Wednesday, December 14, 2022

நளவெண்பா

 நளன் கதையை யார் கூறியது? ஏன் கூறப்பட்டது?  என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 

தருமன் நேர்மை தவறாதவன்; தவறு செய்யாதவன்; அத்தகையவன் சூது ஆடினான்; அதனால் விளைந்த விளைவு நாட்டை இழந்தான்; காட்டை அடைந்தான்; இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இது பாரதக் கதை.

காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்; விராட நகரில் ஒர் ஆண்டு மறைந்து வாழ்ந்தான். பின்பு வெளிப்பட்டான்.

பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலும், ஒர் ஆண்டு மறைந்தும் வாழ்ந்து பின் நாடு கேட்டனர்; தருகிறோம் என்று கூறிய துரியோதனன் வார்த்தை தவறிவிட்டான்.

அடுத்து போர் தொடுப்பதே நேர்வழி என்று தம்பியர் உரைத்தனர். கண்ணன் உடனிருந்து அவர்கள் கருத்துரைகளைக் கேட்டான்; பாஞ்சாலியும் தான் விரித்த கூந்தலை முடிக்க வேண்டும் என்று துடி துடித்தாள்; போர் செய்வதே தக்க வழி என்று எடுத்து உரைத்தாள். பீமன் வீரம் பேசினான்; அர்ச்சுனன் காண்டீபம் எடுத்தான்; தருமன் அவர்களை அமைதிப் படுத்தினான்.


எதற்கும் கண்ணனைத் தூது அனுப்பி வைப்பது என்று முடிவு எடுத்தனர்; கண்ணனைத் தூது அனுப்பி வைத்தனர். நாடும் தரமுடியாது; இருக்க வீடும் கிடையாது என்று துரியோதனன் சொன்னான்..

அடுத்துப் போர் செய்வதுதான் வழி என்று அதற்கு வேண்டிய படைகளைத் திரட்டுவதில் பாண்டவர் முனைந்தனர்; 

வியாசர்ஆறுதல் கூற வந்தார். அவரை தருமன் தருமன் வரவேற்றான்.

பின்,தருமன் தன்நிலையை அவருக்கு எடுத்து உரைத்தான். “போருக்கு உரிய செயற்பாடுகள் அனைத்தும்டைபெறுகின்றன; அர்ச்சுனனும் கயிலை சென்று பரமசிவன்பால் அஸ்திரம் பெறச் சென்றுள்ளான். விரைவில் வருவான்” என்று தெரிவித்தான். “எங்களுக்கு ஆற்றல் உள்ளது; நாங்கள் வெல்வோம்” என்று கூறினான்.




மேலும் தருமன் சொன்னான்“நான் செய்த தவறு என்னை வாட்டுகிறது;  நான்ன் சூது ஆடியதால்தானே இந்தத் தீமைகள் வந்து சேர்ந்தன; அரசர்களில் என்னைப் போல் யாராவது இப்படிச் சூது ஆடிக் கேடுகளை விளைவித்துக் கொண்டவர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டான்.

அவனுக்கு ஆறுதல் கூறிய வியாசர் “மன்னர்கள் இருக்கிறார்கள்; சூதாடுவது கேடு தருவதுதான்; என்றாலும் அதனை மேற்கொண்டு அழிந்தவர்கள் உனக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள். நீ செய்தது புதிது அன்று; வருந்தாதே” என்று கூறினார்.

மேலும் அவனுக்கு ஆறுதல் கூற நளன் கதையைக் கூறத் தொடங்கினார்.கலியால் விளைந்த கதை இது; நளன் என்பவன் உன்னைப் போல் நாடு இழந்தான்; இந்தக் கேடுகள் நிகழ்வதற்குக் கலிதான் காரணம். விதி வலிமையுடையது; அதனால் ஏற்பட்ட பாதிப்பு இது” என்று கூறினார்.

தருமன் நளன் கதையைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். ‘பாரதம்’ நிகழ்வதற்கு முன் தோன்றிய கதை இது என்று தெரிகிறது.

தருமன், தன் வாழ்வைப் போலவே நளன் கதை அமைந்திருப் பது கண்டு மன ஆறுதல் பெற்றான். 

