக் குத்தமில்லடா..சுதந்திரத்தோட அருமை உன்னைப் போல இருக்கற இளைஞர்களுக்குத் தெரியல..அவ்வளவுதான்"

"போங்க தாத்தா...உன்னைப் போல சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் இன்னிக்கு கொஞ்சம் பேர்தான் உயிரோட இருக்கறாங்க! அவங்களுக்கு அரசாங்கம் என்ன செஞ்சுது?"

"ஆமாம்டா..இந்த விசயத்தில எனக்கும் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.வெள்ளக்காரனுக்கு எதிரா சுதேசி கப்பல் விட்ட..கம்பீரமான வ உ சி க்கு ஆங்கில அரசு ஆயுள் தண்டனை விதிச்சுது.உடம்பு முழுக்க சங்கிலியால் கட்டப்பட்டு..அவரை செக்கிழுக்க வைச்சாங்க.அப்படி, தேச விடுதலைக்காக செக்கிழுத்தவரோட பேரன்கள் சுதந்திர இந்தியாவுல பெயிண்டர்களா தினக்கூலிக்கு பெயிண்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க"

"ஆனா  சம்பந்தம் இல்லாதவங்க எல்லாம்..சுதந்திரத்தோட பலனை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க. தாத்தா..இன்னிக்கு நேர்மைங்கறது..எழுத்துல மட்டும் தான் எழுத முடியும்.நேர்மையா ஒருத்தர் இருந்தா, அவங்களுக்கு வேதனையும், சோதனைகளும்தான் மிஞ்சும்.இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? நம்ம பூங்குளம் கிராமத்துல கெமிகல் ஃபேக்டரி மட்டுமில்ல, ஒரு கார் கம்பெனியும் வர்றதாம்.அதுக்காக எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரப்பு பண்ணி வர்றாங்க"

"நான் கூட கேள்விப் பட்டேன்.எனக்கென்னவோ உனக்கு அடுத்த ஜெனரேஷன் அரிசியை வெளிநாட்டுல இருந்துதான் இறக்குமதி பண்ணுவாங்களோன்னு தோணுது.இதையெல்லாம் பாக்காம நான் கண்ணை மூடிடுவேன்".

"தாத்தா," என்றபடியே உணர்ச்சி பொங்க அவரை அணைத்துக் கொண்டான் வாஞ்சி. 

Thursday, December 12, 2019

15 - காணாமல் போன செல்வம்

உண்ணாவிரதம் முடிந்த நாள் இரவு, தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணி அழுதுக் கொண்டிருந்தான் செல்வம்.

மூக்கனும் அவன் மனைவியும் எவ்வளவு ஆறுதல் சொல்லியும்..அவன் அழுகையை நிறுத்தவில்லை.

"நம்ம சாதியை வைச்சுதானே அந்த மயில்வாகனன் என்னை அவமானப்படுத்தினான்...ஒருநாள் அந்த மயில்வாகனனை எனக்கு மாலையை போட்டு வணங்க வைக்கிறேன்" என்றான் மூக்கனிடம்.

அடுத்தநாள் விடியலில் செல்வம் காணாமல் போனான்.

மூக்கனும், குருவம்மாவும் எங்கெங்கோ தேடினர்..ஊரில் உள்ள கிணற்றில் எல்லாம் போய் மூக்கன் பார்த்தான்..எந்த இடத்திலும் செல்வத்தைக் காணவில்லை.

மூக்கன் கோயிலுக்கு வந்து அந்த அம்மன் முன்னால் "சாமி கடவுளே! என்னை ஏன் சோதிக்கற.." என அழுதான்.

அப்போது டீக்கடையிலிருந்து நாராயணன் வந்தான், வந்தவன்" மூக்கா நான் கடைக்கு சரக்கு வாங்க பக்கத்து கிராமத்துக்கு விடியல்ல கிளம்பினேன்...அப்ப..உன்னோட பையன் என் கிட்ட இந்த கவரைக் கொடுத்துட்டு, தான் அவசர காரியமா வெளியே போறதாகவும், இதை உன்னிடம் கொடுத்துடச் சொன்னான்" என்றான்.

அந்த கவரில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்த மூக்கன், அந்தக் கடிதத்தை நாராயணனைப் படிக்கச் சொன்னான்.

நாராயணன் படிக்க ஆரம்பித்தான்..

அன்பு அப்பா, அம்மாவிற்கு,
நான் ஊரை விட்டேச் செல்கிறேன்.நான் உங்களிடம் சொன்னாற்போல மயில்வாகனன் எனக்கு மாலை போட்டு வணங்கும் நிலை எனக்கு வரும்போது திரும்பி வருவேன்.
அதுவரை, என்னை எங்கும் தேட வேண்டாம்.என்னைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்

இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்
செல்வம்

நாராயணன் , கடிதத்தைப் படித்து முடிந்ததும் , மூக்கன் தலையில் அடித்துக் கொண்டு "ஐயோ..செல்வம்..என்னை விட்டுட்டு போயிட்டியா"  என அழ ஆரம்பித்தான்.

அவனிடம் ,நாராயணன், "மூக்கா...கவலைப்படாதே! உன் பையனைப் பத்தி எனக்குத் தெரியும்.கண்டிப்பா அவன் சொன்னது போல பெரிய ஆளா ஆகிட்டித்தான் வருவான்" என்றான்.

++++++      ++++

நாட்கள் கழிந்துக் கொண்டு இருந்தன..

அவ்வப்போது, தாமோதரனை, அவன் நிலத்தை தனக்குக் கொடுத்துவிடுமாறு மயில்வாகனன் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

ஒருநிலையில் அவனது தொந்தரவினைத் தாங்க முடியாமல், கற்பகத்திடம் கலந்து ஆலோசிக்க,தாமோதரன் தஞ்சாவூர் வந்தான்.அவள் தங்கியிருக்கும் பெண்களுக்கான விடுதிக்குச் சென்றபோது, அவள் சிவகங்கை பூங்காவிற்குச் சென்றுள்ளதாக அவளது தோழி கூற அங்குச் சென்றான்.

பூங்காவில், கற்பகம், வாஞ்சியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.தாமோதரனைக் கண்டதும் "வாங்க அப்பா..எப்ப வந்தீங்க?" என்றாள்.
விடுதிக்குச் சென்றுவிட்டு இங்கு வந்ததாகச் சொன்ன தாமோதரன், வாஞ்சியைப் பார்த்து, "தம்பிதான் வாஞ்சியா?" என்றான்

"ஆமாங்க..நான்தான் வாஞ்சி, கற்பகத்தோட படிச்சுக்கிட்டு இருக்கேன்"

"அப்பா..இவர் தாத்தா சிதம்பரம்.ஒரு பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகி"

"போம்மா..யாராவது சுதந்திரத்தைப் பத்தி பேசினாலே..எனக்குக் கோபம்தான் வருது" என்றான் தாமோதரன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?" வாஞ்சி..

"பின்ன என்ன தம்பி..சுதந்திரத்துக்கு முன்னால வெள்ளையந்தான் நம்மை சுரண்டினான், ஆனாலும் நமக்கு வேணும்கற சௌகரியங்களையும் செஞ்சுக் கொடுத்தான்.ஆனா, இப்ப., இன்னிக்கு தலைக்குத் தலை, நான்தான் தலைவன்னு சொல்லிக் கிட்டு..சாதிக்கு ஒரு கட்சியை வைச்சுக்கிட்டு..தாதாக்களைப்போல அரிவாளும் கையுமா..நாட்டையும், நாட்டு மக்களையும் சுரண்டறாங்க"

"அப்பா..என்ன சொல்றீங்க?" என்றாள் கற்பகம்.

"அம்மா..நேத்து மயில்வாகனன் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்"

"என்னப்பா..வார்த்தைக்கு வார்த்தை..தலைவர்..தலைவர்னு சொல்வீங்க..ஆனா..இப்ப மயில்வாகனன்னு பேரைச் சொல்றீங்க"

"போம்மா..இப்ப அதுவா முக்கியம்..நான் அவரைப் போய்ப் பார்த்ததும்..பழையபடி நிலத்தைக் கொடுத்துடுன்னு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டார்.நான் அதுமட்டும் முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டு வந்துட்டேன்.ஏம்மா..நான் சொன்னது சரிதானே"

"ரொம்ப சரிப்பா..உங்க உயிர் உங்க நிலம்ப்பா.அதைக் காப்பாத்திக்க வேண்டியது உங்க உரிமை"

தன் பங்குக்கு வாஞ்சிநாதனும்"ஐயா..என் தாத்தாவும் ஒரு வக்கீல்தான்/நீங்க எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாதீங்க.வளைஞ்சுக் கொடுக்காதீங்க.எந்தவித சட்ட உதவின்னாலும்  தாத்தா செஞ்சுக் கொடுப்பார்" என்றான்.

Wednesday, December 11, 2019

14 - உண்ணாவிரதம்

தான் பலமுறை முயற்சித்தும், தாமோதரன் தனது நிலத்தை தரும் விஷயத்தில், பிடிவாதமாக இருந்ததால், மயில்வாகனன் அவனை எப்படி தன் வழிக்குக் கொண்டு வருவது என யோசிக்க ஆரம்பித்தான்.தவிரவும் அவனது மகள் கற்பகமும் அவனது நினைவில் அடிக்கடி வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

 கிராமத்தில்,காவிரி தண்ணீர் சற்றும் இல்லாமல் இருந்தது.இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை ஆகவேண்டிய கதிர்களெல்லாம் வாடத் தொடங்கின.பாசனக்கிணறுகளில் புல், பூண்டுகள் விளைந்தன.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், தாமோதரனை தன் வழிக்குக் கொணரவும்...ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிடலாம் என மயில்வாகனன் திட்டமிட்டான்.

காவிரியில் தண்ணீர்விட மறுக்கும் கர்நாடகாவினை எதிர்த்து, பூங்குளத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கச் செய்தான்.

பண்ணையார்,கவுண்டர் ஆகியோர் நிலங்களும் வறண்டதால், கிராமத்தில் அரசியல்கட்சிகளே நுழையக்கூடாது என்று இருந்த கட்டுப்பாடை சற்றே தளர்த்தி.. நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் உண்ணாவிரதத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

டீக்கடையின் பக்கத்தில், தென்னை ஓலை வேயப்பட்ட பந்தலைப் போட்டு மயில்வாகனனும், அவன் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஒருநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்குமுன், நாராயணனிடம் முன்னமே சொல்லி, பொங்கலும், வடையும் உண்ணாவிரதம் இருப்போருக்கு காலை உணவாக டீக்கடையின் பின்புறம் அழைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது.இந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

பொறுப்புகள் முழுதும் தாமோதரனின் மேற்பார்வையில் நடப்பது போல ஒரு மாயத் தோற்றத்தையும் மயில்வாகனன் செய்தான்,தாமோதரனுக்கு உதவியாக இளைஞனான மூக்கனின் மகன் செல்வம் அமர்த்தப்பட்டான்.

"தமிழக அரசே! தண்ணீர் கொடு..தண்ணீர் கொடு."
"பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வரும் பொன்னியை வாழவிடு வாழவிடு"
"விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே"
என்றெல்லாம் பதாகைகளும், கோஷங்களும் இருந்தன.

இதனிடையே..உண்ணாவிரதம் நடைபெறும் நேரத்தில், இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்வதுபோல சிலர் டீக்கடையின் பின்புறம் சென்று, திரும்பிவரும் போது வாயைத்துடைத்துக் கொண்டும் வந்தனர்.

மாலை ஆறு மணிக்கு உண்ணாவிரதம் முடிந்ததாக அறிவிக்கப் பட்டது.பழச்சாறினை அருந்தி மயில்வாகனன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டான்.அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் பழச்சாறு அருந்தினர்.

காலை முதல் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருந்த செல்வம், எல்லோரும் அருந்தி முடிந்த பின் மீதமிருந்த சிறிது பழச்சாற்றினை தன் வாயில் ஊற்றிக் கொண்டான்.அப்போது பின்னால் ஒருந்து ஒரு உதை அவன் மீது விழுந்தது.

