Tuesday, November 12, 2019

4 - பஞ்சாயத்துக் கூடியது

திடீரென தேர்முட்டி அருகில் நாராயணன் டீக்கடை அருகில் ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் நடப்பட்டு கொடி பறக்க விட்டிருப்பதைக் கண்ட கவுண்டரும்,பண்ணையாரும் வியந்தனர்.

கட்சிகள் எதுவும் கிராமத்தினுள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் ,ஊரே உறுதியாய் இருக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு எப்படி நடந்திருக்க முடியும் என எண்ணினர்.

இதற்குக் காரணம் யாராயிருக்கக் கூடும் என நீண்ட நேரம் அர்ச்சகருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

"பொறுங்கள்...எப்படியும் இன்னும் ஓரிரு தினங்களில் ,இதற்கு ஒரு தீர்வு வந்துவிடும்" என்றார் அர்ச்சகர்.

"ஒருவேளை, இது நம்ம ராமனோட வேலையாய் இருக்குமோ?" என்றார் பண்ணையார்.

இச்சமயத்தில் பண்ணையார் சொன்ன ராமனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கிரமாத்தைப் பொறுத்தவரை வெளிஉலகில் நடக்கும் நடப்புகளை, பக்கத்து கிராமத்திற்குச் சென்று, பத்திரிகை வாங்கிப் படித்துத் தெரிந்து கொண்டு வருபவன் ராமன்.ஓரளவு விஷயம் அறிந்தவன்.ஆனால் என்ன ஒன்று, சற்று வாய்ச்சவடால் பேர்வழி.உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்..தில்லானா மோகனாம்பாளில் வரும் வைத்தி நாகேஷ் போல எனலாம்.இவன்பிராமண துவேஷி வேறு.

"கண்டிப்பாக ராமன் இதை செய்திருக்க மாட்டான்.வாய்ச்சவடால்காரன்தான் அவன்.ஆனாலும் நம்மை மதிப்பவன்,.எந்தக்கட்சியின் பிடியிலும் நம் கிராமம் மாட்டிக் கொன்டுவிடக்கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் உண்டு.அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டவன் என்ற விதத்தில் சொல்கிறேன்..கண்டிப்பாக இதற்கு ராமன் காரணமாய் இருக்க மாட்டான்"என்றார் அர்ச்சகர்.

அவருக்கு யாரையும் குறைசொல்லிப் பழக்கம் இல்லை.எல்லோற்றும் அவர் கண்களுக்கு நல்லவராகவேத் தெரிந்தார்கள்.

அர்ச்சகர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்த பண்ணையாரும், கவுண்டரும், இது சம்பந்தமாக மௌனம் சாதித்தனர்.

அந்த சமயத்தில் மூக்கன் அங்கு வந்து, "ஐயா..ஒரு சேதி சொல்லணும்" என்றான்.

"என்ன" என்பது போல பண்ணையார் அவனை ஏறிட்டார்.

"நம்ம தாமோதரன் வூட்டுக்கு  அரசியல்வாதி மயில்வாகனனாமே..அவரு வராராம்" என்றான்.

அர்ச்சகர் முகத்தைப் பண்ணையாரும், கவுண்டரும் பார்த்தனர்.

இரவு பத்து மணிக்கு மேல் தாமோதரன் தன் மனைவி செங்கமலத்திடம் சொன்ன செய்தியை மூக்கனிடம் விடியலில் செங்கமலம் சொல்லியிருக்கக் கூடும்.

பண்ணையாரும், கவுண்டரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க,அர்ச்சகர் அம்மனிடம் வந்தார்.நேற்று போட்டிருந்த மாலையை எடுத்துவிட்டு காலையில் கோயில் நந்தவனத்திலிருந்து பறித்துத் தொடுத்திருந்த ரோஜா மாலையை அம்மனுக்கு அணிவித்தார்.அம்மனின் தெய்வீக அழகை ரசித்தபடியே...எண்ணெயைவிட்டு விளக்கேற்றினார்.பின்னர் தீபாரதனை நடந்தது.கோயில் மணியடித்தபடியே.

அப்போது, "அர்ச்சகரே!"என்ற பண்ணையின் குரல் கேட்க, கருவறையிலிருந்து வெளியே வந்தவர் கவுண்டருடன், பண்ணை நிற்பதைப் பார்த்தார்.

