Tuesday, November 5, 2019

1- பூங்குளம்

"இந்த மனிதாத்மாக்களைப் பார் மகாத்மா..உன்னையே உருக்கி நீயொரு சுதந்திர மோதிரம் செய்து கொடுத்தாய்! அணியும்போதுதான் அறிந்து கொண்டார்கள்...இவர்கள்..விரல்களே இல்லாத தொழுநோயாளர்கள் என"
(எப்போதோ எங்கேயோ படித்தது இன்றும் நிதர்சனமாய்)

பூங்குளம்...

காவிரி டெல்டா மாவட்டம் ஒன்றில் உள்ள அழகிய கிராமம்.

பூங்குளம் கிராமத்திற்கான ரயில் நிலையம் ஊரிலிருந்து இரண்டு கல் தொலைவில் இருந்தது.

ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வடக்கே செல்லும் பாசஞ்சர் இரண்டும்...தெற்கே செல்லும் பாசஞ்சர் இரண்டும் மட்டும்தான்.

மற்றபடி "தடக்..தடக்" எனும் சப்தத்துடன்...ஒரு நாளைக்கு நான்கு அலல்து ஐந்து குட்ஸ் வண்டிகள் நிலையத்தைக் கடந்து செல்லும்.விரைந்து நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகள் வண்டிகள், இரட்டை எண்ணிக்கையில் இருக்கக் கூடும்.

ரயில் நிலையத்திற்கு ஸ்டேஷன் மாஸ்டெர் என ஒருவரும், ஒரு போர்ட்டரும் உண்டு.பாசஞ்சர் வண்டி வரும் முன்னால் போர்ட்டர் மணி அடிப்பான்.டங்க்..டங்..என அங்கே மாட்டப்பட்டுள்ள இரும்புத் துண்டில் தொடர்ந்து மணியடித்துவிட்டு..தனியாக இருமுறை அடித்தால் தெற்கே போகும் வண்டியும், மூன்று முறை அடித்தால் வடக்கேபோகும் வண்டியும் வரும் என பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரயில் நிலையத்தின் மேற்கே தென்னந்தோப்பு.அதில் இருநூறுக்கும் மேலான மரங்கள் இருக்கும்.எல்லாவற்றிலும் ஐந்து அடி உயரத்திற்கு வெள்ளைநிற பெயிண்ட் அடித்து..எண் ஒன்றினைப் போட்டிருப்பார்கள்.இரவு நேரத்தில் அத்தோப்பினைப் பார்த்தால், வெள்ளை வேட்டிக் கட்டிய ஒரு சேனையே நிற்பது போல இருக்கும்.

பலவீனமான இதயம் கொண்ட பலர் இருளில் அதைப் பார்த்து பயந்ததும் உண்டு.

அப்பயத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அவர்களுக்குப் பேய்ப்பிடித்திருப்பதாகவும்,,அதை ஓட்டுவதாகவும் கூறி வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.

ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் வண்டி வரும் போது கையிலுள்ள பச்சை நிறக் கொடியினை விரித்து ஆட்டிக் கொண்டிருப்பார்.பெரம்பினால் ஆன ஒரு பெரிய சாவியை வண்டி ஸ்டேஷனுள் நுழைகையில் சங்கரன்...அதுதான் அந்த போர்ட்டரின் பெயர் எஞ்சின் டிரைவரிடம் கொடுக்க, ஓடும் வண்டியிலிருந்து  லாகவமாகப் பெற்றுக் கொள்வார் அவர்.
ஸ்டேஷன் மாஸ்டரின் மற்றொரு கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கு  சிவப்பு நிறக் கொடியை அவர் உபயோகித்து யாரும் பார்த்திருக்க முடியாது.

ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கல்யாண முருங்கை மரங்கள்..செக்கச்செவேல் என்று பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும்.அப்போதுதான் பருவம் அடைந்த கன்னிப்பெண் போல மிதர்ப்புடன் தெரியும்.

கருவேல மரங்களும், முட்செடிகளும் நிறைந்த இடங்களில் ஆடுகள்..இரட்டைக் கால்களில் நின்றபடியே இலைகளைத் தின்றுக் கொண்டிருக்கும்.விவரம் தெரியாதவர்கள், இவைகளின் கால்களில் முட்கள் குத்துமே ! என வேதனைப் படுவார்கள்.

ஆடு மேய்ப்பவர்கள் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் கரியில் கட்டமிட்டு, கல், புளியங்கொட்டை ஆகையவற்றை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆடுவார்கள்.

ரயில்வே நிலையத்தை ஒட்டி வெளியே வந்தால், மாடசாமியின் மாட்டு வண்டி நின்றுக் கொண்டிருக்கும்.ஒருவருக்கு மூன்று ரூபாய் என வாங்கிக் கொண்டு ,நாலு அல்லது ஐந்து நபர்கள் சேர்ந்ததும் கிராமத்தை நோக்கி வண்டியினை ஓட்டுவான் மாடசாமி.இரண்டு கல் தூரம் போக இருபது முதல் முப்பது மணித்துளிகள் ஆகும்.

நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காலி மைதானத்தில் வாரம் புதன், சனிக்கிழமைகளில் சந்தை கூடும்.

கிராமத்தில் விளைந்த காய், கறிகள், புளி, மஞ்சள், ஆடு,மாடுகள் என சந்தை களை கட்டும்.அண்டை கிராமங்களிலிருந்து பொருள்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் என மனிதத்தலைகள் அதிகமாகத் தென்படும் அப்போது.

அந்நாட்களில் மாடசாமியின் வருமானமும் கூடும்.மாடு மெதுவாகப் போனால், ஓடும் வண்டி சக்கரத்தில் இடையில் கையில் உள்ள குச்சியை லேசாகச் சொருகி சப்தத்தை உண்டாக்குவான்.மாடு பயந்து ஓட்டத்தை அதிகரிக்கும்.மாட்டின் வால் ஆரம்பப்பகுதியைத் தொடுவான்.மாடு கூச்சத்துடன் தன் வேகத்தைக் கூட்டும்.

ஊரை நோக்கிச் செல்லும் அந்த செம்மண் சாலையின் இரண்டு பகக்ங்களிலும் பச்சை பசேல் என நெல்வயல்கள் காணப்படும்.

பெண்களின் தலை வகிட்டினை நினைவு படுத்துவது போல நடு நடுவே வரப்புகள் தெரியும்>

சில  வயல்களில் பயிர் முழுதும் வளர்ந்து முற்றி அறுவடைக்குத் தயாராக இன்னும் சில நாளில் பிரிய இருக்கும் அன்னை பூமியை நோக்கியவாறு இருக்கும்.இந்நிலையில் கவிஞன் ஒருவனின் வரிகளும் நம் ஞாபகத்தில் வருவதைத் தடுக்க முடியாது.

"வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல உனக்கு வெட்கமா? தலை வணங்கி சும்மா பார்க்கிறாயே தரையின் பகக்மா?" என.

நடுவே ஒரு பாலம் குறுக்கிடும்.அதில் பொன்னி ஆறு சந்தோஷமாக பொங்கி ஓடிக் கொண்டிருக்கும்.

நதிகளில் அழகே..அழகே!  நகர்ந்து கொண்டே இருப்பதுதான் நதி.அது தன் பாதையில் தயங்கி நிற்பதில்லை.பாறைகளைக் கண்டு பயப்படுவதில்லை.ஓங்கியோ..ஒதுங்கியோ தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பொன்னியின் கரையோரம் இருக்கும் சோலைகளிலிருந்து எங்கேயோ குயில் கூவும்.கிளி பேசும்."கூ..கூ.." என மற்ற பறவைகளின் கூக்குரல்கள் இனிமையாக ஒலிக்கும்.

பொன்னியில் நீர் கரைபுரண்டு ஓடும் போது சிறுவர்கள் பயமென்றால் என்ன என அறியாது பாலத்திலிருந்து நதியில் குதித்து இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு நீந்துவார்கள்.

பாரம் அதிகம் சுமந்து நீண்ட தூரம் வந்த காளையின் வாயில் நுரை தள்ளியிருப்பது போல, ஆற்றின் இரு கரையின் ஓரங்களிலும் நீரின் வேகத்திற்கேற்ப நுரை தள்ளிக் காணப்படும்.கரையோரச் செடிகளிலிருந்து மூலிகை வாசம் மணக்கும்.

ஊர் தொடங்குவதற்கு அரைகல் தொலைவிற்கு முன்னால் சேரி இருக்கும்.

தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்ப்ட்டுள்ள ஒரு பாலார் இன்னமும் அந்த கிராமத்தில் அங்குதான் வசிக்க வேண்டும்.கிராமத்து அவலங்களாக இன்னமும் இது பல இடங்களில் காணப்படுவது வேதனைக்குரிய விஷயமே!

ஊரின் மொத்த ஜனத்தொகையே 5000க்குள்தான்.

முதல் தெருவில் பச்சை வண்ண பெயிண்ட் அடிக்கப்பட்டுக் காணப்படும் பெரிய வீடு கவுண்டர் வீடு. வீட்டிற்கு முன்னால் நெல் உலர்த்த என நீண்ட காலி இடம் இருக்கும்.கவுண்டர் பெரிய மீசை வைத்திருப்பார்.சந்தன வீரப்பன் இவரைப் பார்த்துதான் தன் மீசையும் வளர்த்திருப்பானோ எனத் தோன்றும்.கவுண்டர் பார்க்க பயங்கரமாய்த் தெரிந்தாலும் ,பிறருக்கு உதவிடும் மனம் கொண்டவர்.கிட்டிப்புள், பம்பரம், கோலி என விளையாடிவிட்டு வரும் சிறுவர்களைக் கூப்பிட்டு கை நிறைய வேர்க்கடலையைத் தருவார்.