"டேய்.....(பிரசுரிக்கவும் வெட்கப்படும் வகையில் கெட்ட வார்த்தைகள் கூறிய பின்)..யே..உனக்கும் பழச்சாறு கேட்குதா" என்ற மயில்வாகனன் குரல் கேட்டது.
அப்படியே குப்புற விழுந்தான் செல்வம்.

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.யாரும் இருக்கும் இடத்துல இருக்கணும்,,ஞாபகம் இருக்கட்டும்.அதைவிட்டுட்டு பெரிய ஆளா ஆகணும்னு நெனச்கே...தொலைச்சுடுவேன் ..தொலைச்சு" என்றான்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது,எதிர்பாராமல் விழுந்த பலமான உதை எல்லாம் சேர்ந்ததால், செல்வம் உடனே மயக்கமானான்.

அதைப்பார்த்த தாமோதரன், "தலைவரே! மயக்கமாயிட்டான்" என்றான் பதட்டத்துடன்.

இதற்குள் ஊர் இளைஞர்கள் பலரும் அங்குக் கூடிவிட்டனர்.

நிலைமை மோசமாகிவிடுமோ என பயந்த மயில்வாகனன், தாமோதரனிடம், "இங்கே யாராவது என்ன ஆச்சுன்னு கேட்டா,செல்வம், உண்ணாவிரதம் முடிஞ்சதும் தலைவரைத் தாக்கப் பார்த்தான்..அதனாலே நான்தான் அவனைத்தாக்கினேன்னு ,சொல்லிடு"  என்றான்.

"அது எப்படி தலைவா..பொய் சொல்றது" என்றான் தாமோதரன்.

வந்த இளைஞர்கள் தன்னை சந்தேகத்துடன் பார்ப்பதைப் பார்த்த மயில்வாகனன் உடனே.."என்ன தாமோதரா...இப்படி பண்ணிட்டே.செல்வம் யாரு..உங்க ஆளு..அப்படியிருக்கும் போது அவன் என்னைத் தாக்குவானா ? உண்ணாவிரதம் முடிஞ்சதும் எனக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தான், அதைப்போய் என்னைத் தாக்க வந்ததாய் நினைச்சு..அவனை இப்படி மயக்கம் வர மாதிரி அடிச்சுட்டியே!" என்றான் மயில்வாகனன் 

அதைக்கேட்டு, தாமோதரன் அதிர்ந்து நிற்க, வந்த கூட்டம் தாமோதரனை வெறுப்புடன் பார்த்தது.அதில் ஒருவன், "அவன் நம்ம ஆளாய் இருந்தா என்ன? செல்வத்தை அடிச்சு இருக்கான்..அவனை சும்மா விடக்கூடாது" என தாமோதரன் மீது பாயத் தயாராக.."ஐயய்யோ..செல்வம்..உனக்கு என்ன ஆச்சு?" எனக் கதறியபடியே வந்த மூக்கனைப் பார்த்து அப்படியே நின்றது கூட்டம்.

Tuesday, December 10, 2019

13 - மேட்டுர் அணையும்...காவிரி தன்னீரும்

வேண்டாம் என்றாலும் நாட்கள் நகர்ந்து கொண்டுதானே இருக்கின்றன.

பண்ணையாரின் நிலங்களில் நாற்று நடவு தொடங்கியது.நடவு முடிந்து மாலை கோயிலை நோக்கி வந்த பண்ணையாரை அர்ச்சகர் எதிர்கொண்டார்.

"என்ன பண்ணை..வயல்ல நடவு எல்லாம் முடிஞ்சுதா?" என்றார் அர்ச்சகர்.

'அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.ஆனா இந்த சமயத்துல தண்ணீ தேங்கி நிற்கணும் வயல்ல.காவிரிலேயோ தண்ணீ இல்ல.இரண்டு வருஷமா மழை இல்லாம..நீர் பாசனக் கிணறுகளும் வத்திப் போச்சு.மாரியைத்தான் நம்பிக்கிட்டு இருக்கோம்.மாரி வர இந்த மாரிதான் உதவி செய்யணும்" என்றார்.

அதைக் கேட்ட மூக்கன் நாராயணனிடம் வந்து,"பண்ணை மாறி..மாறி..மாரி..மாரிங்கறாரே! புரியலையே" என்றான்.

அதற்கு நாராயணன், "மாரின்னா மழை..அந்த மழைவர மாரி..அதாவது இந்த மாரியம்மன் கருணை வைக்கணும்னு சொல்றார்" என்றான்.

அர்ச்சகம் பண்ணையாரிடம், "ஒரு விஷயம் கவனிச்சீங்களா? காவிரில பெரும் பகுதி தமிழ்நாட்ல இருக்கு.ஆனா ..நம்ம நதியில தண்ணீ வரணும்னா..நாம கர்நாடகக்காரனை நம்பி இருக்க வேண்டியிருக்கு.அவனோ..அதிக மழை இருந்தா..உபரி நீரை நமக்கு அனுப்பறான்.இப்ப எல்லாம் சரியான நேரத்தில தண்ணீ வராததாலே..கதிர் எல்லாம் வாடிப்போகுது" என்றார்.

"ஆமாம்..இதுக்கு இந்த அரசியல்வாதிங்க ஒரு வழி பண்ணமாட்டேன்னு சொல்றாங்களே! மக்கள் வயிறு நிரம்பணும்னு விவசாயி வெயில்ல உடம்பை வருத்திக்கிறான்..ஆனா..இந்த அரசாங்கம், அந்த விவசாயியோட வயிறு நிரம்பறதைப் பற்றி கவலைப்படறதில்லையே!" பண்ணையார் பேசிக்கொண்டிருக்கும் போதே ராமன் இவர்களை நொக்கி வருவதைக் கண்ட பண்ணை "இந்த ஏடாகூடம் இப்ப ஏன் இங்கே வர்றான்"என்றார்.

"அது என்ன நம்ம ராமனுக்கு ஏடாகூடம்னு பேர் வைச்சு இருக்கீங்க?"

"ஆமாம்...உருப்படியா அவனும் எதுவும் பேச மாட்டான்.நாம ஏதாவது சொன்னா..அதுக்கு ஏடாகூடமா எதாவது பதிலைச் சொல்லுவான்.அவனுக்குத் தெரியாத விஷயமேக் கிடையாதுன்னு சொல்லுவான்.நாட்டுல பூமிக்கு பாரமா இப்படியும் சில பேர் இருக்காங்க"

இவர்களை நோக்கி வந்த ராமன், திரும்ப என்ன நினைத்தானோ ...திரும்பி வந்து டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான்.அங்கே தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்த மூக்கன், ராமனைப் பார்த்து"உங்கக்கிட்ட ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே!" என்றான்

"பரவாயில்லை..என்னன்னு சொல்லு"

"காம இச்சையைப் போல மோசமான வியாதி வேற எதுவும் இல்ல..இந்தக் காலத்துல ஒன்னைக் கட்டி காலம் தள்றதே கஷ்டம்..ஆனா..உங்களுக்கு இரண்டு கேட்குதே"

"ஆமாம்..மூக்கா..இவ வலக்கையைப் பிடிச்சு இழுத்தா அவ இடக்கையைப் பிடிச்சு இழுக்கறா..."

" நான் வருத்தப்படும் போதெல்லாம் அர்ச்சகர் ஒன்னு சொல்லுவார்..அதை இப்ப உங்களுக்குச் சொல்றேன்.நடந்து போனதையெல்லாம் நம்மால மாத்த முடியாது. இனி என்ன நடக்கப்போகுதுன்னு நமக்குத் தெரியாது.அதனால..இந்த இரண்டைப் பத்தியும் நினைக்கக்கூடாதுன்னு...நீங்களும் இன்னிக்கு இதுக்கு என்ன வழின்னு பாருங்க" என்றான்.

"மூக்கா..நீ கண்ணபிரானா மாறி எனக்கு செஞ்ச கீதாஉபதேசத்தை மறக்கமாட்டேன்" என்றான் ராமன் கிண்டலாக.

இதற்கிடையே, பண்ணையாரும், அர்ச்சகரும் அங்கே வந்தனர்.

"என்ன மூக்கா...ராமன் உன் கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கான்?" என்றார் பண்ணை.

உடனே ராமன், " அது ஒன்னுமில்ல..மூக்கன், நம்ம அர்ச்சகர் நாலும் தெரிஞ்சவர், அறிவாளின்னு சொன்னான்.அதுக்கு நான், அவருக்கு நாலும்தான் தெரியும், எனக்கு பத்தும் தெரியும்னு சொன்னேன்" என்றான்.

'ராமா..அப்பப்ப பேசும் போது ஊறுகாய் மாதிரி அர்ச்சகரையும், கடவுளையும் தொட்டுக்கலைன்னா
உனக்குப் பொழுதேப் போகாதா?"

"பண்ணை..தெரியாமத்தான் கேட்கறேன்..இன்னிக்கு பேப்பரைப் பார்த்தீங்களா? எங்கே பார்த்திருக்கப் போறீங்க!மதுரை கோயில்ல பாம் வைச்சு இருக்கறதா ஒரு ஃபோன் வந்ததாம்.அப்படி கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா..அவர் கோயில்ல வெடிகுண்டு வைச்சவனைக் காட்டிக் கொடுக்க வேண்டாமா? அதை விடுத்து..அந்த மீனாட்சி அம்மனை தரிசிக்க வர்றவங்களை சோதனைப் போடறோம்னு பக்தர்களை சோதிக்கிறது சரியா? இதுக்கு இந்த அர்ச்சகர் என்ன சொல்றார்...ஏதாவது நொண்டிக் காரணம் சொல்வார் அவ்வளவுதான்."

"ராமா..வெடிகுண்டிற்காக பக்தர்களை சோதனைப் போடறதை ஏன் சந்தேகக் கண்ணோட பார்க்கற..மடியில கனம் இல்லேன்னா ஏன் பயப்படணும். அதையே கொஞ்சம் மாத்தி யோசனைப் பண்ணிப்பாரு.வெடிகுண்டு.., வெடிகுண்டு வைச்சவனைக் கூட பாதிக்கக் கூடாதுன்னு அந்த ஆண்டவன் நடத்தற செயல் இதுன்னு புரிஞ்சுப்ப.." என்றார் அர்ச்சகர்.

"அர்ச்சகரே! இருக்காரா? இல்லையா?ந்னு தெரியாத அந்த ஆண்டவனுக்கு வக்காலத்து வாங்கறீங்களே! அவன் வந்து உங்களையெல்லாம் பாதுகாப்பார்னு நினைகக்றீங்க?"

"ராமா...நீ கேட்கறதால சொல்றேன்..இன்னிக்கு, பிராமணர்களும் சரி, தலித் மக்களும் சரி..தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலமைலதான் இருக்காங்க. என்ன ஒன்னு, இந்த பிராமணர்கள் என்னிக்கும் கோஷம் போட்டதோ, கொடி பிடிச்சதோ கிடையாது.ஏன்னா..அவங்க அவமானங்களைத் தாங்கிக்கப் பழகிட்டாங்க.ஆனா அதுவே பூமராங்கா, அவமானப்படுத்தினவங்களையே திருப்பித் தாக்குது
இப்படி பிராமண துவேஷத்தில இருக்கியே..இன்னிக்கு எந்த பிராமணன் நீ சொல்றாப்போல இருக்கான் சொல்லு.உங்களுக்கு ஏத்தாப்போல அவனும் மாறிட்டான் இல்ல.சில அடையாளங்களையும் அவங்க மாத்திக்கிட்டாங்க.பல விடுகள்ல பிராமண பேச்சும், வழக்கும் கூட மாறிப்போச்சு.அப்படியும் நீங்க அவனை திட்டறதை விடலை.இது அரசியல்ல மட்டும் நடக்கல..இலக்கிய உலகம் அவனைக் கேலி செய்யுது..தமிழ் சினிமாக்கள் கிண்டல் பண்ணுது..தமிழ் நாடகங்கள் கிண்டல் பண்ணுது..." அர்ச்சகரின் குரல் தழுதழுத்தது.