"அர்ச்சகரே! காலை பத்து மணிக்கு, மயில்வாகனன் தாமோதரன் வீட்டிற்கு என்ன தைரியம் இருந்தா..நம்ம ஊர் மக்களுக்குக் கூடத் தெரியாமல் வருவான்.உடனே பஞ்சாயத்தைக் கூட்டறோம்.கொஞ்சம் வெளியே வாங்க" என்றார்.

அர்ச்சகர், பண்ணையார், கவுண்டர் மூவரும் கோயிலில் இருந்து வெளியே வந்து, டீக்கடையின் முன்னே தரையில் குந்தி இட்டு உட்கார்ந்து கொண்டிருந்த மூக்கனை அழைத்தனர்.

"இதோ வந்துட்டேங்க.." என்றவாறு, வட்டிலில் இருந்த சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, வட்டிலை பக்கத்தில் வைத்திருந்த வாளித் தண்ணீரால் கழுவி வைத்துவிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான் மூக்கன்.

"இப்பவே..ஊர் முழுக்க பறைகொட்டி நாங்க சொல்றதைச் சொல்லிடு" என அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை பண்ணையார் சொன்னார்.பின்னர். "தாமோதரனைப் பார்த்து எட்டுமணிக்குக் கூடும் பஞ்சாயத்துக்குக் கண்டிப்பாக வரணும்னு சொல்லு:" என்றார்.

மூக்கன் பறை கொட்ட ஆரம்பித்தான்....

"இதனால் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...எந்த அரசியல்கட்சியும் நுழையக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கும் நம் கிராமத்தில், இன்று பத்து மணிக்கு அரசியல்வாதி மயில்வாகனன் வர இருக்கிறார்.தாமோதரன், அவருக்கு தன் வீட்டில் விருந்து வைக்கிறான்.இது நமது கிராமத்து வழக்கத்துக்கு எதிரானது.இதற்காக காலை எட்டு மணிக்கு கோயில் அருகில் உள்ள பஞ்சாயத்து மேடையில் பண்ணையார் தலைமையில் பஞ்சாயத்துக் கூடுகிறது.எல்லோரும் வரணும்.."

டம்..டம்..டம்...

என கிராமத்து தெருக்களில் பறை கொட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட தாமோதரனும், மயில்வாகனன் வரும் செய்தி, இவ்வளவு விரைவில் இவர்களுக்கு எப்படி எட்டியது என வியந்தபடியே...செங்கமலத்திடம் மயில்வாகனனுக்கு விருந்து தயார் செய்ய சொல்லிவிட்டு, பஞ்சாயத்துக்குக் கிளம்பத் தயாரானான்.

எட்டு மணிக்கு பஞ்சாயத்துக் கூடியது...

முதலில் தலைவர் பண்ணையார் பேசினார்..

"அரசியல்வாதி மயில்வாகனன் பத்து மணிக்கு நம்ம தாமோதரன் வீட்டிற்கு வருவதாக பஞ்சாயத்தாருக்கு சேதி வந்துள்ளது.இது, நம்ம கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு எதிரானது.இச்செயலுக்காக தாமோதரனை இப்பஞ்சாயத்து கண்டிப்பதோடு..மயில்வாகனனை கிராமத்தினுள் நுழைய விடக்கூடாது என முடிவு செய்கிறது"

என்றார்.

மக்கள் ஆராவாரத்துடன் கைகளைத் தட்டி இம்முடிவினை வரவேற்றனர்.

ராமன் மட்டும், "ஐயா..பஞ்சாயத்தாரே! நான் ஒன்னு சொல்லட்டா..அந்த மயில்வாகனன் ,நம்ம கிராமத்துல அரசியல் பேச வரலே! தாமோதரன் வீட்டிற்குத்தான் வரார்.அதுவும் அவன் வீட்டிற்கு ஒரு விருந்தாளியாய் வர்றார்.தனிப்பட்ட முறையில் ஒருத்தர் விட்டுக்கு வருபவரைத் தடுக்க முடியுமா? இல்ல..தடுக்கலாமா? "என்றான்.

அதற்குள் கூட்டத்தில் ஒரு இளைஞன் "அப்படியானால் அவர் வந்துவிட்டுப் போகட்டுமே! ஆனால்..வர்றவரோட கட்சி கொடிக்கம்பம் எப்படி வந்தது? அதை வெட்டி எறிவோம்" என்றான்.