ஆனால்,நளன் தமயந்தியை வைத்துச் சூதாடவில்லை; தருமன் அவ் வகையில் நெறி பிறழ்ந்து விட்டான் என்றுதான் கூற முடியும்.

மனைவி தன் உடைமை என்ற தவறான கருத்தே தருமனைத் தவறு செய்யத் தூண்டியது. நளன் தன் காதலியை மதித்தான்; அவள் தனக்கு உரியவள்; ஆனால் உடைமையள் அல்லள்; இந்த வேறுபாட்டை அறிந்து அவன் செயல்பட்டான்.

இனி நளன் கதையை வியாசர் கூறத் தொடங்கினார்.

3 - நளனும்..அன்னமும்


 


அந்த அன்னப் பறவையால் ,பசுமையான அந்த சோலை நிறம் மாறி வெண்மை நிறம் பெற்றது என்று சொல்லும்படி அதன் சிறகுகள் வெண்மையாகக் காட்சி தந்தன.

அதன் தாள் நிறத்தால் பொய்கையின் தலம் சிவப்பு பெற்றது.

இது கண்டு..சிலையையொத்த அழகுடன் தன்னை சுற்றி நின்ர பெண்களிடம், "அந்த அன்னப் பறவையை பிடித்து வாஉம்கள்" என்று கூறினான்.

ஒரு மயில் கூட்டமே சென்று அன்னத்தை வளைத்து பிடிப்பது போல இருந்த்து அந்தக் காட்சி.அவர்கள் அன்னத்தை நளன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

தன்னை இவர்கள் ஏன் பிடித்து வந்தார்கள் என அந்த அன்னத்திற்கு விளங்கவில்லை.தன் கூட்டத்தோடு கூடி இருந்து மகிழும் பறவை அது.இப்போது தனித்து விடப்பட்டதால்..சுற்றுமுற்றும் தனது சுற்றமாகிய அன்னப்பறவை ஏதேனும் அங்கு தென்படுகிறதா என்று பார்த்த்து.எதையும் காணாததால் அதன் உடல் அச்சத்தில் நடுங்கியது.

அதைக் கண்டு நளன் அதனிடம் கூறினான்..

"அன்னமே அஞ்சாதே! நான் உன்னை பிடித்து வரச்சொன்னது உன் அழகிய நடையைப் பார்த்துதான்.கவிஞர்கள் மகளிரின் நடைக்கு உன் நடையை ஒப்பிட்டு சொல்வார்கள்.எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது.அழகிய உன் நடை சிறந்ததா அல்லது மாட்சிமை மிக்க மகளிரின் நடை சிறந்ததா? என ஒப்பிட்டு காணவே பிடித்து வரச் சொன்னேன்.இதில் தவறேதும் இல்லை" என்றான்.

அன்னத்தின் அருகே,அதனை பிடித்து வந்திருந்த அழகான பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.அந்த அழகி பார்ப்பதற்கு திருமகள் போல இருந்தாள்.அவள் அருகில் நிற்க, அன்னத்திற்கு அந்த சூழ்நிலை மகிழ்ச்சியினை அளித்தது.

நளன் மகளிர்பால் நாட்டம் உடையவன் என்பதை அறிந்த்து.காதல் செய்யும் காளை அவன் என அறிந்தது.தவிர்த்து,அவன் இரக்கம் உள்ளவன் என்பதனையும் அறிந்தது.

"தண்ணனியாள்" (தண்மையான இரக்கத்தினை கொண்டுள்ளவன்)என அவனைப்  பற்றி முடிவு செய்த்து.அவனுக்கு ஏற்றவள் யார்? என யோசித்தது.

அதற்கு தமயந்தியின் நினைவு வந்த்து.அவளது அழகிய நடை..அவனைக் கவரும் என முடிவு செய்தது.மூங்கில் போன்ற தோள்களை உயையவள் அவள்.அவள் தோள்களை தழுவுவதற்கு ஏற்றவன் அவன் என முடிவு செய்தது.

"புகழ்மிக்க அரசனே! உனது பருத்த தோள்களுக்கு ஏற்றவள்.சிறுத்த நெற்றியினை உடைய தமயந்தி என்பவள் இருக்கிறாள்.அவள்தான் உனக்கு ஏற்றவள்" என்றது.