உடன் பண்னையார், "அவன் கிடக்கறான் விடுங்க.அவனுக்கு எதுக்கு இப்படி விலாவாரியா பதில் சொல்றீங்க.நாம வேற விஷயங்களைப் பேசுவோமே"

அதைக் கேட்ட ராமன்.."வேற விஷயமா..அதையும் நானே சொல்றேன்.இந்த வருஷமும் மேட்டூர் அணையில தண்ணீ இல்லை.அதனால சரியான நேரத்துக்கு இந்த முறையும் திறக்கமாட்டாங்க" என்றான்,

"காவிரி தண்ணீரை கர்நாடகா விட்டாதானே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும்"

"தண்ணீ வரணும்னா காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவை கர்நாடகா மதிக்கணும்.நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்னும் இன்னிக்கு பத்திரிகையில வந்திருக்கு. வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது என காவியங்களில் பாராட்டப்பட்ட காவிரியின் பாசனப்பகுதிகள் விரைவில் பாலைவனமாக மாறிடும்னு பொறியியல் வல்லுநர்கள்  எச்சரிச்சிருக்காங்க.நாசா விண்வெளி மையமும் இதை படம் பிடிச்சு காட்டியிருக்கு.இந்திய வனத்துறையினர் குடகு மலைக் காடுகளைப் பாதுகாத்து காவிரி நதியைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கணும்" என்ற ராமன், "தமிழக அரசும் இதுபற்றி ஆராய நிபுணர்கள் குழுவை அனுப்ப இருக்கு.கூடிய சீக்கிரம் அதிகாரிகள் வந்து வறட்சி பற்றி நம்ம கிராமத்திலேயும் விசாரிப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.

இதையெல்லாம் பாதி புரிந்தும்..பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த மூக்கன், "அதிகாரிகள் வந்த பிறகு என்னாகும்" என்றான்.

அதற்கு ராமன் "என்ன ஆகும்..அதிகாரிகள் விசாரிப்பாங்க...விசாரிப்பாங்க...விசாரிச்சுக்கிட்டே இருப்பாங்க " என்றான். 



Monday, December 9, 2019

12 - நாட்டின் முதுகெலும்பு விவசாயி

விடுமுறை முடிந்து தஞ்சை வந்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த கற்பகத்திற்கு, வாஞ்சியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

வாஞ்சிநாதன் , அவளுடன் சேர்ந்து மருத்துவம் படிப்பவன். தாய்,தந்தையரை சிறுவயதிலேயே இழந்தவன்.அவனது தாத்தா சிதம்பரம்தான் அவனை வளர்த்து வருபவர்.அவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.அவர் 95 வயது இளைஞர்.

இளைஞரா? என்று நீங்கள் கேட்டால்..ஆம் என்பதே பதில்.தனக்கு இன்னமும் வயதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்.அப்படி ஒரு மன உறுதி..தேச பக்தி நிறைந்தவர்.

கற்பகத்தின் அழகும்..அவளது சற்றும் கர்வம் இல்லாத பண்பும்..அவள் பேசும் இனிய சொற்களும்...வாஞ்சியை அவளிடம் காதல் கொள்ள வைத்தது.

ஆனால், கற்பகம் ஆரம்பத்தில் அவனது காதலை ஏற்கவில்லை.சாதி இருவரின் காதலுக்கும் தடையாய் இருக்கும் என மறுத்தாள்.

ஒருநாள் வாஞ்சி அவளிடம் "சாதிகள் இல்லையடி பாப்பான்னு மகாகவி பாடியிருக்கார்...சாதி இரண்டுதான் என ஔவை பாடியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லி அவளை தன்வயப்படுத்த  எண்ணினான்.

அவளும் தன் பங்குக்கு.."இன்றும் பலர் சாதி,மதம் என அடித்துக் கொள்வதையும், கௌரவக் கொலை எனச் சொல்லிக்கொண்டு சாதி வெறியர்கள் செய்யும் ஆணவக்கொலைகளையும் சுட்டிக் காட்டினாள்.

வாஞ்சியோ பிடிவாதமாக இருந்தான்.அவனது தாத்தாவைப் பற்றிக் கூறினான்.அவரது சம்மதத்தை வாங்கிவிடலாம் என்றான்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல ,ஒரு கட்டத்தில் வாஞ்சியின் மன உறுதி, அவன் காதலை ஏற்கவைத்தது.அவளும் அவனை விரும்பத் தொடங்கினாள்.

தாமோதரனுக்கும், இவ்விஷயம் அரசல் புரசலாகத் தெரிந்தது.சிதம்பரம், பற்றியும் கேள்விப்பட்டவன், மனம் நிம்மதியடைந்தது.

அன்று மாலை கல்லூரி முடிந்ததும் கற்பகத்தை , அவர்கள் எப்போதும் சந்திக்கும் சிவகங்கை பூங்காவிற்கு வரச் சொல்லியிருந்தான் வாஞ்சி.கற்பகமும் அவனிடம் பேச நிறைய செய்திகள் இருக்கிறது என சொல்லியிருந்தாள்.

அன்று மாலை..அவர்கள் சந்தித்தனர்.ஆனால், அவள் ஏதும் பேசாது அமர்ந்திருந்தாள்.

"பேச நிறைய விஷயம் இருக்குன்னு சொல்லிட்டு, இப்படி மௌனமாய் இருந்தா எப்படி?" என்றான் வாஞ்சி.

கற்பகம், அவனிடம் தன் தந்தையின் திடீர் அரசியல் ஆசையையும், அரசியல்வாதி மயில்வாகனன் வீட்டிற்கு வந்திருந்ததையும், அவன் தன்னையும் அரசியல் ஈடுபடச் சொன்னதையும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னாள்.

"அப்போ..வருங்கால முதல்வர் நீதான்னு சொல்லு"

"வாஞ்சி..என்ன உளர்றீங்க?"

"நான் உளரலே! நீதானே சொன்னே..மாணவரணி செயலாளர் ஆக்கறேன்..அப்புறம் கொள்கை பரப்பு செயலாளர்னு அந்த மயில்வாகனன் சொன்னான்னு.கொள்கை பரப்பு செயலாளர்னா..கட்சித் தலைமைக்கு வாரிசுபோலத்தான்..அதுதானே இப்ப நடக்குது.அதைத்தான் சொன்னேன்"

"வாஞ்சி நீ இப்படி கிண்டல் பண்ணுவேன்னு தெரிஞ்சா..மயில்வாகனன் எங்க வீட்டுக்கு வந்தது..அங்கே என் கூட பேசினது எல்லாம் சொல்லாமல் இருந்திருப்பேன்" என்றாள் சற்றே கோபம் வந்தவள் போல.

"அம்மையாருக்கு உடனே கோபமா? சாரி டா..சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.இப்ப கட்சி ஆரம்பிக்கற தலைவர்கள் எல்லாம் "நாங்கள்தான் வருங்கால முதல்வர்கள்"னு சொல்றாப்போல..நானும் சொன்னேன் அவ்வளவுதான்.ஆனா இப்படி பேசறவங்களைப் பார்த்தா சிரிப்புதான் வருது"

"என்"

"பின்ன என்ன..நாளை என்ன நடக்கணும்னு திர்மானிக்கிறது அந்த கடவுள்தான்.நம்ம உயிரே நாளைக்கு இருக்குமாங்கறதே நம்ம கிட்ட இல்ல.அப்புறம் இப்படிப்பட்ட பேச்சு ஏன்?"

"கேட்டா..நாங்க பகுத்தறிவுவாதிங்க..அப்படின்னு சொல்லுவாங்க.சரி அந்தப் பேச்சு நமக்கு ஏன்? என்னோட ஒரே லட்சியம் மருத்துவராகணும் அவ்வளவுதான்"

"என்னோட ஒரே லட்சியம்..கற்பகத்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இரண்டு பேருமா ஒரு கிளினிக் திறந்து ஏழை மக்களுக்கு சேவை செய்யணும் அவவ்ளவுதான்"

"ஆனா..வாஞ்சி எங்கப்பா எனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் விவசாயம் பார்க்கணும்னு நினைக்கிறார்.இந்த நாட்டுக்கு முதுகெலும்பே விவசாயிகள்தான்.எனக்கு வர மாப்பிள்ளையுடன் சேர்ந்து நான் விவசாயம் பார்ப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்"

"எங்க தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.அவர் கண்டிப்பா இதுக்கு சம்மதிப்பார்.எந்த வேலை செஞ்சாலும்,அதனால நம்ம நாட்டுக்கு பலன் இருக்கணும்னு சொல்வார்.அதனால், உங்கப்பாவோட ஆசைக்கு எதுவும் தடை சொல்லமாட்டார்னு நினைக்கிறேன்"

"சரி அப்போ..நாம வேற விஷயங்கள் பற்றி பேசலாமா?" என்றாள் கற்பகம்.

"வேற விஷயமா.." என சற்றே யோசிப்பது போல இருந்த வாஞ்சி, பின், "ஓஹோ..புரிஞ்சுப் போச்சு" என்று கூறியவாறே ..கற்பகத்தின் கைகளை பற்றி தன் கரங்களுக்கிடையே சிறை வைத்தான்.

Sunday, December 8, 2019

11 - பஞ்சமி நிலம்

மயில்வாகனன் வீட்டிலிருந்து திரும்பிய தாமோதரன் சைக்கிளை குப்பால் கடையில் விட்டு விட்டு..நாராயணனின் டீக்கடையை நோக்கி வந்தான்.

கடையில் மூக்கன் தரையில் அமர்ந்திருக்க அருகில் பெஞ்சில் ராமன் அமர்ந்திருந்தான்.மூக்கனின் அருகில், வண்டி மாட்டை அவிழ்த்து விட்டு சிறிது புல்லை அதற்குப் போட்டு விட்டு மாடசாமி வந்து அமர்ந்தான்.

கோயிலில் உச்சகால பூஜை முடிந்ததை அறிவிப்பது போல கோயில் மணி அடிக்க..அர்ச்சகர் தீபாராதனை செய்தார்.திடீரென மணியின் சப்தத்தைக் கேட்ட கோயில் மாடங்களில் அமர்ந்திருந்த புறாக்கள்.."பட..பட.." என சிறகு அடித்து தேர்முட்டிக்கு வந்து தேரின் உச்சியில் அமர்ந்தன.

மிகவும் களைப்புடன் வரும் தாமோதரனைப் பார்த்த மூக்கன், "வா...தாமோதரா..வா.. ரொம்ப சோர்வாயிருக்க.ஒரு டீ சாப்பிடு"என்று உபசரித்து ,நாராயணனை ஒரு டீ போடச் சொன்னான்.


தேநீரை வட்டிலில் கொணர்ந்து தாமோதரன் அருகில் வைத்தான் நாராயணன்.அதை எடுத்துப் பருகியபடியே மயில்வாகனன் தன்னிடம் பேசியவற்றை தாமோதரன் கூறினான்

அதுவரை ஏதோ செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த ராமன், "தாமோதரா..உன் கிட்ட இருக்கிறது அரசாங்கம் உன் மூதாதரையருக்குக் கொடுத்த பஞ்சமி நிலம்" என்றான்.

"பஞ்சமி நிலமா" அப்படின்னா என்ன?" என்றான் மூக்கன்.

அதற்கு ராமன் சொல்லப் போவதை நாராயணனும்,தாமோதரனும், மூக்கனும் கேட்கத் தயாராயினர்.

'சொல்றேன் கேளுங்க!
சுதந்திரத்திற்குப் பிறகு அரசின் சார்பாக பட்டியல் இன மக்களுக்காக  வழங்கப்பட்ட நிலமே பஞ்சமி நிலம்னு சொல்றது.எந்த உபயோகமும் இல்லாது,தரிசாகக் கிடந்த அந்த நிலங்களை , பணத்தேவைக்காக பிற்காலத்தில்  பெரும்பாலானோர்..மயில்வாகனன் போன்ற ஆட்களிடம் ஏமாந்து விற்றுவிட்டனர்.அந்த நிலங்களை விற்ற மக்கள்..பட்டடைக்கல் போல...அவங்களை வைத்தே.."

"பட்டடைக் கல்னா" என்றான் மூக்கன்.

