Friday, November 8, 2019

3- அரசியல்வாதி மயில்வாஹணன்

அன்று நான்கு கற்கள் தொலைவில் உள்ள அடுத்த கிராமத்திற்கு மாடசாமியின் வண்டியில் மாலை ஐந்து மணிக்குக் கிளம்பிய தாமோதரன் திரும்பியபோது மணி பத்தைத் தாண்டிவிட்டது.

தாமோதரன், பூங்குளத்தில் எல்லோராலும் பாராட்டப்படும் விவசாயி எனலாம்.தனது நான்கு ஏக்கர் நிலத்தை..தரிசு நிலத்தை மூதாதையர் உழைத்து விளைநிலங்களாக ஆக்கி வைத்திருந்தனர்.இப்போது அந்த வேலை முழுவதையும்..அதாவது உழுவது,விதைப்பது,நாற்று நடுவது, ,களை எடுப்பது,அறுவடை செய்வது என அனைத்து வேலைகளையையும் அவனே செய்து வந்தான்.

வண்டியிலிருந்து இறங்கி, மாடசாமிக்கு விடை கொடுத்து விட்டு..வீட்டினுள் நுழைந்து முகம், கைகால்கள் கழுவிவிட்டு வீட்டினுள் சென்றான்.

தூரத்திலேயே வண்டி வரும் ஒலி கேட்டதால், அவன் மனைவி செங்கமலம்..முன் கதவினை திறந்து வைத்திருந்தாள்.

"செங்கமலம், கற்பகம் தூங்கியாச்சா?" என்றான் மனைவியிடம்.

"இவ்வளவு நேரம்..ஏதோ படிச்சுக்கிட்டு இருந்தது.நீங்க வந்ததும் தூங்கப் போறேன்னு சொல்லிச்சு.மணி பத்து ஆகிப்போச்சா...படிக்கும் போதே தூங்கித் தூங்கி விழ ஆரம்பிச்சுடுத்து கழுதை.அதான் நான் தான், "போய் படுத்துக்க"ன்னு சொல்லிட்டேன்.காலைல அப்பாவைப் பார்த்துக்கலாம்னுட்டேன்"

கற்பகம், அவர்களது ஒரே மகள்.சிறுவயது முதலே நன்றாகப் படிக்கும் குழந்தை.ஆரம்பப் பள்ளிப் படிப்பினை பூங்குளத்தில் படித்திருந்தாள்.பின், அடுத்துள்ள டவுனில் பள்ளிப் படிப்பினை முடித்தாள்.அவளது லட்சியமே ஒரு மருத்துவராக வேண்டும் என்பது.அதற்கேற்றாற் போல பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், தஞ்சை மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது.கிட்டத்தட்ட இருபது கல் தொலைவு என்பதால், தஞ்சையிலேயே கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தாள்.சேர்ந்தாற்போல விடுமுறை வந்ததால் இப்போது அங்கு வந்திருக்கிறாள்.

ஒரு சமயம் ,தாமோதரனின் நல்ல காலமோ அல்லது கெட்ட நேரமோ...பக்கத்து கிராமத்திற்கு அவன் சென்றிருந்த போது..அங்கு ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த இளைஞன் ஒருவன்
..தாமோதரனுக்குத் தெரிந்தவன்.அவன் அன்று கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த மு ஆ மு க கட்சித் தலைவன் மயில்வாகனனுக்கு தாமோதரனை அறிமுகப்படுத்தி..அவர் காதுகளில் "இவன் தலித்" என்று கூறினான்.

