Tuesday, November 26, 2019

6.- கற்பகம்

பண்ணையார் வயலில் மூக்கனும் அவனுடன் சேர்ந்து அவனது சேரியில் இருக்கும் நாலுபேரும் சேற்றிலும் சகதியிலும் நடந்தவாறே வயலில் விதைநெல்லை விதைத்துக் கொண்டிருந்தனர்.

அவை முளைத்ததும்,சற்றே வளர்ந்ததும் கட்டு..கட்டாக பிடுங்கி வயல் முழுதும் நாற்று நடப்படும்.அவை வளரும்போது அடி உரமிட வேண்டும். பின் பயிர்களிடையே விளைந்திருக்கும் களை எடுக்கவேண்டும்...இதனிடையே வானமும் பொய்க்ககூடாது மழையும் அளவிற்கு அதிகமாக பொழியக்கூடாது..

கிராமத்து விவசாயிகளின் அன்றாடம் படும் போராட்ட வாழ்வினைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் அரசியல்வாதிகள் பிழைப்பும் ..நகர மக்களின் வயிறும் நிரம்பிக்கொண்டுதான் இருக்கிறன.

வயலை ஒட்டி இருந்த மரத்தடியில் ஒரு நாற்காலி இடப்பட்டு அதில் பண்ணையார் அமர்ந்திருந்தார்,

பக்கத்தில் சில சிறுவர்கள் பம்பரம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் செம்மண் சாலையில் புழுதி ஏற்படுத்தியவாறு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.காரைப் பார்த்த சிறுவர்கள்..பம்பர ஆட்டத்தை மறந்து 'ஓ'..என கூச்சலிட்டபடியே காரின் பின்னால் ஓட ஆரம்பித்தார்கள்.

பண்ணையாருக்கு புரிந்துவிட்டது,அரசியல்வாதி மயில்வாகனன்,தாமோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் என,,

தாமோதரன் வீட்டு வெளியே கார் நிற்க...ஒரு சில இளைஞர்கள் கூட்டமும் கூடிவிட்டது.

வீட்டிலிருந்து வெளியே வந்த தாமோதரன், மயில்வாகனனைக்  கண்டதும், "தலைவர்" எனக் குரல் கொடுக்க, இளைஞர்கள் கூட்டம் "வாழ்க" எனக் குரல் கொடுத்தனர்.

"தீண்டாமையை ஒழிக்க வந்துள்ள தலைவன்"

"வாழ்க..வாழ்க"

நலிந்தோரின் நலம் காக்கும் தலைவன்"

"வாழ்க..வாழ்க"

இளைஞர்களும், சிறுவர்களும் கோஷமிட, தலைவனோ யாரையும் தீண்டாமல், அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டபடியே, தாமோதரனைப் பார்த்து, "தாமோதரா! உள்ளே போகலாமா?" என்றார்.

"ஒரு நிமிஷம் தலைவா" என்ற தாமோதரன் , உள்ளே நோக்கி "செங்கமலம்" என மனைவிக்குக் குரல் கொடுக்க..செங்கமலமும், "இதோ வர்றேங்க.." என்றவாறே, மகள் கற்பகம் பின்தொடர ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.

செங்கமலமும், கற்பகமும் ஆரத்தி எடுக்க, தாமோதரனிடம் தலைவர் கைகாட்ட, தாமோதரன் அவரிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.தலைவர் அதை செங்கமலத்திடம் கொடுத்தார்.

பின், செங்கமலம்,தாமோதரன்,மயில்வாகனன் உள்ளே செல்ல..கற்பகம் ஆரத்தியை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் கொட்டிவிட்டு உள்ளே சென்றாள் முகம் கடு கடுத்த படியே.

ஆம்..அங்கு நடக்கும் எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

வீட்டினுள் இருந்த மர நாற்காலி ஒன்றை , தாமோதரன் தூசு தட்ட, தலைவர் அதில் அமர்ந்தார்.