ஊரின் கடைசித் தெருவில் பாலுச்சாமி தேவர் வீடு.பண்னையார் வீடு என்று கேட்டால் அழுத பிள்ளையும் கை காட்டும்.தலையை தியாகராஜ பாகவதர் போல வளர்த்திருப்பார்.கழுத்தைச் சுற்றி பாம்பு போல சரிகை அங்கவஸ்திரம் மின்னும்.சிரித்தால், இரண்டு, மூன்று தங்கப் பற்கள் மின்னும்.

கிராமத்தின் நடுவே அம்மன் கோயில்.கோயிலை ஒட்டிய சந்நிதித் தெருவில் கோவிலின் தேர் நிலை கொண்டிருக்கும்.

வண்டி ஓட்டிய நேரம் போக, மற்ற நேரங்களில் மாடசாமி தேர் முட்டில்தான் இருப்பான்.பக்கத்தில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு, கவ்னர் பீடி வாங்கிப் பிடிப்பான்.கடையில் நிரந்தர கணக்கு அவனுக்கு.ஆனால் கடைக்கு முன்னால் "இன்று ரொக்கம் நாளை கடன் " என்ற பலகையும் தொங்கும்.சாப்பாடு, தூக்கம் எல்லாம் அவனுக்கு அங்குதான்.அந்த டீக்கடையின் முதலாளி என்பவர்.....நாராயணன்.

அந்த டீக்கடையில் டீ குடிக்க வருபவர்களுக்கு கண்ணாடி தம்ளரில் டீ கொடுக்கப் படும்.ஆனால், தலித் என்றால் வட்டில்தான்.

அந்த ஊர் அம்மன் "ஊர் காத்த அம்மன்" என அழைக்கப்ப்டுபவர்.

ஒரு சமயத்தில் காவிரியில் வெள்ளப் பெருக்கில், ஊரே வெள்ளக் காடானதாம்.மக்கள் எல்லாம் , சிறிய கோயில் என்றாலும் எப்படியோ அதனுள் புகுந்து கொண்டனராம். .கோயிலினுள் சொட்டுத் தண்ணீர்க் கூட புகாமல், அந்த அம்மன் மக்களைக் காத்தாராம்.ஆகவே, அன்று முதல் அவர் "ஊர் காத்த அம்மன்" என அழைக்கப்படுவதாக அவ்வூரில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.

ஊரின் கிழக்குக் கொடியில் அக்ரஹாரம்.அதில் நாலு அல்லது ஐந்து வீடுகள் மட்டுமே.கோயில் குருக்கள் சுந்தரேசன் வீடு அங்குதான்.

சுந்தரேசக் குருக்கள் பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு..காதில் கடுக்கண்..பெண்களைத் தோற்கடிக்கும் அளவிற்கு கட்டுக் குடுமி..நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்திராட்ச மாலை எனக் காணப்படுவார்.முன் தலையினை சரைக்க வாரம் இருமுறை நாவிதன் கோவிந்தன் அவர் இல்லம் செல்வான்.திண்ணையிலேயே அமர்ந்து, வேலை நடக்கும்..

அவர் கையில் ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்து விட்டு ,தன் பணியை மிகவும் நேர்த்தியாய் செய்வான் கோவிந்தன்.

பண்ணையார் அவ்வப்போது அர்ச்சகரின் வாயைக் கிண்டுவதுண்டு..

"ஐயரே! பிராமணன் என்பவன் எப்படிப்பட்டவன்?"

"பிராமணன் என்பவன் மனதால் சுத்தமாக, நடத்தையில் ஒழுக்கமாக இருந்தால் போதும்" என்பார் அர்ச்சகர் சுந்தரேசன்.

இப்படிப்பட்ட வாதத்தையெல்லாம் தாண்டி இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

ஊரில் பலதரப்பட்ட சமூகத்தினர் இருந்த போதும் ஜாதி சச்சரவுகள் இருந்ததில்லை.கோயில் திருவிழாவில் அனைவரும் ஒன்று கூடி கோலாகலமாகக் கொண்டாடுவர்.

ஆனாலும், அந்த நேரத்திலும் தலித்துகள் ஒதுங்கித்தான் நிற்க வேண்டும்.

அன்று..பொழுது விடிந்து , செங்கதிரோன் கிழக்கு வானிலிருந்து வெளிப்பட்டான்.

அக்கோயிலின் கோபுரம் தாங்கும் பொம்மைகளை கதிரவனின் கிரணங்கள்  ஆரத்தழுவிக் கொண்டன.

சுந்தரேசக் குருக்கள், சற்று அசந்து தூங்கி விட்டபடியால், கோயிலைத் திறக்க சற்று தாமதமானதால், வேக வேகமாக தேர்முட்டிவரை வந்து விட்டார்.



No comments:

Post a Comment