இது போதாதா அரசியல்வாதிகளுக்கு..இதைக் கேட்டதும் அந்த அரசியல் தலைவன் தாமோதரனிடம், "ஏன்யா..உங்கக் கிராமத்துல எந்தக் கட்சியும் வரக்கூடாதுன்னு சட்டம் வைச்சு இருக்கீங்களாமே..! மக்களை கிணத்துத்தவளையாகவே வைச்சு இருக்கீங்க.என் கட்சியில சேரு..பூங்குளத்துல நம்ம கட்சிக்கு ஆளுங்களை சேரு.உன்னை, பூங்குளத்து கிளைக்கு  தலைவனாக ஆக்கிகிறேன்.அப்புறம் உள்ளாட்சித் தேர்தல் வரும்போது உன்னை தலைவனாக ஆக்கிடறேன்" என ஆசை தூபம் போட்டான்.

பணக்காரர்களுக்கும், நடிகர்களுக்கும் மட்டும்தான் அரசியல் ஆசை வரவேண்டுமா என்ன....தாமோதரனுக்கும் வந்தது.

அந்தத் தலைவனை தன் தலைவனாக ஏற்றான்.அவன் சொன்னது அனைத்தும் வேதவாக்கானது.

இரண்டு நாட்களுக்கு முன்.தனது பூங்குளம் கிராமக் கோயிலுக்கு அருகில் இருந்த டீக்கடை அருகில் கொடிக்கம்பத்தை நட்டு  அக்கட்சியின் கொடியினை ஏற்றினான்.

அந்தத் தலைவனுக்காக தன் உயிரினையும் கொடுக்கும் அளவிற்கு அரசியல் பித்துப் பிடிக்க ஆரம்பித்தது அவனுக்கு.

"என்ன..இலையில சோறை வைச்சுக்கிணு ரோசனை?" என்றாள் செங்கமலம்.

இதுவரை கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்தவன் தன் நிலைக்கு வந்தான்.

"செங்கமலம்..நம்ம வீட்டுக்கு தலைவர் நாளை வரேன்னிருக்கார்"

அவன் ,என்ன சொல்ல வருகிறான் என அறியாமல்  ஏறிட்டாள் அவள்.

"செங்கமலம்..தலைவர் மயில்வாகனன் இன்னிக்கு பக்கத்து கிராமத்துல இருக்கார்.நாளை காலைல நம்ம வூட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கார்.அவர் வந்து..நம்ம வூட்ல  சாப்பிடுவார்னு நெனக்கிறேன்.என்ன பார்க்கறே! தடபுடலா ஏதும் வேணாம்..நீராகாரம்னாக்கூட என் தலைவன் சாப்பிடுவார்.ஏழை,பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு என் தலைவன் பார்க்க மாட்டார்."என்றான்.

செங்கமலம் ஐந்தாவது வரை படித்திருந்ததாலும்,அரசியல் பற்றிஅவ்வப்போது கற்பகம் சொல்வதைக் கேட்டிருந்ததாலும்..அரசியல்வாதிகளைப் பற்றிய நல்ல எண்ணம் அவளுக்கு ஏற்பட்டதில்லை.அதற்கேற்றாற் போல பூங்குளத்தில் எந்த அரசியல் கட்சியும் உள்ளே வராமல் இருந்தது அவளுக்கு  நிம்மதியைக் கொடுத்தது இதுவரை.

"என்ன செங்கமலம்..என்ன பார்க்கறே?"

"அது எப்படிங்க?  உங்களப்போல அரசியல் பைத்தியங்கள்  அவங்க தலைவருங்க போடற வெளி வேஷத்தை நம்பறீங்க?
நம்ம வூட்ல சாப்படறாப்போல பேர் பண்ணிட்டு..வெளில போய் விரலை வாய்ல விட்டு வாந்தி எடுப்பார்ங்க"

"என்னோட தலைவன் கண்டிப்பா அப்படி செய்ய மாட்டான்.இதோ பாரும்மா என் தலைவனை நான் உசுருக்கு உசுரா நேசிக்கிறேன்.நாளைக்கு எனக்காக உம் புருஷனுக்காக தலைவரு சாப்படறதுக்கு ஏதாவது செய்ம்மா"

"உங்களை திருந்த முடியாது.இப்போ சாப்டு படுங்க" என ,அப்பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் செங்கமலம். 

No comments:

Post a Comment