உள்ளே நுழைந்த கற்பகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, "தாமோதரா! நீ கட்சி ஆஃபீசுக்கே வரதில்லையாமே! உம்மேல புகார்கள் வந்துக் கிட்டு இருக்கு.."என்றவர்.."நல்லாத்தானே இருக்கே..உன்னை வைச்சு இந்த கிராமத்துல என்னன்னவோ செய்யணும் திட்டம் போட்டிருக்கேன்" 

"உங்க தயவுல நல்லா இருக்கேன் ஐயா! இப்ப வயக்காட்டுல விதை விதைக்கற நேரம்.அதுதான் வேலை அதிகம்.கட்சி ஆஃபிசுக்கு வர முடியல" என்றான்.

"ஏன்யா..எல்லரும் உன்னைப் போல விதை விதைக்கிறோம்..களைப்புடுங்கறோம்னு புடுங்கப்போயிட்டா..கட்சியோட பொது வேலைகளையெல்லாம் செய்யறது யாரு?" என்றான் இளக்காரமாக.

"மன்னிச்சுக்கங்க ஐயா.. நாளைல இருந்து எந்த வேலைன்னாலும்..அதை அப்படியே விட்டுட்டு கட்சி ஆபீசுக்கு வந்துடறேன்" என்றவன், "கற்பகம்..கற்பகம்" என குரல் கொடுத்தான் தாமோதரன்.

கறி குழம்பும், மீன் வறுவலும் கமகமக்கும் வாசனையை மோப்பம் பிடித்தவாறே..கற்பகம் வருகிறாளா? எனப் பார்த்தான் மயில்வாகனன்.

அடுக்களையில் இருந்து கற்பகம் மெதுவாக வெளியே வந்தாள்."தலைவா..இது என்னோட ஒரே ஒரு பொண்ணு. பேரு கற்பகம்" என்றான் தாமோதரன்.

"ஓ...உன் பொண்ணா..கற்பகம்..."  என பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தவன்.."பேர் மட்டுமில்ல  தாமோதரா..பொண்ணும் அம்சமாகவே இருக்கா" என்றார் ஜொள்ளுடன்.

கற்பகம் தந்தையைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

"இதோ பாரு தாமோதரா..உன் பொண்ணைப் பார்த்ததுல இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்றவாறே..கற்பகத்திடம், "கண்ணு என்ன பண்ற?" என்றான்.

கற்பகம் ஏதும் பதில் சொல்லாமல் நிற்க, தாமோதரனே" தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்ல டாக்டருக்கு படிக்குதுங்க"என்றான்.

"ஆமாம்..ஆமாம்...மறந்துட்டேனே..நான் தானே..மெடிகல் காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்தென்"

"நீங்க ஒன்னும் வாங்கித் தரலே..எனக்கு மெரிட்லதான் இடம் கிடைச்சுது" என்றாள் 'வெடுக்'கென கற்பகம்.

சற்றே அதிர்ந்த மயில்வாகனன், "என்ன தாமோதரா! உன் பொண்ணும் இப்படிச் சொல்லுது.."என்றான்.

தடுமாறிப்போன தாமோதரன் "தலைவா! அது சின்னப்பொண்ணு..அதுக்கு ஒன்னும் தெரியாது..நீங்க இல்லேன்னா காலேஜ்ல இடம் கிடைச்சிருக்குமா?" என்றவன், கற்பகத்தைப் பார்த்து,"கற்பகம், தலைவர் எது சொன்னாலும்..எதுத்து பேசக்கூடாது.தலையாட்டணும்.அதுதான் கட்சித் தொண்டனோட வேலை.தலைவர் எதைச் சொன்னாலும் அதில் நியாயம் இருக்கும்" என்றான்.

'சரி விடு...சின்னப் பொண்ணு..விவரம் தெரியாம பேசுது..நான் கிளம்பறேன்"

"என்ன தலைவா..அதுக்குள்ள கிளம்பறீங்க! உங்களுக்காக இளம் வெள்ளாட்டை வெட்டி கறிக்குழம்பு...குளத்து மீனைப் புடிச்சாந்து மீன் வறுவல் எல்லாம் செங்கமலம் செஞ்சு வைச்சிருக்கு.சாப்பிட்டுட்டுப் போகலாம்." என்றவன்.."கற்பகம்..தலைவருக்கு இலையைப் போடு" என்றான்.

கற்பகம் அங்கிருந்து நகர.."தாமோதரா..உனக்கு இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இருக்கான்னும் எனக்கு இவ்வளவுநாளாத் தெரியலையே!" என்றான் மயில்வாகனன்.

