Friday, November 29, 2019

7 - செத்துப் போ..செத்துப் போ

தாமோதரனைப் பார்க்க அரசியல்வாதி மயில்வாகனன் வந்தது, அவருக்காகத் தயாரான விருந்தை அவர் உண்ணாமல் சென்றது ஆகியவை கை, கால்கள் முளைத்து வித விதமான வதந்திகளாக கிராமம் முழுதும் உலா வர ஆரம்பித்தது.

தாமோதரன் ஒரு தலித் என்பதாலேயே, அவன் வசிக்கும் பகுதிக்கு மயில்வாகனன் வந்தான் என்றும், எதிர்காலத்தில் தன் வாக்கு வங்கிக்காக அவன் அப்படி செய்தான் என்றும்,சாதி ஆதிக்கத்தால்,அவ்ன் வீட்டில் சாப்பிட மட்டும் மனம் ஒப்பவில்லை என்றும் பெரியவர்கள் பலர் பேச அரம்பித்து இருந்தனர்..

தாமோதரன், மயில்வாகனன் சார்ந்த கட்சியின் செயலாளர் ஆகி விட்டான் என்றனர் சிலர்.

எது எப்படியோ, வெண்கலக் கடையில் யானை புகுந்தால் என்னவாகுமோ,..அதுபோல ஆனது மயில்வாகனனின் பூங்குளம் வருகை.

இதனிடையே, பண்ணையார் வயலில் விதை விதைக்கும் பணியும் நடந்து, மதிய உணவிற்காக சற்று நிறுத்தப்பட்டது.

மதிய வெயில் தாங்காமல், பண்ணையார் குடை பிடித்து மெதுவாக வந்து கோயில் அருகில் அரசமரத்தடி பீடத்தில் அமர்ந்தார்.

அவரைப் பார்த்த அர்ச்சகர், ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தார்.அதை வாங்கிக் குடித்த பண்ணை, "அர்ச்சகரே! வெயில் தாங்கலை.கத்திரியே பரவாயில்லை போல இருக்கு.ஆடியில இவ்வளவு வெயிலா"என்றார்.

"ஆடியில வெயில் அடிக்கையில், காற்றும் இருந்தா ஐப்பசி மாசம் மழை இருக்கும்னு சொல்லுவாங்க! இந்த வருஷம் மழை பொய்க்கக் கூடாது' என்று சொல்லியபடியே, பண்ணையார் கையில் இருந்த சொம்பினை வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

"  அப்படி இருந்தாத்தான் வயல்கள்ல வெளச்சல் நல்லா இருக்கும்" என்ற பண்ணையிடம்,

 "சாப்பிட்டாச்சா" என்றார் அர்ச்சகர்.

"இல்லை..வீட்ல இருந்து தனலட்சுமி கொண்டுவரும் இப்ப.." என்ற பண்ணை "உச்சி நேரம் வந்தாச்சே..நீங்க நடை சாத்தலையா?"

"கிளம்ப வேண்டியதுதான்.நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க" என்ற கூறியவாறே அர்ச்சகர்,சொம்பை எடுத்துக் கொண்டு கோயிலினுள் சென்று வைத்துவிட்டு....கோயிலின் கதவுகளை சாத்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்..

இடைப்பட்ட நேரத்தில்..அரசமரத்தடியில் மனைவி தனலட்சுமிக்குக் காத்துக் கொண்டிருந்த பண்ணையார், கைகளை தலைகணைகளாக ஆக்கிக் கொண்டு படுத்திருந்தார்.அசதி அதிகமாய் இருந்ததால் அவரை அறியாமல் நித்திராதேவி ஆட்கொண்டாள்.

திடீரென..இருள் சூழ..எலும்புக்கூடு ஒன்று எழுந்து..இங்கும் அங்கும் ஆட்டம் போட்டது.பண்ணையாரின் மீது ஏறி அமர்ந்து, அவர் கழுத்தினை நெரிக்கத் தொடங்கியது...உடன்.."செத்துப் போ...செத்துப்போ"ன்னு கூக்குரல் இட்டது.பண்ணையாருக்கு மூச்சு முட்டியது..

"என்னை விடு...என்னை விடு...." என அலறியபடியே கண் விழித்தார் பண்ணை.

பண்ணையாரின் அலறலைக் கேட்டு..அருகே இருந்த டீக்கடையில் இருந்து நாராயணன் ஓடி வந்தான்..

"பண்ணை...என்னாச்சு?" என அவரை ஆசுவாசப்படுத்த..

"நாராயணா...எலும்புக்கூடு பேய்...எலும்புக்கூடு பேய்..என்னை கொலை செய்யப்பாக்குது" என்றார் பதட்டத்துடன்.

"அட போங்க பண்ணை..பேயாவது..பிசாசாவது..இந்தப் பகல் வேளையில இப்படி ஒரு கனவா? ..இருங்க குடிக்க தண்ணீ கொண்டுவரேன்..குடிச்சுட்டு படுங்க" என்ற படியே கடையை நோக்கிச் சென்றான்.    

No comments:

Post a Comment