காதல் விருப்பு அவனுக்கு எழுந்த்து.அன்னத்தின் சொற்கள் அவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.வேட்கையைத் தூண்டின.அவளை, அவன் தன் இதயத்தில் இருத்தினான்.கன்னி அவள் அவனது மனக்கோயிலில் இடம் பெற்றாள்.

மன்மதன் ஆவலைத் தூண்டிவிட தன் மனதை அடக்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.


மயிலே  வந்து நடனமாடுவது போல அவளை,அவன்..அதன் சொற்களில் கண்டான்.தமயந்தியின் மென்மையான சாயல் அவனைக் கவர்ந்த்து."மயில் அணையாள்..யார் மகள் அவள்?"என ஆர்வத்துடன் கேட்டான்.

அவள் அரசர் மகளா? தெய்வ மகளா? என ஐயம் ஏற்பட்டது.

அரசர் மகள் என்றால்..அவள் தந்தை யார்?நாடு எது? என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது.ஊர்,பெயர் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என ஆவல் கொண்டான்.

"விதர்ப்பன் மகள்" என அன்னம் சொன்னது.

பேரரசன் மகள் அவள் என்பதை அறிந்து கோண்டான்.

ஆனால் அவளை அடைவது எப்படி?  

நளவெண்பா - சுயம்வர காண்டம்

(புகழேந்தி புலவர் பாடிய பாடல்களின் பொருளையே பெரும்பாலும் எடுத்து எழுதியுள்ளேன்)  

நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனைப் பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டுப் பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை.

சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், 427 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 7 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 171 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 94 வெண்பாக்களும் (7+171+155+94= 427) உள்ளன.

2 - நிடத நாடு

-----------------------

நிடதநாடு..

நளன் ஆண்ட நாடு.

அதன் நீர்வளம்,நிலவளம், அதனைச் செல்வம் மிக்க நாடாக ஆக்கின.

கண்களைக் கவரும் பொய்கைகள்.அவற்றில் வண்ண வண்ண மலர்கள்.அந்த நிர்நிலைகளுக்கு அழகினைத் தந்தன.

வயல்களில்...பயிர் வளர்ச்சிக்கு தேங்கி இருந்த தண்ணீரில் கயல் மீன்கள் அழகாக நீந்தின.குவளை மலர்கள் பூத்துக் கிடந்தன.

கயல் மீன்களும்,குவளை மலர்ச்சியும்,தாமரை நெகிழ்ச்சியும் திருமகளின் கண்களை நினைவூட்டின.

நிடத நாடும் நிலமடந்தையின் கண்கள் போல தோற்றம் அளித்தது.

இந்த நாட்டின் தலைநகரம் மாவிந்தம் ஆகும்.

இந்நகர் செல்வம் மிக்க நகராக விளங்கியது.

மகளிர் தங்கள் நறுமண உடலுக்கு அப்பிய கலவைச் சாந்து..உலர்ந்து குப்பையாய் தெருவினை நிரப்பியது.யானைகள் அக்குப்பைக் கலவைச் சாந்தில் கால் வழுக்கி விழுந்து..தெருவை சேறாக்கியன.

அவ்வூர் மகளிர்,அவர்கள் கூந்தலுக்கு ஊட்டிய அகில் புகை வான் மேகத்தைக் கவர்ந்து,அது பொழியும் மழைநீருக்கு மணத்தை அளித்தது.அதனால் அவ்வூரில் பெய்யும் மழைநீரிலும் அகில் மணம் வீசியது.

அவ்வூர் மக்கள் கல்வியும்,ஞானமும் மிக்கவராகத் திகழ்ந்தனர்.அவ்வூர் மாணவர்கள் கல்வி பயில சிறந்த கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன.பல்கலைக்கழகங்களில் புலவர்கள் நூல்களை ஆராய்ந்தனர்.கவிஞர்கள் கவிதை இயற்றினர்,அரங்கேற்றங்கள் பல நடந்தன.