"சொல்றேன்..பட்டடைக்கல்னு சொல்றது..கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பினை தங்கள் இஷ்டம் போல வளைக்க செம்மட்டியால் அடிக்கும் அடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு நிலைகலங்காது இருக்கும் இரும்புக்கல்தான் பட்டடைக்கல் ஆகும்.உங்களுக்குப் புரியும்படி சொல்வதானால்..உங்களை வைச்சே..உங்களை அழிக்கும் வேலைன்னு சொல்லலாம்."

புரிந்ததோ இல்லையோ..மூக்கன் தலையாட்டினான்..

"நீ மேல சொல்லு ராமா.." என்றான் நாராயணன்.

"அந்த நிலங்களை உங்கக் கிட்ட இருந்து வாங்கி உங்களை வைச்சே..உங்களை உழைக்க வைச்சே..பாசன நிலங்களாக மாற்றி பெரும் பணக்கரராகிவிட்டார்கள்.அப்படி வாங்கிய நிலங்களையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்து கிரயம் பெறப்பட்டிருக்கு.

இப்போ...ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பதிவு அலுவலத்தில் செய்யப்பட்ட கிரயங்கள் செல்லாது என்றும், அந்த நிலங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிச்சு இருக்காங்க.இதை எதிர்த்து அவங்க நீதி மன்றம் போயிருக்காங்க.

பஞ்சமி நிலங்களை வேறு சமுதாயத்தினர் வாங்கக்கூடாது என்றால் பதிவு அலுவலகங்கள் அதை பதிவு செய்யாம நிராகரிச்சிருக்கணும்.அதையெல்லாம் செய்யாமல் நிலத்தை பண்படுத்தி விவசாய நிலமாக மாற்றிய பின் அதை எப்படி திரும்பிக் கொடுக்கமுடியும்னு கேட்கறாங்க.

பஞ்சமி நிலப்பிரச்னையை கிளப்பிவிட்டு அரசியல்வாதிங்க சாதிப்பிரச்னையை தங்கள் லாபத்துக்காக தூண்டி விடறாங்க.

இது எல்லாம் தெரிந்தும் தாமோதரன் நிலத்தை அவன் கிட்ட இருந்து அபகரிக்க மயில்வாகனன் நினைக்கிறான்"என முடித்தான் ராமன்.

"அது எப்படி.." என்றான் நாராயணன்.

"தாமோதரன் மூதாதரையர்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை பதப்படுத்தி, தாமோதரன் விவசாயம் செய்துகிட்டு இருக்கான்.அதை எப்படியாவது
 அபகரிக்கப் பார்க்கிறான் மயில்வாகனன்.அதுக்காகத்தான் தாமோதரனுக்கு ஆசைக் காட்டி முதல்ல அவன் கட்சிக் கொடியை நம்ம கிராமத்துல நட வைச்சு இருக்கான்.இப்ப, அவனும், அவன் மகளும் அரசியல்ல நுழையலாம்..  பெரிய ஆள் ஆகலாம்னு ஆசைக்காட்டி..அவன் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறான்" என்று முடித்தான் ராமன்.

"என் உசுரே போனாலும்..என் நிலத்தை விற்கமாட்டேன்" என்றான் தாமோதரன்.

கோயில் நடையச் சாத்திவிட்டு வந்த அர்ச்சகர், டீக்கடையில் கூடியிருந்தவர்களையும், அவர்களிடம் ராமன் ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்து, "என்ன ராமா! என்ன
விஷயம்..மீட்டிங் நடக்குது" என்றார்.

'ம்..உங்காத்துக்கு சாப்பிட வரலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்' என்றான் ராமன்.

"உன் கிட்ட பேச வந்தேன் பாரு  ..என்னைச் சொல்லணும்"என்றபடியே..உச்சி வெயிலில் காலில் செருப்பும் இன்றி தத்தளித்தபடியே அக்ரஹாரம் நோக்கிச் சென்றார் அர்ச்சகர்.

"பாவம் அர்ச்சகர்.அவர் கிட்ட ஏன் இப்படி நடந்துக்கறே! அவர் உனக்கு என்ன செய்தார்" என்றான் மூக்கன்.

மூக்கனைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து விட்டு ராமனும்
கிளம்பினான்.

Saturday, December 7, 2019

10 - விவசாய நிலங்கள்

தாமோதரனையும், செங்கமலத்தையும் வெளியே அனுப்பிவிட்டு சென்ற மயில்வாகனன் மீண்டும் வந்து கற்பகத்திடம் பேசியதையும், மூக்கன் உள் நுழைந்து , மயில்வாகனனை வெளியேற்றியதையும் அறிந்த கிராமத்து மக்கள், மயில்வாகனன் ஏதோ உள் நோக்கத்துடன் தான் வந்திருக்க வேண்டும் என்றும்..இது போன்ற காரணங்களால்தான் கிராமத்திற்குள் அரசியலே நுழையக்கூடாது என கட்டுப்பாடு இருந்தது என்றும் பேச ஆரம்பித்தனர்.

இந்த விஷயங்கள் தெரியவந்ததும் தாமோதரனும் சற்று குழப்பம் அடைந்தான்.

"தலைவர் நல்லவரா? இல்லை கெட்டவரா?" என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது.

இந்நிலையில் ஒருநாள், மயில்வாகனின் உதவி ஆள் எனச் சொல்லிக் கொண்டு ஒருவன் தாமோதரன் வீட்டிற்கு வந்தான்.வந்தவன், "தாமோதரா! தலைவர் அடுத்த கிராமத்துக்கு வந்திருக்கார்.உன்னை உடனே வந்து பார்க்கச் சொன்னார்" என்றான்.

சற்று யோசித்த தாமோதரன், "நீங்க போங்க.நான் மாடசாமி அண்ணனைப் போய்ப் பார்த்து அவரோடு வண்டியில வந்துடறேன்' என்றான்.

"இல்லை..இல்லை..தலைவர் உன்னை   தனியாகத்தான் வரச்சொல்லியிருக்கார்.உன் கிட்ட முக்கியமா ஏதோ பேசணுமாம்"

தலைவன் தன்னிடம் முக்கியமாகப் பேசணும்னா அது என்ன விஷயமாக இருக்கும்..என பயமும், சற்று ஆவலும் உண்டாக"என்ன விஷயமா பேசணும்னு சொல்றார்னு உங்களுக்குத் தெரியுமா?"என்றான்.

'அதெல்லாம் தெரியாது.உன்னை உடனே கூட்டியாரச் சொன்னார்.அவ்வளவுதான் எனக்குத் தெரியும்"

"சரி..நான் குப்பால் சைகிள் கடையிலிருந்து ,சைகிள் எடுத்துக்கிட்டு அதுல வரேன்..நீங்க போங்க: என்றவன், உள்ளே சென்று, தோய்த்து வைத்திருந்த ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு..மேல் துண்டினை தலைக்குக் கட்டிக் கொண்டு,மஞ்சள் கலரில் ஒரு பனியனுடன் குப்பால் கடைக்கு விரைந்தான்.

குப்பால் என்பவன் வடக்கே இருந்து வந்தவன்,அவனுக்கு எது சொந்த ஊர், எப்படி இங்கு வந்தான் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.பார்க்க ..பார்க்க என்ன பார்க்க..உண்மையிலேயே கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவன்.ஊர் எல்லையில் சிறு குடிசை வீட்டைக் கட்டிக் கொண்டு..வெளியே மூன்று..நான்கு சைகிள்களுடன்..சைகிள் வாடகைக்கு விடும் கடை வைத்திருந்தான்.ஒண்டிக்கட்டை..சைகிள் விட பழகும் சிறுவர்களிடம் அதிகம் பேரம் பேசாது சைகிளை விட்டு வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"என்ன தாமோதரா..காலைலேயே எங்கக் கிளம்பிட்ட" என்றான் தாமோதரனை வழியில் பார்த்த மூக்கன்.

'மூக்கா..தலைவரு மயில்வாகனன் என்னைப் பார்க்கணும்னு சொன்னாராம்.என்ன விஷயம்னு தெரியலை.நம்ம குப்பால் கடையில வாடகை சைகிள் எடுத்துக்கிட்டு போலாம்னு போறேன்.."

"நான் வேணும்னா கூட வரட்டா?"

"வேணாம்...என்னத் தனியாத்தான் வரச் சொல்லியிருக்காராம்"

வாடகை சைகிளை எடுத்துக் கொண்டு நான்கு கிலோமீட்டர் மிதித்து தலைவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.அவனுக்கு முன்னால் சிலர் தலைவரைப் பார்த்துப் போக அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவராக தலைவனைப் போய்ப் பார்ப்பதும்..தங்கள் குறைகளை சொல்வதும், மனுக்களைக் கொடுப்பதும்,திரும்பி வருவதுமாய் இருந்தனர்.

தாமோதரன் முறை வந்ததும்..தலையில் கட்டிக் கொண்டிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.பல் குச்சி ஒன்றினால் பல்லைக் குத்திக் கொண்டு தலைவன் தனியாகத்தான் அமர்ந்து இருந்தான். அருகே குப்பைத்தொட்டியில், இவனுக்கு முன்னால் மனு கொடுத்துப் போனவர்களின் மனுக்கள் வீசப்பட்டிருப்பதையும் பார்த்தான்.

"தலைவா...ஆள் அனுப்பிவிட்டீங்களே! என்ன விஷயம் தலைவா?"

"தாமோதரா..எனக்காக நீ எதையும் செய்வ இல்லையா?"

இம்முறை சற்று யோசித்த தாமோதரன், பின் "அதுல என்ன சந்தேகம் தலைவா..உங்களுக்காக என் உசுரக் கூடத் தயார்"

"உன் உசுரக் கேட்கற அளவுக்கு உம் தலைவன் கல்நெஞ்சுக்காரன் இல்ல...சரி அது போகட்டும்..உன் பொண்ணு...அது பேரு என்ன?"

"கற்பகம்"

"கற்பகம்...ம்..கற்பகம்  ..ரொம்ப நல்ல பேரு.அவளும் கற்பகம் படத்துல வந்த விஜயா மாதிரி தளதளன்னு தான் இருக்கா.ஆமா..அவ எப்படி இருக்கா? படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு"

"உங்க தயவால நல்லாயிருக்கா தலைவா.நல்லா படிக்கறா.என்னோட ஆசை..எங்க கிராமத்துல..எங்க ஜாதிப்பொண்ணை ஒரு பெரிய டாக்டர் ஆக்கி..எங்க ஊர் ஏழை மக்களுக்கு இலவசமா சேவை செய்ய வைக்கணும்கறதுதான்"

"ம்ம்ம்..பொட்டப்புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு சொல்ற பாமர ஜனங்க இருக்கற கிராமத்துல..உன் பொண்ணை படிக்க வைக்கணும்னு நினைக்கிறியே.. உன்னைப் பாராட்ட வார்த்தையே இல்லைய்யா?

"ஐயா..உங்க வாயால என்னைப் பாராட்டறதைக் கேட்கும் போது எனக்கு வெட்கமா இருக்குய்யா"

"இதோ பாருடா..இவன் வெட்கத்தை.இந்த காலத்துல பொண்ணுங்களுக்கே வெட்கம்ன்னா என்னன்னு தெரியாது..இதுல இவன் வெட்கப்படறானாம்"

"தலைவரே! இப்ப என்னை எதுக்கு வரச் சொன்னீங்க..உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே1"

"காரியத்திலேயே கண்ணா இருக்க...ம்..ஆமாம்..உன் கிட்ட மொத்தம் எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கு?"