அடுக்களைக்குள் நுழைந்த கற்பகம் அம்மாவிடம், "பொண்ணு இருக்கறதேத் தெரியாதாம்.ஆனா..தெரியாத பொண்ணுக்கு மெடிகல் சீட் வாங்கிக் கொடுத்தாராம்" என்றாள்.

"அதை விடும்மா...இந்த அரசியல், அரசியல்வாதிங்கப் பத்தி எல்லாம் தெரிஞ்சதாலேத்தான் அவங்களை நம்ம கிராமத்துல அண்டவிடாம வைச்சிருந்தாங்க.எல்லா நல்ல விஷயங்களையும் நாங்கதான் செஞ்சோம்னு சொல்லுவாங்க.எல்லாத்துலேயும் விளம்பரம்தான்.எழவு வீட்டுக்குப் போனாக்கூட..அங்க செத்தவனுக்குக் கிடைக்கிற மரியாதையைப் பார்த்து..அடடா..நாம பொணமா இல்லையேன்னு நினைப்பாங்க.உங்கப்பாவுக்கு பிடிச்ச சனியாலத்தான் இப்படியெல்லாம் நடக்குது.நாம சொன்னா அவர் கேக்கவாப் போறாரு" என்றாள் செங்கமலம்.

வெளியே தாமோதரனிடம் பேசிக்கொண்டிருந்த   மயில்வாகனன்,"என்ன தாமோதரா...நான் கேட்டதற்கு பதிலே சொல்லலை.உன் பொண்ணைப் பத்தி ஏன் இவ்வளவு நாளா சொல்லலை" என்றான்.

"தலைவா..உனக்கு ஊர் கவலையே பெரிய கவலை.இதுல என் குடும்பக் கவலையும் எதுக்குன்னு தான்..." என இழுத்தான்..

"டாக்டருக்குப் படிக்கணும்னா ரொம்ப செலவாகுமே..எபப்டி சமாளிக்கிற"

"அதை ஏன் தலைவா..கேட்கறீங்க? இன்னிக்கு இந்த உடம்புல உசுரு இருக்குன்னா..அது உனக்காகவும்..என் பொண்ணுக்காகவும்தான்.உங்க ரெண்டு பேருக்காக என் உசுரையும் கொடுப்பேன்"

"சாப்பிட வரலையா?" என்ற செங்கமலத்தின் குரல் கேட்க,,

"தாமோதரா...இன்னொரு நாள் வந்து சாப்படறேன்.இன்னிக்கு தஞ்சாவூருக்கு மந்திரி வர்றார்.கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார்.எனக்கு சாப்பாடு அவரோடதான்..நான் கிளம்பறேன்.அடிக்கடி கட்சி ஆஃபிசுக்கு வா.உன் பொண்ணையும் அழைச்சுட்டு வா.அவளை நம்ம கட்சிக்கு மாணவரணி செயலாளரா ஆக்கிடறேன்.அப்பறமா..நம்ம கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே ஆக்கிப்புடறேன்"

இதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த கற்பகம் வெளியே வந்து, "எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம்.என்னோட லட்சியம் நான் ஒரு டாக்டராக ஆகணும்.அவ்வளவுதான்.இந்த அரசியல் சாக்கடை எல்லாம் என் அப்பாவோட போகட்டும்" என்றாள்.

"தலைவர் கிட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா" என்ற தாமோதரனிடம், " விடு தாமோதரா..இதோபாரு கற்பகம்..அரசியல் எதிர்காலத்திலே அரசியல்வாதிங்கக் கிட்ட இருக்கக்கூடாதுன்னுட்டுதான், உன்னைப் போல படிச்சவங்களைக் கட்சிக்குள்ள கொண்டு வரேன்" என்றான் மயில்வாகனன்.

"அரசியல், அரசியல்வாதிங்கக் கிட்ட இருந்தா தப்பில்லை.அயோக்கியர்கள் கிட்ட தான் இருக்கக் கூடாது"

அதைக் கேட்டு, அசடு வழிந்த படியே.."நல்லாச் சொன்ன பொண்ணு..தாமோதரா..இப்பதான் இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்ற படியே வில்லத்தனமாக சிரித்தபடியே வெளியே செல்ல, தாமோதரன் அவரைப் பின் தொடர்ந்தான்.

No comments:

Post a Comment