Saturday, November 23, 2019

5 - நீயும் நானும் ஒன்று

பஞ்சாயத்து கலைந்ததும்,பண்ணையார் அர்ச்சகரிடம் வந்து "கோயிலுக்குள்ள வர்றீங்களா? இன்னிக்கு வெத வெதக்கிற நாள்.பஞ்சாயத்து இருந்ததால தாமதம் ஆயிடுச்சு.வந்து..அந்த அம்மனுக்கு ஒரு பூசையைச் செய்துட்டு என்னை அனுப்பிவையுங்க" என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாடசாமி பண்னையாரிடம் "சாமி..நீங்க நல்லாயிருக்கணும்.நம்ம கிராமத்துல பாதிப்பேருக்கு மேல உங்க வயல்கள்தான் சாப்பாடு போடுது" என்றான்.

அதற்கு அர்ச்சகர், "ஆமா..மாடசாமி..பண்ணையார் பரம்பரப் பணக்கராய் இருந்தாலும் அவர் மனசு லேசானது.மனுஷநேயம் மிக்கவர்.ஏழ்மைன்னா என்னன்னு தெரிஞ்சவர்.யார் இல்லைன்னு வந்தாலும் இல்லைன்னு சொல்லாம கொடுக்கறவர்" என்றார்.


பண்ணையார் சற்றே நாணி "என்ன ரொம்ப புகழறீங்க" என்றார்.

அர்ச்சகர் தொடர்ந்தார்."ஆனாலும் உங்கக் கிட்ட எனக்குப் பிடிக்காத குணம் இருக்கே! இன்னமும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு பார்க்கறீங்களே! இன்னமும் காட்டுமிராண்டித் தனமான இரட்டை தம்ளர் முறை நம்ம நாராயணன் கடையிலே இருக்கறதுக்கு உங்களைப் போன்ற ஆட்கள் தானே காரணம்"

"நான் என்ன செய்யறது.என் உடம்புல பரம்பர ரத்தம் ஓடுதே! காலத்துக்கு ஏற்ப நானும் மாறணும்னு பார்க்கறேன்.ஆனா முடியலையே.ஏதோ என்னால முடிஞ்சது..எங்க ஆட்கள் கிட்ட பேசி..அம்மன் பொதுவானவ..அவளை கும்படற உரிமை எல்லாருக்கும் இருக்குன்னு மூக்கன் மாதிரி ஆட்களை கோயில்லுக்குள்ள வர வழைச்சதுதான்"

"ஆனா...அதுக்கும் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கீங்களே!நீங்க சாமி கும்படற நேரத்துல அவங்க வரக்கூடாதுன்னு"

"சரி..சரி..இதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தா பேசிக்கிட்டே இருக்கணும்..முகூர்த்த  நேரத்துக்குள்ள பூசை செய்யணும்" என்றபடியே பண்ணை அர்ச்சகருடன் கோயிலுக்குள் சென்றார்.

"பண்ணை..நான் உங்கக் கிட்ட ஒன்னு கேக்கறேன்..விதை முகூர்த்தம் பாத்து..விதை விதைக்க நல்ல நாளா இன்னிக்கு தேர்ந்தெடுத்து இருக்கீங்க.அதுக்காக பூஜை செய்ய வந்திருக்கீங்க.உங்க வயல்ல விதை விதைக்கப்போறது நீங்களா?"

"இல்லை"

"தண்ணீ பாய்ச்சப்போறது நீங்களா?"

"இல்லை"

"நாத்து நடப்போறது..பயிர் வளர வளர பாதுகாப்புக் கொடுக்கப்போறது..அறுவடை செய்யப் போறது..அறுவடை ஆன  நெல்லை ஆலைக்கு எடுத்துட்டுப் போய் அரிசி ஆக்கப் போறது..இப்படி எதாவது ஒரு வேலையையாவது நீங்க செய்யப் போறீங்களா"

'இல்லை..இல்லை.."

"பின்ன..இந்த வேலையையெல்லாம் செய்யப் போறது யாரு?"