"நாலு ஏக்கர் தலைவா..எல்லாம் தரிசா இருந்தது.எங்க மூதாதையருக்கு அரசாங்கம் கொடுத்தது.அப்பறம் நல்லா உழைச்சு..நிலத்தை பண்படுத்தி..விளைநிலங்களா நன்செய்யா மாத்திட்டாங்க.விவசாயம் செய்ய ஆரம்பிச்சு, இப்ப நல்ல விளநிலங்களா, பொன்னு விளையற பூமியா ஆக்கிட்டாங்க. என்ன ஒண்ணு..முன்னெல்லாம் மூணு போகம் விளையும்..இப்ப விவசாயத்துக்குத் தேவையான தண்ணீ கிடைக்கறதில்ல.அணையைத் திறந்தாக் கூட கடைக்கோடியில இருக்கறதால தேவையான தண்ணீர் கிடைக்கறதில்லை.அதனால மானம் பாத்த பூமி போல ஆகிப் போச்சு.ஒரு போகம் தான்.மழை பொய்க்காத வருஷம் வேணும்னா இரண்டாம் போகம் விளையும்"

"தாமோதரா...உனக்கு இருக்கறது ஒரே பொண்ணு.அதுவும் டாக்டருக்குப் படிக்குது.உனக்கும் வயசாவுது.உனக்குப் பிறகு உன்னோட வயல்கள்..வெளச்சல்னு ..இதையெல்லாம் யாரால பார்க்க முடியப் போகுது..."

அவன் சொல்லிக் கொண்டே வர..அவன் மேலே என்ன சொல்லப் போகிறான் என ஏறிட்டுப் பார்த்த தாமோதரன், அவனது தயக்கத்தைப் பார்த்து...

"என்ன தலைவரே! அப்படிச் சொல்லிட்டீங்க! என் பொண்ணு நாளைக்கே..ஒரு டாக்டராக ஆகிட்டாலும்..அவ இந்த விவசாயியோடப் பொண்ணு.அது வயல்களைக் கவனிச்சுக்கும்.அப்படியே அதால முடியாயிட்டாலும்..அதுக்கு வர மாப்பிள்ளையா ஒரு விவசாயியைத்தாங்கப் பார்ப்பேன்" என்றான்.

"அப்போ..விவசாயத்துல..உன் வயல்கள் மேல உனக்கு அவ்வளவு உசுரு..இல்லையா..சரி..தாமோதரா...உனக்கு உங்க ஊர் மேல..உங்க ஊர் மக்கள் மேல..எல்லாம் அன்பு இல்லையா..பாசம் இல்லையா?"

"என்ன தலைவா..அப்படி சொல்லிட்டீங்க! எங்க கிராமத்துக்காக, எங்க கிராமத்து மக்களுக்காக..நான் என்ன வேணும்னாலும்...எவ்வளவு வேணும்னாலும் செய்வேன்.. பொறந்த மண்ணை நேசிக்காதவன் மனுஷனே இல்ல"

'அப்படிப் போடு..நீ சொன்னதை நிரூபிக்க உனக்கு இப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு.உன்னோட கிராமம் வளர இப்போ உன்னோட உதவி தேவையாயிருக்கு"

"நீங்க சொல்றது எனக்குப் புரியலையே!"

"உனக்குப் புரியற மாதிரியே சொல்றேன்..உங்க கிராமத்துல ஒரு கெமிகல் ஃபேக்டரி வரப்போகுது.அது வந்தா உங்க கிராமத்து இளைஞர்களுக்கு...குறிப்பா..உங்க இனத்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கும்"

"கெமிகல் ஃபேக்டரியா..அது வந்தா சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்னு எங்க ஊரு ராமன் சொன்னார்.அதுல இருந்து வர கழிவு நீரை..காவிரி நதியில விட்டு..நதியையும் மாசுபடிய வைச்சுடுவாங்கலாமே! அதானல நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.கிராமத்து ஜனங்களுக்கு தோல் நோய் எல்லாம் வருமாம்"

"இப்படி, ராமன் சொன்னான்..லட்சுமணன் சொன்னான்னு  எல்லாம் சொல்லாதே! அவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? இதோ பாரு தாமோதரா..அவங்க எல்லாம் சிவப்புச் சட்டைக்காரங்க..கிராமத்து ஜனங்களைக் கலவரப்படுத்த அப்பப்ப இப்படித்தான் சொல்வாங்க! உங்க கிராமத்து ஜனங்க முன்னேற்றத்துல அக்கறை இல்லாதவங்க அவங்க! உனக்கு உன் தலைவன் என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா?"

"அதுக்கு சொல்லலை தலைவா! சரி அதைவிடு..இப்போ எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?"

"ம்...கருமமே கண்ணாயிருக்க..சொல்றேன்..உங்க கிராமத்து தெக்கால இருக்கற அரசாங்க பொறம்போக்கு நிலத்துலதான் அந்த கெமிகல் ஃபேக்டரி வருது.அதை ஒட்டித்தான் அரசாங்கம் உனக்குக் கொடுத்த நிலமும் வருது வயல் நாலு ஏக்கர்னு சொன்ன இல்ல..அதுல ஒரு பகுதியிலேயும்..ஃபேக்டரி கட்டடம் வருது.அதனாலே..நீ அந்த நிலத்தை அந்தக் கம்பெனிக்கு வித்துடறே.நான் நல்லா பணம் வாங்கித் தரேன்! என்ன சொல்ற?"

தாமோதரனுக்கு இப்போது எல்லாம் விளங்கிவிட்டது.பூங்குளத்தில் தலைவன் ஏன் தன்னை கொடிக்கம்பத்தை நடவைத்து, கட்சிக் கொடியை பறக்க வைத்தான் என்று.அரசியல்வாதிகள் கிராமத்துல நுழைஞ்சா கிராமமே அழிஞ்குடும்னு கிராமத்து பெரிசுகள் சொன்னது எவ்வளவு உண்மை என்று..

அவன் என்ன சொல்லப்போகிறானோ என மயில்வாகனன் அவன் முகத்தைப் பார்த்தான்.

"இல்லை தலைவா..நான் என் நிலத்தையெல்லாம் விக்கறதா இல்லை"

"அப்போ..உன் தலைவன் மேல உனக்கு நம்பிக்கை இல்லை.உங்க ஊர் வளர்ச்சியில அக்கறையில்லை..அப்படித்தானே!"

"தலைவா..உங்களை எதிர்த்து சொல்றதுக்கு மன்னிக்கணும்...உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.எங்க ஊர் வளர்ச்சியிலேயும், எங்க ஊர் மக்கள் முன்னேற்றத்திலும் அக்கறை இருக்கு. ஆனா..அந்த வளர்ச்சி..எனக்கும், என் குடும்பத்துக்கும்...ஏன்..ஓரளவு எங்க ஊர் மக்களுக்கும் சாப்பாடு போடற விவசாய நிலங்களை அழிக்கறதாலத்தான் வரும்னா..அப்படிப்பட்ட வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை. எங்க ஊர் அர்ச்சகர் சொல்லுவார்.."உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்"னு ஒரு புலவர் சொல்லியிருக்கார்னு.அந்தப் புலவர் கூட உழவுக்கு அப்புறம்தான் தொழிலைச் சொல்லியிருக்கார்.

உயிர்கள் வாழ சாப்பாடு போடறது இந்த மண்.அந்த உழவுத் தொழிலை அழிச்சுத்தான் புதுசா ஒரு தொழில் உண்டாகும்னா..அது வளர்ச்சியில்லை..மக்களோட அழிவுக்கு ஆரம்பம்.அதுக்கு எந்தக் காரணம் கொண்டும் எள்ளளவும் என் பங்கு இருக்காது"

இச்சமயத்தில் மயில்வாகனனுக்கு சற்றே கோபம் வர, "தாமோதரா! என்ன பேசறே நீ..யார் கிட்ட பேசறே நீன்னு தெரியுதா?" என்ரான்.

"தலைவா! நான் நல்லா புரிஞ்சுதான் பேசறேன்.கொஞ்சம் பொறுங்க! நான் சொல்ல வந்ததை முழுதும் சொல்லிடறேன்.என்னோட பங்காளி ஒருவனோட முப்பாட்டனுக்கு திண்டிவனத்துக்கிட்டே தரிசு நிலம் கொடுத்தாங்க..நீங்க எல்லாம் பஞ்சமி நிலம்னு அரசியல் பண்றீங்களே..அதுபோல நிலம்தான். அதை சீராக்கி..உழைச்சு..பதப்படுத்தி..பொன்னு விளையற பூமியா மாத்திட்டாரு அவரு.அந்த சமயத்துல அரசியல் தலைவருங்க சிலர் அவை பயமுறுத்தி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அந்த நிலங்களை அவர் கிட்ட இருந்து அபகரிச்சுட்டாங்க.அதை வீட்டு மனைகளாக ஆக்கி வித்துட்டாங்க.நல்லா மூணு போகம் விளஞ்ச நிலம்..ம்..இப்ப கான்கிரீட் கட்டடங்களை சுமந்துக் கிட்டு நிக்குது..இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க...எந்தக் காரணம் கொண்டும் சாப்பாடு போடற நிலத்துக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்"

தாமோதரன் பேச்சை நிறுத்தினான்.அவனுக்கே, தானா இப்படி பேசினோம்னு ஆச்சரியமாக இருந்தது.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மயில்வாகனன், "எனக்காக உசுரக் கூட விடுவேன்னு சொன்னவன், இப்பக் கேவலம் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டேன்னு சொல்ற" என்றான்.

"தலைவா..இப்பவும் சொல்றேன்..உங்களுக்காக என் உசுரையும் தரத்தயார்.ஆனா..என்னோட வயல், விவசாயம் எல்லாம் என் உசுரவிட மேலானது"

"தாமோதரா" எனக் கோபம் மேலிட கத்திய மயில்வாகனன், உடன் தன் கோபத்தை மறைத்து கொண்டு, சாந்தமாக அவனிடம், "நீ இப்பவே சொல்ல வேணாம்.உணர்ச்சிவசப் படாம வீட்டுக்குப் போ.நல்லா யோசி.நல்ல முடிவுக்கு வா.வேணும்னா உன் பொண்ணையும் கலந்துக்க.வேணும்கிற நேரம் எடுத்துக்க.இப்ப கிளம்பு" என்றான்.

வெளியே வந்த தாமோதரன், பல எண்ணங்களுடன் சைகிளை மிதித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.

Wednesday, December 4, 2019

9 - மீண்டும் வந்தான் மயில்வாகனன்

மயில்வாகனன் , தாமோதரனின் வீட்டை விட்டுக் கிளம்பியதும், அவருடனேயே தாமோதரன் வெளியே வந்தான்.

வெளியே, சிறுவர்கள் சிலர் மயில்வாகனனின் காரைச் சுற்றி வந்து சந்தோஷம் மிகுதியால் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீடுகளிலிருந்து வீட்டு வாசலில் ஓடிக்கொண்டிருந்த கழிவு நீர் தன் வேட்டியில் படாதவாறு சற்று தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஒரு தாண்டு தாண்டினான் மயில்வாகனன்.சற்று தள்ளி அந்த சாக்கடை நீரில் சில பன்றிகள் நோண்டி, எதையோத் தின்றுக் கொண்டிருந்தன.

அவற்றையெல்லாம் பார்த்து முகத்தை சுளித்தபடியே, "பார்த்தியா..தாமோதரா..உங்க ஏரியா எவ்வளவு கலீஜா இருக்குன்னு.இதை முதல்ல சீர் படுத்தி, உங்க மக்கள் கிட்ட நல்ல பெயர் எடு.அது, உனக்கு மட்டுமில்ல, தேர்தல் வர நேரத்துல நம்ம கட்சிக்கும் உதவும்" என்றான் மயில்வாகனன்.

தாமோதரனுக்கு இதைக் கேட்டதும், தன் மீதும்..தன் சுற்றத்தின் மீதும் கோபம் கோபமாக வந்தது.தலைவன், தன் வீட்டில் உணவு அருந்தாமல் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கக் கூடும் என எண்ணினான்.

அதற்குள், "நான் கிளம்பறேன்" என்றவன் பார்வை, தாமோதரனின் வீட்டினுள் சென்றது.

வெளியே என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தில் வெளியே வந்த கற்பகத்தின் மீது மயில்வாகனின் பார்வை விழுந்தது.அதைக் கண்ட  கற்பகம் தன் உடலின் மீது ஆயிரம் கம்பளிப்புழுக்கள் நெளிவதைப் போல உணர்ந்தாள்.

மயில்வாகனன் ,தன் பார்வையை அகற்றாமல், "தாமோதரா, எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே? என்றான்.