அவனை அமைதிப்படுத்திய பண்ணை தாமோதரனைப் பார்த்து, "தாமோதரா! ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு..அதை நீ மீறலாமா?" என்றார்.

மண்டியிட்டு அமர்ந்திருந்த தாமோதரன் எழுந்து..துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு, பஞ்சாயத்தை வணங்கினான்.பின் தொண்டையை சற்று கனைத்துக் கொண்டு  சொன்னான் "ஐயா...நான் இப்ப சொல்றதை பஞ்சாயத்தும், நம்ம கிராமத்து ஜனமும் கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும். நம்ம கிராமத்துக்கும் வெளி உலகத்துக்கும் சரியான தொடர்பு இதுநாள் வரைக்கும் இல்லை.அதனால, நம்ம கிராமத்து மக்கள் எவ்வளவோ இழந்துக் கிட்டு இருக்கோம்.அடுத்த கிராமத்துக்கு போகணும்னாக்கூட..ஐயா பிளஷர் வண்டி வேண்டாம்..மாட்டு வண்டிலே போகணும்னாக் கூட செம்மண் ரோடுதான்.ஊர்ல தெரு விளக்குகள் கூடக் கிடையாது..காவிரில தண்ணீர் வரல்லேன்னா குடிக்கக் கூட தண்ணீருக்கு ஆலாய்ப் பறக்கணும்.இதெல்லாம் தீரணும்னா.. அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்..இன்னிக்கு மயில்வாகனன் நம்ம ஊருக்கு...என் வூட்டுக்கு வரார்னா...எதிர்காலத்துல நம்ம கிராமத்துக்குப் பல நன்மைகள் உண்டாகும்.

நம்ம விவசாயிகள் எல்லாம் கூட்டமா சேர்ந்து சங்கம் அமைக்கலாமாம்.அரசாங்கம் அவர்களுக்கு மானியம் வழங்குகுமாம்.அவர்கள் கடன்கள் எல்லாம் தள்ளுபடியாகுமாம்.நம்ம வாழ்க்கையெல்லாம் செழிப்பாகும்னு அந்தத் தலைவரு மயில்வாகனன் சொன்னார்.

இதெல்லாம் வேண்டாம்னா நாம நம்ம தலைமுறைக்கு மட்டுமில்லை, அடுத்த தலைமுறைக்கே துரோகம் செய்கிறோமாம்.

நான் இதையெல்லாம் ரோசனைப் பண்ணித்தான் அவர் சொன்னாப்போல கொடிக்கம்பத்தை நட்டேன்.அவரை நம்ம கிராமத்துகு அழச்சேன்,

இவ்வளவு சொன்னப்பறமும்..அவர் நம்ம கிராமத்துக்கு வரக்கூடாதுன்னு இந்த பஞ்சாயத்தும், மக்களும் நினைச்சா..அதன் முடிவை எதிர்க்க நான் தயார்.அதற்காக இந்த பஞ்சாயத்து என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏத்துக்கறேன்"

தாமோதரன் பேசுவதைக் கேட்ட பெரும்பான்மையான இளைஞர்கள் கைதட்டி வரவேற்றனர்.அவனுக்கு அதன் மூலம் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த பண்ணையும், கவுண்டரும், அர்ச்சகரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.பின்னர் கவுண்டர் மக்களிடம் பேச ஆரம்பித்தார்.

"இந்தமுறை ஒரு அரசியல்வாதி நம்ம கிராமத்துள்ள வர இந்த பஞ்சாயத்து அனுமதிக்கிறது.அவர் வந்துபோனபின் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து..பின் வரும் காலங்களில் என்ன செய்யலாம் என்று பஞ்சாயத்து பின்னர் முடிவெடுக்கும்.தாமோதரன், மயில்வாகனன் வந்து போன பின்னர் நடந்த விவரங்களை ஒன்றுவிடாமல் நமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது..இப்போது நாம் கலையலாம்" என்றார்.

இளைஞர்களில் வாட்ட சாட்டமாய் இருந்த ஒருவன் தாமோதரனைத் தூக்கி தன் தோள்களில் அமர வைத்துக் கொள்ள ..மற்ற இளைஞர்கள் "தாமோதரன் வாழ்க..தாமோதரன் வாழ்க" என்று கோஷமிட்டபடியே அவனை அவன் வீடுவரை தூக்கிச் சென்றனர்.  

No comments:

Post a Comment