"நம்ம மூக்கன் தான்"

"எரு போடறது,உழறது,விதைக்கறது, அறுக்கறது, கதிரடிக்கிறது இப்படி எல்லாமே செய்யப் போறது மூக்கன் தான். ஆனா, அவனை மட்டும் உங்கக் கூட வித விதக்கற பூஜைல கலந்துக்கக் கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னு சொல்லுங்க! உணமையைச் சொல்லணும்னா.. மூக்கன் போன்ற ஆளுங்கத்தான் உங்களைப் போன்றவங்களுக்கு எஜமானன்.உங்க எஜமானர்கள்தான் உங்களுக்காக உழைக்கறாங்க..விதைக்கறாங்க..அறுவடை செய்யறாங்க".

"அர்ச்சகரே! இது போல பலமுறை நீங்க கேட்டுட்டீங்க! நானும் பலமுறை பதில் சொல்லிட்டேன்.சில விஷயங்களை நம்மால மாத்திக்க முடியறதில்ல.அதுபோலத்தான் இதுவும்னு வைச்சுக்கங்க.."

"இல்ல பண்ணை..கண்டிப்பா ஒருநாள் இந்த நிலை மாறும்..என்ன ஒன்னு..அதுவரைக்கும் அதப்பார்க்க நான் உசுரோட இருக்கணும்"

"உங்க நல்ல மனசுக்கு..நீங்க அமோகமா நூறு வயசுக்கும் மேல வாழ்வீங்க.நல்ல நாளும் அதுவுமா நல்ல விஷயங்கலைப் பேசுவோமே... நீங்க பூஜையை ஆரம்பிங்க"

அர்ச்சகர் பூஜையை ஆரம்பித்து, அம்மனுக்கு கற்பூர ஆரத்தியும் எடுத்தார்.பின் கற்பூரத் தட்டை பண்ணையாரிடம் எடுத்துவர..தீபத்தை கைகளால் ஒத்தி கண்களில் வைத்து வணங்கிய பண்ணை..பின் கண்களை மூடியவாறே இறைவனை மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

"அம்மா..தாயே! இன்னிக்கு வித விதைக்கிறோம்.இந்த வருஷமாவது எந்தவித பாதிப்பும் இல்லாம விளைச்சல் அமோகமா இருக்கணும்"

பின், ஆரத்தித் தட்டைஅம்மன் காலடியில் வைத்துவிட்டு வந்த அர்ச்சகர், "பண்ணை..காலைல எட்டு மணிக்கே வந்துட்டீங்க!ஏதாவது சாப்பிட்டீங்களா? "  என்றார்.

"காலைல எப்பவுமே நீராகாரம்தான்.இன்னிக்கு கோயிலுக்கு வரணும்னு ..எதுவும் சாப்பிடாம சாமி கும்பிட்டா விசேஷம்னு எதுவும் சாப்பிடாம வந்துட்டேன்"

"நம்ம நாராயணனை சுத்தமா தம்ளரைக் கழுவிட்டு  ஒரு டீ போடச்சொல்லி சாப்பிடுங்களேன்!"

"வேண்டாம்..வேண்டாம்..இன்னும் கொஞ்ச நேரத்துல மூக்கன் வருவான்.அவனை டீயைச் சாப்பிட்டுட்டு வயக்காட்டுக்கு வரச் சொல்லுங்க..அவனுக்கு பாவம் இன்னி முழுதும் வேலை இருக்கும்" என்று சொன்னவர், அப்போதுதான் நாரயணனும் தனக்குப் பகக்த்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
"நாராயணா..மூக்கனுக்கு காலைல என்ன இட்லியோ, தோசையோ போட்டிருக்கியோ அதையும்..டீயையும்  கொடுத்துடு என் கணக்குல.அப்பறம் இந்தப் பண்ணைச் சொன்னேனேன்னு டீயை தம்ளர்ல கொடுத்துடப் போற..எப்பவும் போல வட்டில்தான் ஞாபகம் இருக்கட்டும்" என்றார்.