"என்ன செய்யணும்னு சொல்லு தலைவா...என் உசுரக்கூட உனக்குத்தரத் தயார்"

"தாமோதரா! உன் தலைவன் தன் தொண்டன் உயிரைக் கேட்பான்னு நினைக்கறே! நீயும், உன்னோட மனைவியும்..அடுத்த கிராமத்துல இருக்கற நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸை கொஞ்சம் சுத்தம் செஞ்சு வைக்கணும்.நம்ம முதலமைச்சர் நாளைக்கு அங்கே வரார்" என்றான்.

தாமோதரன் சற்று தயங்க, "என்ன..ஏன் தயங்கறே!உன்னால முடியலேன்னா சொல்லு..நன் வேற ஒருத்தரை ஏற்பாடு பண்ணிக்கிறேன்"

"இல்லை தலைவா...தயங்கலே! நீங்க கிளம்புங்க.நானும், செங்கமலமும் போய்..விருந்தாளி மாளிகையை சுத்தப்படுத்திடறோம்"

"உடனே கிளம்பு தாமோதரா" என்ற மயில்வாகனன் தன் காரில் ஏறினார்.

உள்ளே நுழைந்த தாமோதரன், தன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லி, உடனே கிளம்பு என்றான்.

"என்ன அவ்வளவு அவசரம்? நீ இப்ப சாப்பிட வா"

"இல்ல செங்கமலம்..நாம போயிட்டு வந்து சாப்பிடலாம்.எதையுமே கேட்காத தலைவரு ஒரு வேலையை என்னை நம்பி ஒப்படைச்சு இருக்கார்.அதை உடனே செய்யணும்" என்றான்.

செங்கமலம், கற்பகத்தைப் பார்த்து, "நானும், அப்பாவும் போயிட்டு வரோம்..நீ ஜாக்கிரதையாய் இரும்மா" என்றாள்.

இருவரும் கிளம்பி வெளியே வந்த போது, மாடசாமி ஒரு சவாரி முடிந்து அப்பக்கம் வர, அவனிடம் விஷயத்தைக் கூறி வண்டியில் ஏறி அடுத்த ஊருக்குச் சென்றனர்.

அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் , மயில்வாகனன் கார் மீண்டும் பூங்குளத்துக்குள் நுழைந்தது.தாமோதரன் வீட்டு வாசலில் நின்றது.இறங்கி உள்ளே நுழைந்த மயில்வாகனன், "கற்பகம்..கற்பகம்" எனக் குரல் கொடுத்தான்.மயில்வாகனனைப் பார்த்ததும் சற்று அதிர்ந்தாள் கற்பகம்.

'பயப்படாதே! நான் கிளம்பிப் போனேனா..வழியில கார் மக்கர் பண்ணிடுச்சு.அதை சரி செய்து கிளம்பறதுக்குள்ள நேரமாகிப் போச்சு.தஞ்சாவூர் இனிமே போயும் பிரயோசனமில்லை.அதான் திரும்பிட்டேன்" என்றான்.பின்,
"தாமோதரன் பாவம், எனக்காக கறிக் குழம்பும், மீன் வறுவலும் செய்யச் சொல்லியிருக்கான்.அதை சாப்பிடாட்டி பாவம் நீயும் வருத்தப்படுவே..அதான்.."

"அப்பாவும், அம்மாவும் வீட்ல இல்லையே" என்றாள் கற்பகம்.

"அதனால் என்ன..நீ இருக்கியே" என்றான் அசடுவழிய....பின், "கற்பகம் பொட்டப் புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு கேட்கற பாமர ஜனங்கள் இருக்கற இந்த கிராமத்துல..நீ டாக்டருக்கு படிக்கறே! படிப்பு முடிஞ்சு ஏழை ஜனங்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கற..உன்னை எப்படி பாராட்டறதுன்னேத் தெரியலை" என்றான்

அந்த நேரம் ..ஏதோ பாடலை முணுமுனூத்துக் கொண்டே மூக்கன் வீட்டினுள் நுழைந்தான்.தாமோதரனும், செங்கமலமும் , மாடசாமி வண்டில் ஏறி வெளியே சென்றதை மூக்கன் பார்த்திருந்தான்.அவங்க வீட்டில் இல்லாதப்போ மயில்வாகனன் கார் ஏன் வந்ததுன்னு அவனுக்கு சந்தேகம் ஏற்பட அந்த விட்டிற்குள் நுழைந்திருந்தான் அவன்.

கற்பகம் நிம்மதி பெருமுச்சு விட்டாள்.பின், "வாங்க பெரியப்பா..அப்பாவும், அம்மாவும் வெளியே போயிருக்காங்க.அப்பா இவர் கட்சியைச் சேர்ந்தவர்" என்றாள் மயில்வாகனனைக் காட்டி.

"அப்படியா" என ஏதும் அறியாதவன் போலக் கேட்ட மூக்கன், "வணக்கம்ங்க.ஏம்மா, ஐயாவுக்கு சாப்பிட ஏதாவது குடுத்தியா" என்றான்.

"இல்ல பெரியப்பா..அவர் கிளம்பிட்டார்.தஞ்சாவூர் போறாராம்" என்றவள், மயில்வாகனனிடம் "சரி..நீங்க கிளம்புங்க..நான் அப்பா வந்ததும் சொல்லிடறேன்"என மயில்வாகனனை நோக்கி கை கூப்பீனாள்.

மூக்கனை. மனதிற்குள் சபித்தபடியே, மயில்வாகனன் கிளம்பினான்.

அவன் சென்றதும், "பெரியப்பா...நல்ல நேரத்துல வந்து   அந்த ஆள்கிட்ட இருந்து என்னை காப்பாத்தினீங்க" என்றாள்.

பின்னாளில் மயில்வாகனனால் ஏற்படப்போகும் விபரீதம் தெரியாமல்.

Monday, December 2, 2019

8 - சிறுபான்மையினர்

அந்தி சாயும் நேரம்..

டீக்கடையில் போட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தான் ராமன்.கீழே தரையில் குந்தியிட்டு அமர்ந்திருந்தான் மூக்கன்.

"என்ன ராமா,,பஞ்சாயத்து முடிஞ்சதுமே இங்கு வருவேன்னு எதிர்பார்த்தேன்.." என்றான் நாராயணன்.

'பஞ்சாயத்து...பஞ்சாயத்தாகவா இருந்தது.எதுக்கு பஞ்சாயத்துக் கூடியதோ..அது நடந்ததா? அந்த தாமோதரன், அப்படி..இப்படி..அரசியலை நம்ம கிராமத்துக்கும் கொண்டு வந்துட்டான் இல்ல"

"அதைவிடு அண்ணே! இரண்டு நாளா உன்ன கிராமத்துல காணும்..எங்கே போயிருந்த..காலைலதான் வந்தியா?"

"ஆமாம்..மூக்கா..வெளியூர் போயிருந்தேன்.நான் இல்லாதப்போ ஊர்ல வேற ஏதாவது விசேஷம் உண்டா?"

"அண்ணே! நாட்டு ந்டப்பு எல்லாம் நீ தானே எங்க எல்லாருக்கும் சொல்லுவ..உனக்கு..நம்ம கிராமமே நடமாடும் செய்தித்தாள்னுதானே பெயர் வைச்சு இருக்கு.செய்திகளை இங்கே முந்தித் தர்றது நீ தானே!"

"என்ன பன்னச் சொல்ற. சுதந்திரம் வந்து எவ்வளவோ அஞ்சாண்டு திட்டங்கள்னு போட்டுட்டாங்க..அப்ப இருந்து இப்ப வரைக்கும் என்ன சொல்றாங்க.எல்லா கிராமங்களுக்கும் எங்க ஆட்சியில மின்சார வசதின்னு.ஐயா,நமக்கு மின் வசதிக் கூட வேண்டாம்..குறஞ்சது    அடுத்த டவுனுக்குப் போக ஒரு பஸ் வசதியாவது செஞ்சுத்தரலாம் இல்ல.அதைக் கூட காதுல போட்டுக்க எந்த தலையும் இல்ல.இப்பத்தான் ஒரு அரசியல்வாதி தலை உள்ளே வரப்பாக்குது.பார்ப்போம்..இனிமே என்ன நடக்கப்போகுதுன்னு"

"ஊர் விசயத்தை விடுப்பா..உன் வீட்ல நடந்த விசயத்தைச் சொல்லு.உன் வீடு இரண்டு நாளா ரணகளப்படுதாமே" என்றான் நாராயணன்.

"இன்னொருத்தன் வீட்டு விசயத்தைத் தெரிஞ்சுக்க எவ்வளவு ஆசைப்பாரு.சொல்றேன்.முதல்ல ஸ்ட்ராங்கா மலாய் இல்லாம ஒரு டீ போடு..மூக்கா..டீ சாப்பிடறியா"

மூக்கனும் தலையை ஆட்ட.."நாராயணா..மூக்கனுக்கும் ஒரு டீயைப் போடு" என்றான் ராமன்.

"பாலை அடுப்புல வைச்சு இருக்கேன்..இன்னும் காயலை"

"ஆமாம்..என் வீட்டு விஷயத்தைக் கேட்டு முடிக்கிறவரை உனக்கு பால் காயாதே...சரி..சொல்றேன் கேட்டுக்க..நம்ம விட்டு ஆனந்தவள்ளிக்கிட்ட கோமளம் வந்தது தப்பாப்போச்சு." ..மூக்கன் ஏதும் புரியாது பார்க்க, "என்ன புரியலையா? சரி, புரியற மாதிரியே சொல்றேன்..ஆனா, நான் சொல்ற விஷயத்தை இங்கயே மறந்துடணும்.."

மூக்கன் தலையை ஆட்ட, பாலைக் கிளறியபடியே நாராயணனும் கேட்கத் தயாரானான்.

"நமக்குக் கோமளம்னு ஒரு தொடுப்பு இருக்கு..தெரியும் இல்ல"

"நமக்கு இல்லண்ணே..உனக்கு.."

"ஆமாம்..எனக்குத்தான்..அது என்ன பண்ணிச்சு..இரண்டு நாள் முன்னாலே வந்திடுச்சு.அதனால அந்த விஷயம் ஆனந்தவள்ளிக்குத் தெரிஞ்சுப் போச்சு.அவ வாயிலிருந்துத் தப்பிக்க ஐயா இரண்டு நாளா ஊரைவிட்டு ஜூட்"

உடன் நாரயணன் "ராமா, உனக்கு புத்தி ஏன் இப்படிப் போச்சு" என்றான்.

"உனக்கு என்ன சொல்லுவ..பொண்டாட்டி, புள்ளகளைப் பிரிஞ்சு ஊர்ல இருந்து வந்து டீக்கடை வைச்சு இருக்க.நீ ஊருக்குப் போய் அவங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு.ஆனாலும்.உன்னால அப்படி இருக்க முடியுது..ஆனா..என்னால முடியலையே.ஏன், என் புத்தி இப்படிப் போச்சுன்னு கேக்கிறியே.. எல்லாம் பணம்தான்.கோமளம் ஒண்டிக்கட்டை.எக்கச்சக்கமா சொத்து வைச்சு இருக்கு.அவ சொத்துமேல எனக்கு ஒரு கண்ணு..அதனாலதான் அவளை வளைச்சு போட்டுட்டேன்"

"ம்..அந்த ராமன் ஏக பத்தினி விரதன்.இந்த ராமன் ஏகப்பட்ட பத்தினிவிரதன்" என்ற நாராயணன், டீ போடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினான்..பின், டீயை ஒரு தம்ளரில் ஊற்றி ராமனிடம் கொடுத்துவிட்டு..ஒரு வட்டிலில் டீயை ஊற்றி மூக்கனிடம் கொண்டு வந்து வைத்தான்.

"என்ன சொன்ன..இந்த ராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்னா? பேருக்கு தகுந்த மாதிரி யார் நடந்துக்கிறாங்க.உன்னோட டீக்கடைக்குக் கூடத்தான் "காந்தி  டீ ஸ்டால்"னு பேர் வைச்சிருக்க..காந்தியோட கொள்கை என்ன...தீண்டாமை ஒழியணும்..ஆனா நீ என்ன பண்ற மூக்கன் மாதிரி ஆளுங்களுக்கு வட்டிலில் டீயைத் தர.."