ஆடல்,பாடல் மகளிர் மேடைகளில் காட்சி அளித்தனர்.அவர்கள் இடை கவர்ச்சி தந்த்து.கண்புலனுக்கு அறியாத அழகைப் பெற்றிருந்தது இடை.

எங்கும் இசை முழங்க முத்தமிழ் வளர்த்த வித்தகர்கள் கலையையும்,ஞானத்தையும் வளர்த்தனர்.அறிவு மிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் மக்கள் கவலையின்றி இருந்தனர்.

ஒழுக்கத்தை உயிரினும் மேலாக அவர்கள் எண்ணினர்.சோர்வும், சோம்பலும் அற்றவர்களாக இருந்தனர்.ஆண்மை மிக்கவர்களாக ஆண்கள் திகழ்ந்தனர்.விற்பயிற்சியும்,படைக்கலப் பயிற்சியும் அவர்களை சிறந்த வீரர்கள் ஆக்கின.

புறமுதுகிட்டு ஓடாத படையை உடையவன் நளன் என்ற புகழுக்கு காரணமாய்த் திகழ்ந்தான் நளன்.

வறுமை இல்லை.அதனால் திருட்டு இல்லை.

இரத்தல் இழிவு என வாழ்ந்தனர்..உழைத்தனர்..உயர்வு அடைந்தனர்.மக்கள் அழுது அரற்றியது இல்லை.கலக்கம் என்பதே இல்லை.

சோர்வு,கலக்கம்,அரற்றுதல் என்பதைக் காண வேண்டும் என்றால்..

மகளிர் கூந்தலில் சோர்வு காண முடிந்தது.

கலக்கம் என்பது நீர் குடைந்தாடும் குளங்களில் காண முடிந்த்து.

அரற்றுதல் என்பது மகளிர் கால் சிலம்பால் மட்டுமே கேட்க முடிந்த்து.

வளைவு என்பதை வில்லில் கண்டனர்.மக்கள் செயலில் காணவில்லை.

இத்தகைய வளம் மிக்க நகரில் எங்கும் சோலைகள் நிரம்பி வழிந்தன.சேலை கட்டிய மகளிர் சோலைகளில் பூப்பறித்து மகிழ்ந்தனர்.புனல் விளையாடினர்.மகிழ்ச்சியுடன் விளங்கினர்.

இளவேனிற் பருவம் வந்தது. 

மன்மதன்,தனது கரும்பு வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத்தான்.தென்றல் வீசியது.அது சோலைகளில் இருந்த பூக்களின் வாசத்தை தெருக்களில் வீசியது.சுகமான காற்று இளைஞர்களின் காம விருப்பத்தை தூண்டின.

பூக்களில் தேனினை நாடி வண்டுகள் சென்றன.

நளன் சோலைகளில் பூவினை நாடி சென்றான்.

அவனுடன்,அந்தபுரத்து அழகியர் சிலர் உடன் இருந்தனர்.

கருங்குவளை மலர்களாய் கண்கள் .அம்மகளிர் நளனை சுற்றி இருந்தனர்.நளன் சோலையை அடைந்தான்.

அங்கே..அழகிய அன்னப்பறவை ஒன்று பறந்து வந்த்து. 

Wednesday, January 19, 2022

நாய்வால் - 1 (புதிய தொடர்)

  நாய் வால்..(புதிய தொடர்.. வாரம் ஒரு அத்தியாயம்)


அத்தியாயம் - 1
------------------------------------

சென்னை....அண்ணாநகரில் இருக்கும் அப்பூங்காவில் ஒரு மரத்தடிடில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் அவன்..
அவன்... சேகர்..
தமிழ் வெள்ளித்திரையில்..ஒருநாள் பிரபல இயக்குநராக முடியும் என்ற நம்பிக்கையில்..விருகம்பாக்கத்தில் உள்ள மேன்ஷன் ஒன்றில் உதவி இயக்குநர்கள் இருவருடன் தங்கியுள்ளான். விவசாயியான அவன் தந்தையிடமிருந்து மாதம் அவன் செலவிற்கு பணம் வந்து கொண்டிருந்தது..
அவன் முன்னே..
பரட்டைத் தலை..கிழ்ந்த ஒரு கோட்டு அணிந்து..அழுக்கேறிய கால் சட்டையுடன் ஒரு முதியவன் கையேந்தினான்..
"தம்பி..ஏதாவது தர்மம் பண்ணுங்க..சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு.ரொம்ப பசிக்குது.."
அந்த குரல்..அந்த குரல்..
அடுத்த வினாடி அவனை ஏறிட்டான் சேகர்..
அந்தப் பிச்சைக்காரன் அவன் கண்களுக்கு முண்டாசுக் கவி போல தெரிந்தான்..ரௌத்திரம் மேலிட..மீசைத் துடிக்க.."சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்..வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞசம்" என கர்ஜிப்பது போல இருந்தது.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