இதைக் கேட்ட ,அர்ச்சகர் சிரிக்க "என்ன  சிரிக்கறீங்க" என்றார் பண்ணை.

"ஒன்னுமில்ல..ஒரு பழமொழி ஞாபகம் வந்தது..சொன்னா...தப்பா நெனச்சுக்கக் கூடாது"

"அர்ச்சகரே..உங்களை நான் தப்பா நெனப்பேனா? சொல்லுங்க"

"புடலங்காயைக் கூட கல்லைக் கட்டி விட்டால் நேராக விளையுமாம்"

"எனக்குப் புரியுது.நீங்க எதையோ சொல்ல வந்துட்டு..எதையோ சொல்லிட்டீங்கன்னு.சரி..சரி..வெதநெல்லு வண்டி களத்து மேட்டுக்குப் போயிருக்கும்..நான் வரேன்.."

பண்ணையார் போனதும்..அதுவரை கோயிலின் உள்புறம் ஒளிந்து கொண்டிருந்த மூக்கன் வெளியே வந்தான்.அவனைப் பார்த்த அர்ச்சகர், ":மூக்கா..சீக்கிரம் அம்மன் குங்குமத்தை வாங்கிக்கிட்டு களத்துமேட்டுக்கு ஓடு..பண்ணையார் காத்துக்கிட்டு இருப்பார்" என்றார்.

மூக்கன் , அர்ச்சகரைப் பார்த்து, "சாமி,இன்னிக்கு பண்ணையார் நிலத்துல விதைக்கப் போறோம்.விளைச்சல் அமோகமாய் இருக்கணும்" என வேண்டினான்.

"அதை என் என்கிட்ட சொல்ற..அந்த ஆண்டவன் கிட்ட சொல்லு"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கதான் எனக்கு சாமி"

"மூக்கா ,என்ன சொல்ற?"

"நீங்கதானே சொல்லியிருக்கீங்க..யார் மனசுல அன்பு இருக்கோ..அவங்கதான் சாமின்னு.யார் மனசுல கருணை இருக்கோ அவங்கதான் சாமின்னு.."

மூக்கன் வார்த்தைகளைக் கெட்டு, அர்ச்சகர் அவனிடம் வந்து தட்டிக் கொடுத்தார்.

அவரது செயலால் அதிர்ச்சி அடைந்த மூக்கன் "ஐயா.." என்றான்.

"என்ன..உன்னை நான் தொட்டுட்டேனா? ஏன்..நான் உன்னைத் தொடக்கூடாதா? நீயும், நானும் சமம்.எங்களுக்கு ஊருக்குப் புறம்பா அக்ரஹாரம் உண்டு.உங்களுக்கு ஊருக்குப் புறம்பா சேரி.நீங்க இருக்கற இடத்துக்கு நாங்க வரக்கூடாது.நாங்க இருக்கற இடத்துக்கு நீங்க வரக்கூடாது.சுப, அசுப காரியங்களை  பறை கொட்டி நீங்க அறிவிப்பீங்க.நாங்க அதை நடத்தி வைப்போம்.எங்களுக்கு பூணூல் உண்டு.உங்களிலும் ஒரு சாராருக்குப் பூணூல் உண்டு.மடிசார் கட்டறேன்னு எங்க பொண்கள்..புடவைத் தலைப்பை வலது பக்கம் போடுவாங்க,உங்களைச் சேர்ந்த பொண்களுக்கும் வலப்பக்கம் தலைப்பு.
நான் உன்னை தாராளமாய்த் தொடலாம்..சரி..நேரமாச்சு, பண்ணை வயக்காட்டுல காத்துக்கிட்டு இருப்பார்.நீ போய் டீயைச் சாப்பிட்டு கிளம்பு" என்றார் அர்ச்சகர்.

மூக்கனும்..அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டு, டீக்கடையை நோக்கிச் சென்றான்.   

No comments:

Post a Comment