"என்ன செய்யறது...ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே..அதுக்கு பயப்பட வேண்டியிருக்கே"

"நீ ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பயப்படறே! நான் என் மனசு சொல்றதுக்குக் கட்டுப்படறேன்"

இடையில் புகுந்த மூக்கன், "நான் ஒன்னு சொல்லட்டுமா? அந்த ஆண்டவன் படைச்ச சாதி இரண்டுதான்.ஒன்னு ஆண் சாதி, இன்னொன்னு பெண் சாதி.ஆனா..நம்ம மனுஷங்க என்னப் பண்ணிட்டாங்க..அவங்க..அவங்க ..வசதிக்கேத்தாப்போல, சமூக அந்தஸ்துக்காக பல சாதிகளை உண்டாக்கிக்கிட்டாங்க.உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு"

"மூக்கா..உன்னால இவ்வளவு பேசமுடியுதா? ஆமா...இது போல எல்லாம் பேச உனக்கு யார் கத்துக் கொடுத்தாங்க?"

"நம்ம அர்ச்சகர்தான்.அவர் என் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? மூக்கா...நீ எந்த விதத்திலும் யாருக்கும் குறைஞ்சவன் இல்ல.சாதி என்ன சாதி..மனுஷனா இருந்தா மனசுல நாணயம் இருக்கணும்.அன்பு, பாசம்,பக்தி இருக்கணும்.அப்படியிருக்கிறவங்க எல்லாமே உயர்ந்த சாதின்னார்"

"ஓஹோ! இப்படியெல்லாம் சொல்லி இந்த அர்ச்சகர் ஊரைக் கெடுக்கப் பார்க்கிறாரா?" என்று ராமன் சொல்லிக் கொண்டிருந்த போதே...அர்ச்சகர் அந்தப் பக்கம் வந்தார்.வந்தவர் ராமனைப் பார்த்து..

"என்ன ராமா..எப்படி இருக்க..இரன்டு நாளா ஆளைக் காணும்" என்றார்.

"மனசு சரியில்ல..அதான் ஊருக்கு வெளியே எல்லையிலே உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே அய்யனார் கருப்பண்ணசாமி..அவருக்கு பக்கத்திலே இரண்டுநாள் உட்கார்ந்துட்டேன்.ஆனா, அதுக்குள்ள உங்களைமாதிரி ஆட்கள், என்னையும் ஒரு சாமியார்னு நினைச்சு தேங்காய்,பழம், பூ எல்லாம் எடுத்துக்கிணு தரிசனம் செய்ய வந்துட்டாங்க"

"அதானே பார்த்தேன்.எதைப்பேசினாலும் கடைசியில உன்னோட நாத்திக வாதத்தைக் கொண்டு வந்து முடிச்சிடுவியே!  சரி..சரி..உன் எண்ணத்த ,நடவடிக்கையை தடுக்க நான் யார்..ஆனா பாரு..ஒரு விஷயம் என்னால சொல்லாம இருக்க முடியலே! உன்னைப் பத்தி, அரசல், புரசலா சில விஷயத்தைக் கேள்விப்பட்டேன்.உனக்கு ஒன்னு சொல்ல ஆசைப்படறேன்..நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்..சரி..அதை மறக்க வீட்டை விட்டா வேற இடமில்லை.எந்தப் பிரச்னையும் இல்லாத வீடுதான் மனுஷனுக்கு பலம்.அதான் அவனோட வளர்ச்சிக்கு அடிப்படை"

"போச்சுடா..அர்ச்சகர் பிரசங்கம் செய்ய ஆரம்பிச்சுட்டார்.நாம் இனிமே இங்கே இருக்க முடியாது.ஓடிட வேண்டியதுதான்.நாராயணா...உனக்கு  ஒரு விஷயம் சொல்லட்டா.."முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்..மூன்று மழை பெய்யுமடா மாதம்.இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்..இவர் ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார்" இப்ப புரியுதா?நாட்டுல ஏன் மழை பெய்யறதில்லைன்னு"

ராமன் சொன்னதைக் கேட்ட அர்ச்சகர்,தன் காதுகளைப் பொத்திக்கொண்டு"உன் கிட்ட பேச வந்தேன் பாரு..என் புத்தியை ஜோட்டால அடிக்கணும்" என்றவாறே அந்த இடத்தை விட்டு அகன்றார்..

சென்றுக் கொண்டிருந்தவரை நோக்கி ராமன், "ஒரு ஜோட்டால அடிச்சுக்கிட்டா இன்னொரு ஜோட்டை என்னை செய்வேள்?" என்றான் கிண்டலாக.

ராமன், அர்ச்சகரைக் கிண்டல் செய்வதைப் பார்த்த மூக்கன், சமுதாயத்தில் தன் இனம் மட்டுமே தவிக்கவில்லை..உயர் இனம் என சொல்லித் திரியும் சிலரால்,அவர்கள் மொத்த இனமும் அவமானப்படுகிறதே என வருந்தி, "அந்த ஜோட்டை உங்கக்கிட்ட தருவார் அடிச்சுக்க" என்றான்.

"மூக்கா! நீ ஏன் பேச மாட்டே! என் காசுல டீ சாப்பிட்ட இல்ல..அதான் இப்படி பேசறே..அர்ச்சகரை சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது?"

இதற்கு  நாராயணன் "ராமா..இந்த பிராமண துவேசத்தை என்னிக்குத்தான் விடப்போறேன்னு தெரியலை.உன்னைச் சொல்லித் தப்பில்லை.நாட்டில அரசியல்வாதிங்க எல்லாம்..பிராமண சமுதாயத்தைப் பத்தி இப்படி ஒரு தப்பான எண்னத்தை மக்கள் மனசுல விதைச்சுட்டாங்க.நீ அன்னிக்கு இங்க வைச்சுட்டுப் போன பேப்பரை படிச்சேன்.அதுல போட்டு இருந்தது..இந்திய ஜனத்தொகையில நாலு சதவிகிதம் தான் பிராமணர்களாம்.அவங்களும் சிறுபான்மையினர்தான்.அவங்களைக் கண்டு உங்களுக்கு என்ன பயம்?" என்றான்

"ஓஹோ..நாராயணா..உன்னையும் அந்த அர்ச்சகர் வளைச்சுப் போட்டுட்டாரா..நான் தீர்மானம் பண்ணிட்டேன்.இனிமே பேப்பர்ல வர செய்திகளையெல்லாம் சொல்லி..உங்க இரண்டு பேரையும் முன்னேற விடக்கூடாதுன்னு" என்று சொன்னபடியே டீக்கடையை விட்டு நடந்தான் ராமன்.



Friday, November 29, 2019

7 - செத்துப் போ..செத்துப் போ

தாமோதரனைப் பார்க்க அரசியல்வாதி மயில்வாகனன் வந்தது, அவருக்காகத் தயாரான விருந்தை அவர் உண்ணாமல் சென்றது ஆகியவை கை, கால்கள் முளைத்து வித விதமான வதந்திகளாக கிராமம் முழுதும் உலா வர ஆரம்பித்தது.

தாமோதரன் ஒரு தலித் என்பதாலேயே, அவன் வசிக்கும் பகுதிக்கு மயில்வாகனன் வந்தான் என்றும், எதிர்காலத்தில் தன் வாக்கு வங்கிக்காக அவன் அப்படி செய்தான் என்றும்,சாதி ஆதிக்கத்தால்,அவ்ன் வீட்டில் சாப்பிட மட்டும் மனம் ஒப்பவில்லை என்றும் பெரியவர்கள் பலர் பேச அரம்பித்து இருந்தனர்..

தாமோதரன், மயில்வாகனன் சார்ந்த கட்சியின் செயலாளர் ஆகி விட்டான் என்றனர் சிலர்.

எது எப்படியோ, வெண்கலக் கடையில் யானை புகுந்தால் என்னவாகுமோ,..அதுபோல ஆனது மயில்வாகனனின் பூங்குளம் வருகை.

இதனிடையே, பண்ணையார் வயலில் விதை விதைக்கும் பணியும் நடந்து, மதிய உணவிற்காக சற்று நிறுத்தப்பட்டது.

மதிய வெயில் தாங்காமல், பண்ணையார் குடை பிடித்து மெதுவாக வந்து கோயில் அருகில் அரசமரத்தடி பீடத்தில் அமர்ந்தார்.

அவரைப் பார்த்த அர்ச்சகர், ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தார்.அதை வாங்கிக் குடித்த பண்ணை, "அர்ச்சகரே! வெயில் தாங்கலை.கத்திரியே பரவாயில்லை போல இருக்கு.ஆடியில இவ்வளவு வெயிலா"என்றார்.

"ஆடியில வெயில் அடிக்கையில், காற்றும் இருந்தா ஐப்பசி மாசம் மழை இருக்கும்னு சொல்லுவாங்க! இந்த வருஷம் மழை பொய்க்கக் கூடாது' என்று சொல்லியபடியே, பண்ணையார் கையில் இருந்த சொம்பினை வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

"  அப்படி இருந்தாத்தான் வயல்கள்ல வெளச்சல் நல்லா இருக்கும்" என்ற பண்ணையிடம்,

 "சாப்பிட்டாச்சா" என்றார் அர்ச்சகர்.

"இல்லை..வீட்ல இருந்து தனலட்சுமி கொண்டுவரும் இப்ப.." என்ற பண்ணை "உச்சி நேரம் வந்தாச்சே..நீங்க நடை சாத்தலையா?"

"கிளம்ப வேண்டியதுதான்.நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க" என்ற கூறியவாறே அர்ச்சகர்,சொம்பை எடுத்துக் கொண்டு கோயிலினுள் சென்று வைத்துவிட்டு....கோயிலின் கதவுகளை சாத்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்..

இடைப்பட்ட நேரத்தில்..அரசமரத்தடியில் மனைவி தனலட்சுமிக்குக் காத்துக் கொண்டிருந்த பண்ணையார், கைகளை தலைகணைகளாக ஆக்கிக் கொண்டு படுத்திருந்தார்.அசதி அதிகமாய் இருந்ததால் அவரை அறியாமல் நித்திராதேவி ஆட்கொண்டாள்.

திடீரென..இருள் சூழ..எலும்புக்கூடு ஒன்று எழுந்து..இங்கும் அங்கும் ஆட்டம் போட்டது.பண்ணையாரின் மீது ஏறி அமர்ந்து, அவர் கழுத்தினை நெரிக்கத் தொடங்கியது...உடன்.."செத்துப் போ...செத்துப்போ"ன்னு கூக்குரல் இட்டது.பண்ணையாருக்கு மூச்சு முட்டியது..

"என்னை விடு...என்னை விடு...." என அலறியபடியே கண் விழித்தார் பண்ணை.

பண்ணையாரின் அலறலைக் கேட்டு..அருகே இருந்த டீக்கடையில் இருந்து நாராயணன் ஓடி வந்தான்..

"பண்ணை...என்னாச்சு?" என அவரை ஆசுவாசப்படுத்த..

"நாராயணா...எலும்புக்கூடு பேய்...எலும்புக்கூடு பேய்..என்னை கொலை செய்யப்பாக்குது" என்றார் பதட்டத்துடன்.

"அட போங்க பண்ணை..பேயாவது..பிசாசாவது..இந்தப் பகல் வேளையில இப்படி ஒரு கனவா? ..இருங்க குடிக்க தண்ணீ கொண்டுவரேன்..குடிச்சுட்டு படுங்க" என்ற படியே கடையை நோக்கிச் சென்றான்.    

Tuesday, November 26, 2019

6.- கற்பகம்

பண்ணையார் வயலில் மூக்கனும் அவனுடன் சேர்ந்து அவனது சேரியில் இருக்கும் நாலுபேரும் சேற்றிலும் சகதியிலும் நடந்தவாறே வயலில் விதைநெல்லை விதைத்துக் கொண்டிருந்தனர்.