இவனிடமிருந்து நமக்கு ஏதும் தர்மம் கிடைக்காது என நினைத்து..நகர்ந்தான் பிச்சைக்காரன்.

"நில்லுங்க.." என குரல் கொடுத்த சேகர்.."நீங்க யார்? உங்கக் குரல் எனக்கு ரொம்ப பரிச்சியமாய் இருக்கு"..

முதியவர் பதில் ஏதும் கூறாது நிற்க, சேகர் தொடர்ந்தான்.."நீங்க பிச்சை எடுப்பவர் இல்ல.அந்தநாட்கள்ல திரையுலகைக் கலக்கிக் கிட்டு இருந்த நாடகக் கோமகன் ராஜசிம்ம்மன் நீங்க.."

அவசர..அவசரமாக முதியவர் மறுத்தார்.."இல்ல..இல்ல..நீ நினைக்கிற ஆள் நான் இல்ல"

"ஐய்யா..இன்னிக்கு நான் ஒரு உதவி இயக்குநர்.பல பிரபல இயக்குநர்கள் கிட்ட வேலை செஞ்சு இருக்கேன்.அந்த நாட்களில்..ஏன்..இன்னமும் கூட நான் உங்கள் ரசிகன்.ரசிகர்களை நடிகர்கள் என்றுமே ஏமாற்ற முடியாது..பல ஆண்டுகளுக்கு முன் பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் நீங்கள்.."

பிச்சைக்கார முதியவர் சிரித்தார்...தம்பி...வாழ்க்கையிலேயே நிலை இல்லாதவை எது எதுன்னு தெரியுமா?

இளமை...செல்வம்..ஆயுள்..

எனக்கு இளமை போயிடுச்சு.

செல்வம் நிறைய சம்பாதித்தேன்.சம்பாதித்த வேகத்திலேயே..அனைத்தும் என்னை விட்டுப் போயிடுச்சு.ஆனா...

ஆயுள்..

அதை மட்டும் அந்த ஆண்டவன் எனக்கு அதிகமா போட்டு இருக்கான் போல இருக்கு."

"எது எப்படியோ..உங்களை அறியாம..நீங்க தான் ராஜசிம்மன்னு ஒத்துக்கிட்டீங்க.ஏய்யா..ஏய்யா..உங்களுக்கு இப்படி ஒரு நெலமை" கேட்கும் போதே சேகரின் குரல் தழுதழுத்தது.

"ம்...ம் ,..ஹ..ஹ..ஹா.."என தனக்கே உரித்த பாணியில் சிரித்த ராஜசிம்மன், "என்ன..என்னை மடக்கிட்டதா எண்ணமா?..தம்பி..ஒரு விதத்திலே என்னை நினச்சா..என் தொழிலை நினைச்சாஎனக்கே பெருமையா இருக்கு...."
..
"எந்தத் தொழில்...இப்படி கையை நீட்டி பிச்சை எடுக்கறதா?"

"விளையாடாதே தம்பி..நடிப்புத் தொழிலைச் சொல்றேன்.நான் நடிப்பிலே எவ்வளவு திறமையைக் காட்டியிருந்தா..இண்டஸ்ட்ரீயை விட்டு இவ்வளவு வருஷங்கள் ஆகியும்..என்னை நீ ஞாபகம் வைச்சுக்கிட்டு இருக்க்கியே..அதைச் சொல்றேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா..."

"நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னமும் பதில் சொல்லலையே!"

"எது..எனக்கு ஏன் இப்படி ஒரு நெலமை வந்துதுன்னா..சொல்றேன்..