அவை முளைத்ததும்,சற்றே வளர்ந்ததும் கட்டு..கட்டாக பிடுங்கி வயல் முழுதும் நாற்று நடப்படும்.அவை வளரும்போது அடி உரமிட வேண்டும். பின் பயிர்களிடையே விளைந்திருக்கும் களை எடுக்கவேண்டும்...இதனிடையே வானமும் பொய்க்ககூடாது மழையும் அளவிற்கு அதிகமாக பொழியக்கூடாது..

கிராமத்து விவசாயிகளின் அன்றாடம் படும் போராட்ட வாழ்வினைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் அரசியல்வாதிகள் பிழைப்பும் ..நகர மக்களின் வயிறும் நிரம்பிக்கொண்டுதான் இருக்கிறன.

வயலை ஒட்டி இருந்த மரத்தடியில் ஒரு நாற்காலி இடப்பட்டு அதில் பண்ணையார் அமர்ந்திருந்தார்,

பக்கத்தில் சில சிறுவர்கள் பம்பரம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் செம்மண் சாலையில் புழுதி ஏற்படுத்தியவாறு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.காரைப் பார்த்த சிறுவர்கள்..பம்பர ஆட்டத்தை மறந்து 'ஓ'..என கூச்சலிட்டபடியே காரின் பின்னால் ஓட ஆரம்பித்தார்கள்.

பண்ணையாருக்கு புரிந்துவிட்டது,அரசியல்வாதி மயில்வாகனன்,தாமோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் என,,

தாமோதரன் வீட்டு வெளியே கார் நிற்க...ஒரு சில இளைஞர்கள் கூட்டமும் கூடிவிட்டது.

வீட்டிலிருந்து வெளியே வந்த தாமோதரன், மயில்வாகனனைக்  கண்டதும், "தலைவர்" எனக் குரல் கொடுக்க, இளைஞர்கள் கூட்டம் "வாழ்க" எனக் குரல் கொடுத்தனர்.

"தீண்டாமையை ஒழிக்க வந்துள்ள தலைவன்"

"வாழ்க..வாழ்க"

நலிந்தோரின் நலம் காக்கும் தலைவன்"

"வாழ்க..வாழ்க"

இளைஞர்களும், சிறுவர்களும் கோஷமிட, தலைவனோ யாரையும் தீண்டாமல், அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டபடியே, தாமோதரனைப் பார்த்து, "தாமோதரா! உள்ளே போகலாமா?" என்றார்.

"ஒரு நிமிஷம் தலைவா" என்ற தாமோதரன் , உள்ளே நோக்கி "செங்கமலம்" என மனைவிக்குக் குரல் கொடுக்க..செங்கமலமும், "இதோ வர்றேங்க.." என்றவாறே, மகள் கற்பகம் பின்தொடர ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.

செங்கமலமும், கற்பகமும் ஆரத்தி எடுக்க, தாமோதரனிடம் தலைவர் கைகாட்ட, தாமோதரன் அவரிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.தலைவர் அதை செங்கமலத்திடம் கொடுத்தார்.

பின், செங்கமலம்,தாமோதரன்,மயில்வாகனன் உள்ளே செல்ல..கற்பகம் ஆரத்தியை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் கொட்டிவிட்டு உள்ளே சென்றாள் முகம் கடு கடுத்த படியே.

ஆம்..அங்கு நடக்கும் எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

வீட்டினுள் இருந்த மர நாற்காலி ஒன்றை , தாமோதரன் தூசு தட்ட, தலைவர் அதில் அமர்ந்தார்.

உள்ளே நுழைந்த கற்பகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, "தாமோதரா! நீ கட்சி ஆஃபீசுக்கே வரதில்லையாமே! உம்மேல புகார்கள் வந்துக் கிட்டு இருக்கு.."என்றவர்.."நல்லாத்தானே இருக்கே..உன்னை வைச்சு இந்த கிராமத்துல என்னன்னவோ செய்யணும் திட்டம் போட்டிருக்கேன்" 

"உங்க தயவுல நல்லா இருக்கேன் ஐயா! இப்ப வயக்காட்டுல விதை விதைக்கற நேரம்.அதுதான் வேலை அதிகம்.கட்சி ஆஃபிசுக்கு வர முடியல" என்றான்.

"ஏன்யா..எல்லரும் உன்னைப் போல விதை விதைக்கிறோம்..களைப்புடுங்கறோம்னு புடுங்கப்போயிட்டா..கட்சியோட பொது வேலைகளையெல்லாம் செய்யறது யாரு?" என்றான் இளக்காரமாக.

"மன்னிச்சுக்கங்க ஐயா.. நாளைல இருந்து எந்த வேலைன்னாலும்..அதை அப்படியே விட்டுட்டு கட்சி ஆபீசுக்கு வந்துடறேன்" என்றவன், "கற்பகம்..கற்பகம்" என குரல் கொடுத்தான் தாமோதரன்.

கறி குழம்பும், மீன் வறுவலும் கமகமக்கும் வாசனையை மோப்பம் பிடித்தவாறே..கற்பகம் வருகிறாளா? எனப் பார்த்தான் மயில்வாகனன்.

அடுக்களையில் இருந்து கற்பகம் மெதுவாக வெளியே வந்தாள்."தலைவா..இது என்னோட ஒரே ஒரு பொண்ணு. பேரு கற்பகம்" என்றான் தாமோதரன்.

"ஓ...உன் பொண்ணா..கற்பகம்..."  என பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தவன்.."பேர் மட்டுமில்ல  தாமோதரா..பொண்ணும் அம்சமாகவே இருக்கா" என்றார் ஜொள்ளுடன்.

கற்பகம் தந்தையைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

"இதோ பாரு தாமோதரா..உன் பொண்ணைப் பார்த்ததுல இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்றவாறே..கற்பகத்திடம், "கண்ணு என்ன பண்ற?" என்றான்.

கற்பகம் ஏதும் பதில் சொல்லாமல் நிற்க, தாமோதரனே" தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்ல டாக்டருக்கு படிக்குதுங்க"என்றான்.

"ஆமாம்..ஆமாம்...மறந்துட்டேனே..நான் தானே..மெடிகல் காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்தென்"

"நீங்க ஒன்னும் வாங்கித் தரலே..எனக்கு மெரிட்லதான் இடம் கிடைச்சுது" என்றாள் 'வெடுக்'கென கற்பகம்.

சற்றே அதிர்ந்த மயில்வாகனன், "என்ன தாமோதரா! உன் பொண்ணும் இப்படிச் சொல்லுது.."என்றான்.

தடுமாறிப்போன தாமோதரன் "தலைவா! அது சின்னப்பொண்ணு..அதுக்கு ஒன்னும் தெரியாது..நீங்க இல்லேன்னா காலேஜ்ல இடம் கிடைச்சிருக்குமா?" என்றவன், கற்பகத்தைப் பார்த்து,"கற்பகம், தலைவர் எது சொன்னாலும்..எதுத்து பேசக்கூடாது.தலையாட்டணும்.அதுதான் கட்சித் தொண்டனோட வேலை.தலைவர் எதைச் சொன்னாலும் அதில் நியாயம் இருக்கும்" என்றான்.

'சரி விடு...சின்னப் பொண்ணு..விவரம் தெரியாம பேசுது..நான் கிளம்பறேன்"

"என்ன தலைவா..அதுக்குள்ள கிளம்பறீங்க! உங்களுக்காக இளம் வெள்ளாட்டை வெட்டி கறிக்குழம்பு...குளத்து மீனைப் புடிச்சாந்து மீன் வறுவல் எல்லாம் செங்கமலம் செஞ்சு வைச்சிருக்கு.சாப்பிட்டுட்டுப் போகலாம்." என்றவன்.."கற்பகம்..தலைவருக்கு இலையைப் போடு" என்றான்.

கற்பகம் அங்கிருந்து நகர.."தாமோதரா..உனக்கு இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இருக்கான்னும் எனக்கு இவ்வளவுநாளாத் தெரியலையே!" என்றான் மயில்வாகனன்.

அடுக்களைக்குள் நுழைந்த கற்பகம் அம்மாவிடம், "பொண்ணு இருக்கறதேத் தெரியாதாம்.ஆனா..தெரியாத பொண்ணுக்கு மெடிகல் சீட் வாங்கிக் கொடுத்தாராம்" என்றாள்.

"அதை விடும்மா...இந்த அரசியல், அரசியல்வாதிங்கப் பத்தி எல்லாம் தெரிஞ்சதாலேத்தான் அவங்களை நம்ம கிராமத்துல அண்டவிடாம வைச்சிருந்தாங்க.எல்லா நல்ல விஷயங்களையும் நாங்கதான் செஞ்சோம்னு சொல்லுவாங்க.எல்லாத்துலேயும் விளம்பரம்தான்.எழவு வீட்டுக்குப் போனாக்கூட..அங்க செத்தவனுக்குக் கிடைக்கிற மரியாதையைப் பார்த்து..அடடா..நாம பொணமா இல்லையேன்னு நினைப்பாங்க.உங்கப்பாவுக்கு பிடிச்ச சனியாலத்தான் இப்படியெல்லாம் நடக்குது.நாம சொன்னா அவர் கேக்கவாப் போறாரு" என்றாள் செங்கமலம்.

வெளியே தாமோதரனிடம் பேசிக்கொண்டிருந்த   மயில்வாகனன்,"என்ன தாமோதரா...நான் கேட்டதற்கு பதிலே சொல்லலை.உன் பொண்ணைப் பத்தி ஏன் இவ்வளவு நாளா சொல்லலை" என்றான்.

"தலைவா..உனக்கு ஊர் கவலையே பெரிய கவலை.இதுல என் குடும்பக் கவலையும் எதுக்குன்னு தான்..." என இழுத்தான்..

"டாக்டருக்குப் படிக்கணும்னா ரொம்ப செலவாகுமே..எபப்டி சமாளிக்கிற"

"அதை ஏன் தலைவா..கேட்கறீங்க? இன்னிக்கு இந்த உடம்புல உசுரு இருக்குன்னா..அது உனக்காகவும்..என் பொண்ணுக்காகவும்தான்.உங்க ரெண்டு பேருக்காக என் உசுரையும் கொடுப்பேன்"

"சாப்பிட வரலையா?" என்ற செங்கமலத்தின் குரல் கேட்க,,

"தாமோதரா...இன்னொரு நாள் வந்து சாப்படறேன்.இன்னிக்கு தஞ்சாவூருக்கு மந்திரி வர்றார்.கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார்.எனக்கு சாப்பாடு அவரோடதான்..நான் கிளம்பறேன்.அடிக்கடி கட்சி ஆஃபிசுக்கு வா.உன் பொண்ணையும் அழைச்சுட்டு வா.அவளை நம்ம கட்சிக்கு மாணவரணி செயலாளரா ஆக்கிடறேன்.அப்பறமா..நம்ம கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே ஆக்கிப்புடறேன்"

இதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த கற்பகம் வெளியே வந்து, "எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம்.என்னோட லட்சியம் நான் ஒரு டாக்டராக ஆகணும்.அவ்வளவுதான்.இந்த அரசியல் சாக்கடை எல்லாம் என் அப்பாவோட போகட்டும்" என்றாள்.

"தலைவர் கிட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா" என்ற தாமோதரனிடம், " விடு தாமோதரா..இதோபாரு கற்பகம்..அரசியல் எதிர்காலத்திலே அரசியல்வாதிங்கக் கிட்ட இருக்கக்கூடாதுன்னுட்டுதான், உன்னைப் போல படிச்சவங்களைக் கட்சிக்குள்ள கொண்டு வரேன்" என்றான் மயில்வாகனன்.

"அரசியல், அரசியல்வாதிங்கக் கிட்ட இருந்தா தப்பில்லை.அயோக்கியர்கள் கிட்ட தான் இருக்கக் கூடாது"

அதைக் கேட்டு, அசடு வழிந்த படியே.."நல்லாச் சொன்ன பொண்ணு..தாமோதரா..இப்பதான் இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்ற படியே வில்லத்தனமாக சிரித்தபடியே வெளியே செல்ல, தாமோதரன் அவரைப் பின் தொடர்ந்தான்.