வாழ்க்கையிலே தோற்றுப் போனவங்க இரண்டு வகை.ஒண்ணு..யார் பேச்சையும் கேட்காதவங்க..இரண்டு எல்லார் பேச்சையும் கேட்கறவங்க..என் வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நான் இரண்டையுமே செஞ்சிருக்கேன்.

தம்பி ஒன்னு தெரியுமா?

Everyman has 3 lives
A public life...என்னோட பொது வாழ்க்கை ரொம்ப சக்ஸஸ்ஃபுல்.நான் நடிக்காத பாத்திரங்கள் இல்லை.நான் வாங்காத பட்டங்கள் இல்லை.சம்பாதிக்காத பணம் இல்லை.லட்சக் கணக்குல்...லட்சக்கணக்குல சம்பாதித்தேன்.

இரண்டாவது...Private Life..

இந்த லைஃப்தான்..நான் என்னோட மனைவி..இரண்டு மகன்கள். இந்த லைஃப்ஃபும் எனக்கு ஓகேதான்.என் மனைவி இருந்தாளே..சும்மா சொல்லக் கூடாது..எனக்கு இறைவன் கொடுத்த வரம் அவ.அவ உயிரோட இருந்த வரைக்கும் அது எனக்குத் தெரியல.வாழ்க்கையில நான் செஞ்ச முட்டாள்தனத்தால..இந்த லைஃப் எனக்கு தோல்வி.

மூன்றாவது..secreat Life ..அது..இதுதான்." என்றபடியே பிச்சை எடுப்பது போல கைகளை நீட்டுகின்றார்."இதுவரைக்கும் என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு இருந்தேன்.ஆனா..இன்னிக்கு நீ கண்டு பிடிச்சுட்ட.."

"ஐயா..நான் உங்களோட பல்லாயிரக்கணக்கான...வெறித்தனமான ரசிகர்களில் ஒருவன்.ரசிகர்களை கலைஞர்கள் சுலபமாக ஏமாற்றிடலாம்னு நினைக்கறது தப்பு.அவர்களால் அப்படி ஏமாற்ற முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்..அவங்க முன்னேற ஒரு ஆதர்ஸ நாயகன் இருப்பாங்க.அது பெரும்பாலும்..நடிகர்களாகத்தான் இருக்கும்..."

"அது சும்மா...தம்பி.இப்பவெல்லாம் சினிமா பார்த்து வாழ்க்கையை பாழாக்கிக் கிட்டவங்கதான் அதிகம்.எல்லாப் படங்களிலும் வன்முறை, சாதியம், ஆபாசம்னு பெருகிப் போச்சு" என்றபடியே..ராஜசிம்மன்..தன் வயிற்றினைத் தடவியவாறு.."தம்பி..."என இழுத்தார்.

"என்னோட வாங்க..உங்களை உட்கார வைச்சு சாப்பாடு போட்டு உங்களை கடைசிவரைக்கும் காப்பாத்தறேன்"

"இல்லப்பா..நான் யாருக்கும் எப்போதும் பாரமா இருக்கறதை விரும்பாதவன்.இப்படி நான் சொல்றதால..நீ எனக்கு இப்ப சாப்பாடு வாங்கித்தரல்லேனாலும் பரவாயில்லை..நான் வரேன்" அவர்..அவனைவிட்டு சற்று நகர..எழுந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் சேகர்.

"ஐயா..இப்ப நீங்க என் கூட வர்றீங்க..உங்களைப் பத்தி இனிமே நான் எட்துவும் கேட்க மாட்டேன்.உங்களுக்கு என்னிக்கு என் மீது நம்பிக்கை வருதோ..அன்னிக்குச் சொல்லலாம்.நீங்க விரும்பற நாள்வரை என் கூட இருக்கலாம்.."

"அப்ப..இனிமே என்னைப் பற்றி நீ எதுவும் கேட்கக் கூடாது..சரியா.."என்றவரிடம்.."கண்டிப்பாக மாட்டேன்" என்றான் சேகர்.

"தம்பி..பசிக்குதுப்பா.."என்றவரை அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் சேகர்.

(தொடரும்)